(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு, 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (ஒக் 14) கேகாலை மாவட்டத்தில் வரகாப்பொல - தும்பலியத்த பிரதேசத்தில் மாடி வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
அன்றைய தினம் முற்பகல் மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தது. இதன்போது குறித்த வீட்டில் நால்வர் இருந்துள்ளனர். அவர்களில் ஆணொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து குறித்த மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே ஏனைய இருவரது சடலங்களும் நேற்று சனிக்கிழமை (ஒக் 15) முற்பகல் மீட்கப்பட்டன.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 47 வயதுடைய பெண்ணொருவரும், 24 வயதுடைய இளைஞன் ஒருவரும் ஆவர். இவர்கள் தாயும் மகனுமாவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வரகாப்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வரகாப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 12ஆம் திகதி முதல் நேற்று முற்பகல் வரை சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இம்மாவட்டங்களில் 2 வீடுகள் முழுமையாகவும், 117 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 64 குடும்பங்களைச் சேர்ந்த 264 பேர் 4 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய காலநிலை அறிக்கையின் அடிப்படையில், வெப்ப மண்டல குவிப்பு வலயத்தின் தாக்கம் இலங்கையை சூழ்ந்துள்ளதால் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மேல், வட மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் இம்மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.
ஏனைய பகுதிகளில் இரவு அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM