(எம்.மனோசித்ரா)
மக்களின் எழுச்சிக்கு அஞ்சி அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்து , அவற்றில் ஒழிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.
யுத்த சூழல் எதுவுமின்றி, நாடு அமைதியாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன? இதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான சர்வாதிகாரம் வெளிப்படுத்தப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் 84 பேர் எவ்வித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக நாடொன்றில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான சர்வாதிகாரியாக செயற்படுகின்றார்.
மக்களின் எழுச்சியை சர்வாதிகாரத்தின் ஊடாக ஒடுக்க முடியும் என்று எண்ணுவது நிறைவேறாத கனவாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணை அற்றவர்.
கடந்த பொதுத் தேர்தலின் போது பிரதமராக பதவி வகித்த நிலையிலேயே கொழும்பு மக்கள் அவரை முற்றாக புறக்கணித்தனர்.
இலங்கையில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் யுத்தத்தின் போது மாத்திரமே காணப்பட்டன. ஆனால் இன்று நாட்டில் அவ்வாறு எந்தவொரு யுத்த சூழலும் இல்லாத நிலையிலும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். தமது உரிமைகளுக்காக போராடுபவர்களை கைது செய்வதை நிறுத்தி விட்டு, பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மக்களுக்கு அஞ்சி அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் ஒழிந்து கொள்ள இவர்கள் முயற்சிக்கின்றனர். உரிமைகளுக்காக போராடும் அப்பாவி இளைஞர் , யுவதிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் போது மக்களுக்கு அரசாங்கத்தின் மீதுள்ள கோபம் மேலும் அதிகரிக்கும்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் தமது உரிமைகளுக்காக போராடியதைத் தவிர வேறு என்ன தவறிழைத்தனர்? இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் மக்களின் எழுச்சியை தடுக்க முடியாது என்பதை அரசாங்கத்திற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அதே போன்று போராடுவதற்காக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையை இந்த ஜனாதிபதியால் நீக்கவும் முடியாது. மிகக்குறுகிய காலத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கூட அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM