எம்.எஸ்.தீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹம் எம்.எச்;.எம்.அஷ்ரப்பின் 22ஆவது நினைவு தினத்தின் பிரதான நிகழ்வு இம்மாதம் 16ஆம் திகதி அக்கரைப்பற்றில் நடைபெற்றது. முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. கவிஞரும், நடிகருமான ச.ஜெயபாலன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.
வழக்கமாக அஷ்ரப்பின் நினைவு தின வைபவங்கள் என்பது முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் கேடயமாகவே இம்முறையும் பயன்படுத்துப்பட்டது. அது தவிர்க்க முடியாததாகும்.
ஆனால், அஷ்ரப்பின் நினைவு தினத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களினாலும் அஷ்ரப்பின் கொள்கைகளை வாழ வைக்க வேண்டுமென்று அஷ்ரப்பின் நினைவு தின வைபவத்தில் தெரிவிக்கப்படும்.
ஆனால், அன்றைய தினத்துடன் அஷ்ரப்பின் கொள்கைகளும் பெட்டிக்குள் சுருட்டி வைக்கப்படும். ஆதலால், அஷ்ரப்பின் கொள்கை என்பது அவரது நினைவு தினத்தில் மாத்திரம் நினைவுபடுத்தப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றேதன்றி வேறு எதனையும் காண முடியவில்லை. முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகளை அஷ்ரப்பின் 22வது நினைவு தினத்திலும் காணக் கூடியதாக இருந்தது. கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் எம்.எஸ்.தௌபீக் மாத்திரமே வந்திருந்தார். அது கூட ரவூப் ஹக்கீமின் கட்டாயத்தின் பேரிலேயே அவர் சமூகமளித்திந்தார். இதனை ரவூப் ஹக்கீம் தமது உரையில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, ஏனைய பாராளுன்ற உறுப்பினர்களான அமைச்சர் நசீர் அஹமட், பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்கள் வருகை தரவில்லை. அது மாத்திரமின்றி அம்பாரை மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களாக உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் பலரும் நினைவு தினத்திற்கு வருகைதரவில்லை. சில பிரதேசங்களை சேர்ந்த எந்தவொரு உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் சமூகமளிக்கவில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் பலத்த விமர்சனங்களை; முன் வைத்துக் கொண்டிருக்கின்றார். அவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பதனால் கட்சியின் சார்பில் இவரே ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். அதனால், தவத்தின் மீதுள்ள கோபத்தின் காரணமாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்காது இருந்திருக்கலாம். இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைவு தினத்திற்கு வராது இருந்தமை கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய மற்றுமொரு சம்பவமாகும். அதுமாத்திரமின்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் மீதுள்ள அன்பையும், கொள்கைப்பற்றையும் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது. மேலும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ரவூப் ஹக்கீமின் கட்டுப்பாட்டிலில்லை என்றும் குறிப்பிடலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப்பின் கொள்கைகளின் அடிப்படையில் செயற்பாடாதிருந்தாலும் வருடாந்தம் அஷ்ரப்பின் நினைவு தினத்தை மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்வது வழக்கமாகும். இந்த வழக்கத்தை இம்முறை நினைவு தினத்தில் காண முடியவில்லை.
அதுமட்டுமன்றி குறித்த தினமன்று பி.ப 3.30மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 5 மணிக்குப் பின்னர் தான் நினைவு தின நிகழ்வுகள் ஆரம்பமானது. இவ்வாறு நேரம் எடுத்துக்கொண்டமைக்கு எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பொதுமக்கள் வரவில்லை என்பதே பிரதான காரணமாகும்.
கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் நினைவு தினத்தையே முறையாக ஏற்பாடு செய்ய முடியாததொரு பின்னடைவை முஸ்லிம் காங்கிரஸ் அடைந்துள்ளதனை 22ஆவது நினைவு தின ஏற்பாடுகளும், குறைந்த தொகையினரே வந்திருந்தமையும் எடுத்துக் காட்டுகின்றது.
ஏற்பாடுகளில் குறைபாடுகள் அதிகம் என்பதனால் கட்சியின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உள்ளார்கள் என்று மதிப்பிட முடியாது. பொதுவாக இன்றைய சூழலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது முஸ்லிம்கள் பெரும் அதிருப்தியைக் கொண்டுள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கிய போதும். புதியவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டுமென்ற கதை ஆங்காங்கே பேசப்பட்டு வலுவடைந்து கொண்டிருக்கின்றது.
இது தவிர வேறு பல இடங்களிலும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களினாலும், அஷ்ரப்பின் அபிமானிகளினாலும் அஷ்ரப்பின் நினைவு தின வைபவங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் சிறப்பாக அமையவில்லை. ரவூப் ஹக்கீமை சந்தோசப்படுத்துவதற்காகவே குறைகள் பலவற்றைக் கொண்டதாக அஷ்ரப்பின் 22ஆவது நினைவு தின வைபங்கள் நடைபெற்றன.
மர்ஹ_ம் அஷ்ரப் மரணித்து 22வருடங்களான போதிலும் அவரது மரணத்திற்கான காரணத்தை முஸ்லிம் காங்கிரஸினால் அடையாளப்படுத்த முடியவில்லை. அதற்கான முயற்சிகளில் கூட அக்கட்சி இறங்கவில்லை. மர்ஹ{ம் அஷ்ரப் முஸ்லிம் பிரதேசங்களுக்கு இடையே காணப்பட்ட பிரதேசவாதத்தை இல்லாமல் செய்தார்.
நாம் முஸ்லிம்கள் என்று பெரும்பாலான முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒற்றுமைப்படுத்தினார். ஆனால், தற்போது முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களினாலேயே பிரதேசவாதம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்ற கோசத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள எல்லா முஸ்லிம் பிரதேசங்களிலும் காணலாம். தாங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக வேட்பாளர்களே பிரதேசவாதம் எனும் நச்சை முஸ்லிம்களிடையே மீண்டும் விதைத்துள்ளார்கள்.
பிரதேசவாதம், அமைச்சர் பதவிகளில் உள்ள மோகம், ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் கட்சிகளின் தோற்றம், சமூகப்பற்று இல்லாத மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்களுக்கு சார்பாக குத்துக்கரணம் அடித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை, கட்சியின் கட்டமைப்பை பிரதேச ரீதியாக வலுவுள்ளதாக்குவதற்குரிய நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடைபெறாதிருக்கின்றமை காரணமாக முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுள்ளது.
அதனால், முஸ்லிம்களின் அரசியல் பலத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முஸ்;லிம்களிடையே காணப்படும் அரசியல் கட்சிகளை இணைத்து முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இன்று முஸ்லிம்களிடையே பல கட்சிகள் காணப்பட்டாலும், அவை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்டதாகும்.
அக்கட்சிகளை வளைத்து இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தாய்க்கட்சி என்ற வகையில் முஸ்லிம காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னெடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து அதில் வெற்றி கொள்வதே அஷ்ரப்பின் கொள்கைகளை வாழ வைப்பதாக அமையும்.
சமூகத்திற்காக தன்னால் முடிந்த சேவைகளைச் செய்தும், சமூகத்தின் குரலாகவும் செயற்பட்ட மாபெரும் தலைவரை வருடா வருடம் நினைவு கூர்வதனால் எந்த பயனும் சமூகத்திற்கோ, கட்சிக்கோ கிடைக்கப் போவதில்லை. வருடா வருடம் நினைவு தினம் நடத்துவது என்பது ஒரு சம்பவமே அன்றி வேறில்லை. மர்ஹ{ம் அஸ்ரப்பின் நினைவு தின வைபங்கள் சரித்திரமாக வேண்டுமெனின் அவரது கொள்கைகளை வாழ வைக்க வேண்டும்.
மேலும், முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நல்ல உறவை கட்சியின் தலைவர் கொண்டிருக்க வேண்டும். அதே வேளை, பிரதேசவாதங்கள் கலையப்பட வேண்டும்.
மர்ஹம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை வளர்ப்பதற்கு பல தியாகங்களை செய்துள்ளார். அவரின் பின்னால் தோள் கொடுத்தவர்கள் பலரும் உள்ளார்கள். அவர்களில் பலர் மாற்றுக் கட்சிகளுடன் தற்போது இணைந்துள்ளார்கள்.
இவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களின் தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும். அத்தகையவர்களினால் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் மரத்தில் கனி பறிக்கின்றவர்களாக கட்சியின் வளர்ச்சிக்கு தியாங்கள் செய்யாத புதியவர்களே உள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM