ரொபட் அன்டனி
பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டே செல்கிறது. அரசியல் ரீதியான காய் நகர்வுகள், அரசியல் வியூகம் அமைக்கும் முயற்சிகள், முகாம் அமைக்கும் செயற்பாடுகள், அடுத்த தேர்தலை நோக்கிய கூட்டணிகள் என்பன வலுவாக அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
இலங்கையில் எப்போதும் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டு இருக்கின்றமை வழமையாகிவிட்டது. இலங்கை மட்டுமன்றி தெற்காசிய நாடுகளிலேயே இவ்வாறு அரசியல் களம் எப்போதும் சூடாக இருப்பதே பொதுவான பண்பாக இருக்கின்றது. அந்தளவுக்கு அரசியலில் மக்கள் ஆர்வம் செலுத்துவதும் ஏதோ ஒரு வகையில் கூட்டணி அமைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் அரசியல்வாதிகளின் ஆர்வமும் மேலோங்கி காணப்படுகின்றன.
தற்போது இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட போராட்டங்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் விளைவாக குறிப்பிட்டளவில் நாட்டில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. ஜனாதிபதி பதவியில் மாற்றம், பிரதமர் பதவியில் மாற்றம் என மிகப்பெரியதொரு மாற்றம் நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.
இந்நிலையில் பொதுஜன பெரமுன கூட்டணி பல பிரிவுகளாக பிளவுபட்டு காணப்படுகிறது என்பதே யதார்த்தமாக இருக்கின்றது. பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து பல தரப்புகள் பிரிந்து செயல்படுகின்றன.
பொதுஜன பெரமுனவில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரிந்து தனித்து செயல்படுகிறது. ஆனால் சுதந்திர கட்சியில் இருக்கின்ற ஒரு சில உறுப்பினர்கள் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருக்கின்றனர். அதேபோன்று டலஸ் மற்றும் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான 13 பேரைக் கொண்ட கூட்டணி தனித்து செயற்படுகிறது.
விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தலைமையிலான கட்சிகள் தனி கட்சியை ஆரம்பித்து சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றன. சந்திம வீரக்கொடி மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா அணியினரும் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர்.
இது தவிர எஞ்சிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை நடத்திவருகின்றது. மேலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பல நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஒரு சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டிருக்கின்றனர். கட்சிகளின் தலைமைத்துவங்கள் தொடர்ச்சியாக சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் கடந்த திங்கட்கிழமை நாட்டில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு அரசியல் ரீதியில் தீர்க்கமானதாக அமைந்துள்ளது. உண்மையில் அதனை அரசியல் நிகழ்வு என்று கூற முடியாது. அது முன்னாள் பிரதமரின் நினைவுதின வைபவமாகும். ஆனால் அது ஒரு அரசியல் வியூகம் சார்ந்த நிகழ்வாக தோற்றமளித்தது. அந்த நிகழ்வில் அரசியல் ரீதியான நகர்வுகளுக்கான சமிக்ஞையை வெளிப்படையாக காண முடிந்தது.
மறைந்த முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 63 ஆவது நினைவுதினம் கடந்த திங்கட்கிழமை ஹொரகொல்லவில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை ஆச்சரியமளிப்பதாக அமைந்தது.
அரசியல் ரீதியிலும் அது முக்கியத்துவமிக்கதாகவும் அவதானிகளின் புருவங்களை உயர்த்துவதாகவும் அந்த நிகழ்வு நடந்தேறியது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் சுதந்திரக்கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, லசந்த அழகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட பலரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம, பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் அநுரபிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, உள்ளிட்ட பலரும் இந்த நினைவு நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரியரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். அதில் அருகருகே அமர்ந்திருந்த பிரதமர் தினேஷ் மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் நீண்டநேரம் கலந்துரையாடியமையும் சகலரது அவதானத்தையும் ஈர்த்தது.
அந்தவகையில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், பிரதான பதவிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பனவே இந்த நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தமையே இதனை பேசு பொருளாக மாற்றியுள்ளது.
இது அரசியல் களத்தில் ஆச்சரியமூட்டுகின்ற பல்வேறு சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு நகர்வாகவே காணப்படுகின்றது. அதாவது மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிகா இறங்கிவிட்டாரா? ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா என்ற கேள்விகளும் தற்போது பரவலாக எழுப்பப்படுவதுடன் பல வாதப்பிரதிவாதங்களும் இந்த விடயத்தில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
மிக முக்கியமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பங்கேற்றமை அரசியல் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது அவர் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்காவிடினும் கூட ராஜபக் ஷ குடும்பத்தின் மிக முக்கியமான நம்பிக்கைக்குரியவராகவே காணப்படுகிறார். கடந்த காலங்களில் பல கட்சிகள் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ராஜபக் ஷ குடும்பத்தை கடுமையாக விமர்சித்த போதும் கூட தினேஷ் குணவர்த்தனடன் இருந்தார். அதனடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆகியவுடன் தினேஷுக்கு பிரதமர் பதவி கிடைத்தது.
இப்போது அவர் இந்த சந்திரிகா குமார துங்கவின் தந்தையார் பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றமை அரசியல் களத்தில் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. பல கேள்விகளை இந்த பங்கேற்பு எழுப்பி இருக்கிறது. அதாவது மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி ஒரு விளையாட்டை சந்திரிகா ஆரம்பிக்க போகிறாரா என்ற ஒரு வாதமும் தற்போது ஏற்படுவதற்கான சூழலை இது ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதன் பின்னர் சுமார் 10 வருடங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். எனினும் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பிரதான வகிபாகத்தை சந்திரிகா வகித்திருந்தார். அத்துடன் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியுடன் மிகக்குறைந்தளவில் அரசியலில் ஈடுபட்ட சந்திரிகா ஒதுங்கியிருந்தார். எனினும் மீண்டும் தற்போது களத்தில் இறங்கி இருக்கின்றார் என்பதை அவதானிக்க முடிகிறது.
அதன் ஒரு வெளிப்பாடாகவே மிக முக்கியமான அரசியல் பிரதிநிதிகள் பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். பண்டாரநாயக்கவின் இந்த நினைவு நிகழ்வுகளில் கடந்த காலங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பதை ஊடகங்களில் காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கலாம். அழைக்கப்பட்டவர்கள் வராமல் இருந்திருக்கலாம். அதனால் காண முடியாது போயிருக்கலாம்.
ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கொண்டு ஒருவேளை அழைக்கப்பட்ட சகலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கலாம் என்ற ஊகமும் வெளிப்படுத்தப்படுகிறது. எப்படி இருப்பினும் அடுத்த தேர்தலை இலக்காக கொண்டு சில நடவடிக்கைகள், கூட்டணி, அரசியல் கூட்டுகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவே தெரிகிறது.
குறிப்பாக சந்திரிகா, குமார வெல்கம, சுதந்திர கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற அனுரபிரியதர்ஷன யாப்பா மற்றும் சந்திம வீரக்கொடி உள்ளிட்டோர் ஒரு அரசியல் முகாமாக அடுத்த தேர்தலில் உருவாகப் போகின்றனர் என்ற ஒரு அரசியல் தோற்றப்பாடும் தெரிகிறது.
நாட்டின் அரசியல் கள நிலைமைகள் மாற்றமடைந்துள்ள நிலையில் சந்திரிகா குமாரதுங்க அரசியல் களத்தில் மீண்டும் இறங்கிவிட்டார் அல்லது இறங்க போகிறார் என்பது இன்று அரசியல் களத்தில் பேசு பொருளாகவே மாறி இருக்கிறது. இந்நிலையில் இந்த தரப்பினரின் அடுத்த கட்ட நகர்வுகளிலேயே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM