(எம்.எம்.சில்வெஸ்டர்)
2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் (Road Safety World Series T20) இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணியை திலகரட்ண டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணி இன்றைய தினம் எதிர்த்தாடவுள்ளன.
ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
நேற்றைய தினம் இரவு இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டு இறுதிப் போடிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் இஷான் ஜயரட்ண 19 பந்துகளில் 31 ஓட்டங்களையும், சனத் ஜயசூரிய 19 பந்துகளில் 26 ஓட்டங்களையும் ஜீவன் மெண்டிஸ் 15 பந்துகளில் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் கிரிஷ்மர் சென்டோக்கி, தேவேந்திர பிஷூ இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் 3 ஆம் இலக்க வீரராக களமிறங்கி இலங்கை பந்துவீச்சாளர்களை அச்சுறுத்திய டி நரசிங் டியொநரைன் 63 ஓட்டங்களை விளாசினார்.
இவர் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்தார். இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பு கையை விட்டுப்போனது. அணித்தலைவர் லார 11 பந்துகளில் 17 ஓட்டங்களையும், டுவைன் ஸ்மித் 23 ஓட்டங்களையும், ஜெரோம் டெய்லர் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் நுவன் குலசேகர 2 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் கைக்கொடுத்த சனத் ஜயசூரிய பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தினார். போட்டியின் ஆட்ட நாயகனாக நுவன் குலசேகர தெரிவானார்.
பொது மக்கள் மத்தியில் வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும் வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் (Road Safety World Series T20) நடப்புச் சம்பியனான இந்தியா, உப சம்பியனான இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட 8 லெஜெண்ட்ஸ் அணிகள் பங்கேற்றன.
இப்போட்டித் தொடரின் சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்றைய தினம் நடத்துவதற்கு உள்ள நிலையில், இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு 45 மணித்தியால கால இடைவெளி காணப்பட்டுள்ள போதிலும், இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கு 20 மணித்தியாலங்களை விடவும் குறைவான நேர காலமே உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முதலாவது அரை இறுதிப் போட்டி மழை காரணமாக குறித்த தினத்தில் (28) நடத்தி முடிக்காததன் காரணத்தால், மறுநாளில் (29) தொடரப்பட்டது.
அன்றைய தினம் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தாலும், அது இறுதித்தருவாயில் அப்போட்டி மறுநாளுக்கு (30) மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மற்றும் இந்திய ஆகிய இரண்டு அணிகளுமே இதுவரை ஒரு போட்டியில்கூட தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.
எது எவ்வாயினும், வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் முதல் அத்தியாயத்திலும், இந்திய மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகளே இறுதிப் போட்டியில் விளையாடிருந்தன. அப்போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு சம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வேட்கையில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி இன்றைய தினம் களமிறங்க காத்துள்ளது.
மறுமுனையில், கடந்த முறை அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து சம்பியன் பட்டத்தை முடிசூடிக்கொள்ளும் முயற்சியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியை காணக்கூடியதாக இருப்பதில் எதுவித ஐயமும் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM