நல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்கான நடவடிக்கைகள் மற்றும் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும் காலகட்டத்தில் மட்டு. மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் போன்றவர்கள் அதைக் குழப்பும் வகையில் அடாவடித்தனங்களை மேற்கொண்டு பொதுமக்களின் காணிகளில் புத்தர் சிலைகளை வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் இனமோதல்களை உருவாக்கி நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முடக்கும்வகையில் செயற்பட்டு வருகின்றனர் என்று மட்டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகிறது.
கேள்வி: மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கடந்த சில காலங்களாக பட்டிருப்பில் தமிழர்கள் பயன்படுத்தி வந்த மேய்ச்சல் நிலம் மற்றும் செங்கலடியிலுள்ள தனியார் காணியொன்றையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கான பின்னணி என்ன?
பதில்: மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தொடர்பில் கடந்த கால விடயங்களை நாம் முதலில் எண்ணிப்பார்க்கவேண்டும். இந்தத் தேரர் கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் பெரும் அடாவடித்தனங்களையும் அட்டகாசங்களையும் புரிந்துவந்தவர். அந்தவேளைகளில் இவருக்கெதிராக அன்றும் இன்றும் எந்தவித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு வந்திருந்த சமயம் மங்களராமய விகாரைக்கு வரவில்லையென்ற காரணத்தினால் குறித்த விகாரையில் ஜனாதிபதி திறப்பதற்காக எழுப்பப்பட்டிருந்த நினைவுத்தூபியை சுத்தியலால் அடித்து நொருக்கி தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தவர்.
அப்போதும் அவருக்கெதிராக சட்ட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அண்மையில் கடமையிலிருந்த பெண் பொலிஸ் அதிகாரியொருவரை துரத்தித் துரத்தித் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பிலான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகின. இச்சம்பவத்திற்கு எதிராகவும் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு பின்னர் மின்சார சபை ஊழியரொருவருடன் இடம்பெற்ற பிரச்சினை தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வளவு சம்பவங்கள் இடம்பெற்றும் மட்டக்களப்பு -– பதுளை வீதியில் அரச மரத்தடியில் அமைந்திருக்கும் பிள்ளையார் சிலைக்கருகே புத்தர் சிலை வைக்கப்போவதாக பகிரங்கமாக அவர் அறிக்கை விட்டுள்ளார். பாரம்பரியமாக அப்பகுதி தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேசம். அந்தப்பகுதியில் இவ்வாறு புத் தர் சிலை வைப்பது தொடர்பில் முறைப்பா டொன்று பதிவு செய்தபோது குறித்த காணியில் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் உள் நுழையக்கூடாது, மரங்கள் நாட்டக்கூடாது, ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியாது மற்றும் வீதியை மறிக்க முடியாதென்று நீதிவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் எந்தக்காணியில் தேரரை உள்நுழையக்கூடாதென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ அந்த காணியினுள் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அமர்ந்திருந்தார்.
அப்போது நான் சென்றதும், நீதிமன்ற உத்தரவை வைத்துக்கொண்டு ஏன் அவரை வெளியேற்றாமல் இருக்கின்றீர்கள் என்று பொலிஸாரிடம் கேட்டேன். அதேசமயம் தேரருக்கு ஆதரவாக பஸ் ஒன்றில் சிங்கள மக்கள் வரப்போகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அந்த வேளையில் தமிழ் மக்களும் அங்கு கூடிவிட்டனர். விடயம் பாரதூரமாக செல்வதையுணர்ந்தேன். அதற்கு பின்னர் பொலிஸாரிடம் மீண்டும் பேசினேன். ஒருவாறு தேரரை அந்தக் காணியிலிருந்து வெளியேற்றினோம்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிணக்குகள் ஏற்படுவதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம். அவர்களுடைய அரசியல் இலாபங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்களை பரப்பிவந்தனர். அதே பின்னணியில்தான் இந்த சம்பவத்தையும் நாம் பார்க்கிறோம். ஏனென்றால் கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனா மற்றும் ராவணபலய போன்ற அமைப்புகள் முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அதே நிலை தற்போது தமிழ் மக்களுக்கெதிராக திசை திருப்பப்பட்டுள்ளது.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எப்போது மட்டக்களப்பு வந் தார்? மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு சென்றாரா?
பதில்: இந்தக் குழப்ப நிலைகளுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் அவர் மட்டக்களப்பு வந்திருந்தார். இதன்போது மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு அவர் சென்றபோது அம்பிட்டியே சுமணரத்ன தேரரை சந்தித்தார். மஹிந்த ராஜபக் ஷவை அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தடபுடலாக வரவேற்றார். குறித்த விகாரையில் இவர்களது சந்திப்பு இடம்பெற்றது.
கேள்வி: சுமணரத்ன தேரரின் நடவடிக்கைகள் சமீபத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக் ஷவை சந்திக்க முதல் எவ்வாறிருந்தது சந்தித்த பின்னர் எவ்வாறிருக்கின்றன?
பதில்: மஹிந்த ராஜபக் ஷவை சந்திக்க முன்னர் ஒருநாள் விகாரைக்குள் வந்ததற்காக பொலிஸ் அதிகாரியொருவருடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொண்டார். ஆனால் விகாரைக்கு வெளியே இவர் யாருடனும் பிரச்சினைப்படவில்லை. மஹிந்தவை சந்தித்த பின்னரே அவர் பொதுஇடங்களில் இவ்வாறு நடந்துகொள்கிறார். அதுவும் தமிழ் மக்களது காணிகளில் புத்தர் சிலை வைப்பது போன்ற செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார். இதற்கு மஹிந்த காலத்தில் சலுகைகளை பெற்றவர்கள் இந்த இனவாத நடவடிக்கைகளுக்கு தூபமிட்டுவருகிறார்கள்.
கேள்வி: இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் நாட்டில் இனமோதல்கள் வெடிக்கக்கூடும். அதனால் இப்பிரச்சினையைத் தடுக்க தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ?
பதில்: மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் என்றவகையில் இது தொடர்பில் ஜனாதிபதிக் கும் பிரதமருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். மற்றும் புத்த சாசன அமைச்சுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.
கேள்வி: மட்டக்களப்பில் ஐக்கிய தேசி யக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரொருவர் புத்தர் சிலை வைப் பது தொடர்பில் பின்னணியில் செயற்படுகிறார் என அறியக் கிடைத்ததே?
பதில்: மட்டக்களப்பில் மாங்கேணி பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அச்சிலை அகற்றப்பட்டது. தற்போது வடக்கு, கிழக்கில் பல இடங்களில் புத்தர் சிலைகள் வைப்பதற்கு இடம் தேடிவருகிறார்கள் என அறியமுடிகிறது.
கேள்வி: பௌத்த பிக்குகளை முன்னி லைப்படுத்தி நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன என்று நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களா?
பதில்: ஆம் நிச்சயமாக சந்தேகப்படுகி றேன். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத் தை நோக்கிய பயணத்தில் இவ்வாறான முயற்சிகள் சூடுபிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலேயே அதிக மாக இடம்பெறுகின்றன. அதேபோல தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் முயற்சி களும் நடந்து வருகின்றன. இந்த முயற் சிகளை குறித்த தேரர் உள்ளிட்ட இனவாத மதவாத அமைப்பினர் விரைவாகவும் வேகமாகவும் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆகவே இங்கு இவ்வாறான நடவ டிக்கைகள் சரியாகத் திட்டமிட்டு நடந்து வருகின்றன. அம்பிட்டியே சுமணரத்ன தேரரும் தன்னை யாராவது தாக்க மாட்டார்களா என்ற எண்ணத்திலேயே நடந்து கொள்வதுபோல தெரிகின்றது.
இதன் மூலம் நாட்டில் பெருங்குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவரது நோக்கமாக இருக்கலாம். இந்த நேரம் தமிழ்மக்களை அமைதியாக இருக்கும்படி நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM