(எம்.எம்.எம்.பஸீர்)
வர்த்தகர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகைகள் பொருளாதார நெருக்கடியை ஏற்படியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போதும், அவ்வாறான வரிச் சலுகைகளை வழங்க தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன செவ்வாய்க்கிழமை ( 27) உயர் நீதிமன்றில் வாதிட்டார்.
நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் செவ்வாய்க்கிழமை ( 27) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன் போது பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன வாதங்களை முன்வைத்தார்.
இதன்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச்சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப்பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன், புத்திஜீவிகளான சூசையப்பு நேவிஸ் மொறாயஸ் மற்றும் கலாநிதி மஹிம் மென்டிஸ் ஆகியோர் தமது மனுக்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களால் செலுத்தப்படும் வரிகளைக் குறைப்பதற்குத் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டார் என்றும், இத்தீர்மானம் முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நகர்வென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் கொடுக்கல், வாங்கல்களைக் கணக்காய்விற்கு உட்படுத்தி மத்திய வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மதிப்பீடு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், இன்றைய விசாரணையின் போது, பொருளாதார நெருக்கடி என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது எனவும்,மனுதாரர்களை மட்டும் பொருளாதார நெருக்கடி பாதித்ததாக கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன குறிப்பிட்டார்.
அதனால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் முன்வைக்கும் தர்க்கம் அடிப்படையற்றது என அவர் குறிப்பிட்டார்.
' இந்த மனுக்கள் ஊடாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.வர்த்தகர்களுக்கு வரிச்சலுகையானது அரசு மேற்கொண்ட கொள்கை அளவிலான தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது,
ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும்,அதற்கு தேர்தலின் போது மக்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களை அடையாளம் காண ஆணைக்குழு அமைக்க வேண்டும் என மனுக்கள் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறான ஆணைக்குழுவை அமைக்க உயர் நீதிமன்றுக்கு அதிகாரமில்லை.விசாரணை ஆணைக்குழுவை அமைக்கும் அதிகாரம் பாராளுமன்றம் ஊடாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றுக்கு அவ்வாற அதிகாரம் உரித்தாக்கப்படவில்லை.' என இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன வாதிட்டார்.
இதனையடுத்து சில பிரதிவாதிகளுக்காக சட்டமாதிபர் சார்பில் மேலதிக சொலிஷிடர் ஜனரால் நெரின் புள்ளே வாதங்களை முன்வைத்தார்.
அரச நிதி நிலைமை,தேசிய மற்றும் சர்வதேச கடன்,திறைச்சேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கி அரச கணக்காளர் நாயகம் அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும், இலஞ்ச ஊழல்,விசாரணை ஆணைக்குழு இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பில் தற்போதும் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் மேலதிக சொலிஷிடர் ஜெனரால் உயர்நீதிமன்றுக்கு அறிவித்தார்.
' நிதி முகாமைத்துவம் என்பது பாராளுமன்றத்துக்கு உரிய விடய பரப்பாகும்,நிதி தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் பாராளுமன்றுக்கே உரியது.தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் விசாரணை செய்ய கோரி மனுதாரர்கள் மனுக்கள் ஊடாக கோரியுள்ளனர்.
இவ்வாறு மனுதாரர்கள் கோரும் விடயமானது கணக்காளர் நாயகத்தினால் கடந்த ஜூலை மாதம் 04ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கை ஊடாக தற்போதும் நிறைவேறியுள்ளது.நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் விசாரணை செய்வதற்கு மிக பொருத்தமான சுயாதீன நிறுவனம் கணக்காளர் நாயகம் அலுவலகம் ஆகும்.அரச நிதி நிலைமை தேசிய சர்வதேச கடன்,திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகள் தொடர்பில் கணக்காளர் நாயகத்தின் அறிக்கையில் மிக தெளிவாக விடயங்;கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை மையப்படுத்தி இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது.அரசியலமைப்பிற்கு உட்பட்டு எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளும் தற்போதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது'என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் உயர் நீதிமன்றில் தெளிவுப்படுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM