(லியோ நிரோஷ தர்ஷன்)
அதிகாரங்கள் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறான எந்தவொரு அதிகாரங்களும் எனக்கு இல்லை. கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஜனாதிபதி பதவியில் இருக்கின்றதாக கருதியே சில ஆணைக்குழுக்கள் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெற்றிலையை கொடுத்து கும்பிட்டுக் கேட்டாலும், தற்போதைக்கு தேர்தல் ஒன்றுக்கு செல்ல மாட்டேன் என ஆளுங்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச தேர்தல்கள் மற்றும் 22ஆவது திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் வார இறுதியில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
ஆளுங்கட்சியின் உறுதியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டதன் பின்னர் இறுதி தீர்மானத்துக்காக ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் என பிரதமர் இதன் போது குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை முன்னெடுக்க நேரத்தை ஒதுக்கித் தருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்புகொண்ட பிரதமர், பேசப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தி ஆளுங்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு குறித்து கோரிக்கை விடுத்தார். உடனடியாக சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமருக்கு ஆலோசனை வழங்கினார்.
உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தினால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும். தற்போதுள்ள பொருளாதார – அரசியல் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு நிறைவேற்று அதிகாரம் அவசியம் என வலியுறுத்திய ஆளுங்கட்சி உறுப்பினர்கள், 22ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுதல் மற்றும் இரட்டை குடியுரிமைகளை கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமை ஆகிய இரு விடயதானங்களுக்கும் ஆளும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
இந்த விடயத்துக்கு நேரடியான தீர்வு எட்டப்பட வேண்டுமாயின், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிகாரங்கள் உள்ளதாக குறிப்பிடுகின்றீர்கள். ஆனால், அவ்வாறான அதிகாரங்கள் எனக்கு இல்லை. சுயாதீன ஆணைக்குழுக்கள் தற்போது இல்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் பதவியில் இருப்பதாக கருதியே சில ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன.
புதிய மக்கள் சபைகளை உருவாக்க உத்தேசித்துள்ளோம். அவற்றை ஸ்தாபிக்க 22ஆவது திருத்தம் முக்கியமாகின்றது. மறுபக்கம் சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கின்றது. அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படாவிடின், மக்கள் சபைகளும் ஸ்தாபிக்க முடியாது என நீண்ட விளக்கத்தை ஜனாதிபதி ரணில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து தேர்தல்கள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளும் தேர்தலை வலியுறுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதிக்கு பின்னரே ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு கிடைக்கும். அதுவரைக்கும் பொதுத்தேர்தலுக்கு சாத்தியமில்லை.
ஊடகங்களுக்கு புரிகின்ற மொழியில் சொல்வதாயின், வெற்றிலையை கொடுத்து கும்பிட்டுக் கேட்டாலும், தற்போதைக்கு தேர்தலொன்றுக்கு செல்ல மாட்டேன் என உறுதிப்பட ஜனாதிபதி ரணில் ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM