(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி, இப்புதிய பிரேணை தமக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருப்பதாகவும் பூகோள அரசியலுக்கு அமைவாகவே அனைத்து நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை உணர்த்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமானது.
அதில் கலந்துகொள்வதற்காக இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையும் அவர்களுக்கான நீதியையும்கோரி பலவருடங்களாக வட, கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருபவர்கள் சார்பில் ஜெனிவா சென்றிருக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி, அங்கு ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வரவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் அவர், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு தாம் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்ற போதிலும் அவ்விடயம் இப்பிரேரணையில் உள்ளடக்கப்படாமை தமக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
'காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகப்பொறிமுறைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் குறித்து நாம் நீண்டகாலமாக சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்திவந்திருக்கின்றோம்.
இம்முறை கூட்டத்தொடரின்போதும் அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் நான் எமது நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தினேன்.
அதற்கு அவர்கள் காண்பித்த துலங்கலை (பிரதிபலிப்பை) அடிப்படையாகக்கொண்டு இம்முறை சிறந்ததொரு மாற்றம் வருமென்று நம்பியிருந்தோம்.
ஆனால் இப்போது குறிப்பிட்டுக்கூறத்தக்க மாற்றங்கள் எவையும் இல்லையென்பது எமக்கு ஏமாற்றமளிப்பதுடன், இவ்வனைத்து நகர்வுகளும் பூகோள அரசியலுக்கு அமைவாகவே இடம்பெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது' என்று லீலாதேவி கவலை வெளியிட்டார்.
அதேவேளை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என்ற வலியுறுத்தலைப் பொறுத்தமட்டில், ஐ.நா பாதுகாப்புச்சபையில் சீனா அதன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அம்முயற்சியைத் தோற்கடித்துவிடும் என்று வெறுமனே கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று சுட்டிக்காட்டிய லீலாதேவி, மாறாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என்றும் அம்முயற்சி தோற்கடிக்கப்படின் அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்லலாம் என்றும் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM