எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற அவசர சந்திப்பில் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுமென இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதோடு இரு தரப்பினருக்குமிடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதென வும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டி இசிபத்தான வீதியிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. மாலை 4.30க்கு ஆரம்பமான இச்சந்திப்பு இரவு 7.30 மணி வரையில் நீடித்திருந்தது.
இச்சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேசரிக்கு தெரிவிக்கையில்,
சந்திப்பு நடந்ததென்பது உண்மையே. நாம் பேசவேண்டிய பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அனைத்து விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தோம். இப்பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றிருந்தது. எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவிக்கையில்,
எனக்கும் கூட்மைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றை கனகஈஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார். எம்மிடையே நீண்ட தொடர்பாடல் இடைவௌியொன்று ஏற்பட்டிருந்தது. இதனால் என்ன நடைபெறுகின்றதென்பதே தெரியாதிருந்தது.
அவ்வாறான நிலையில் நாம் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். மக்களுடைய நலன்கள் மீது கரிசனைகொண்டு அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது என்பதுள்ள பலவிடயங்களை விரிவாக ஆராய்ந்தோம்.
நடைபெற்று நிறைவடைந்திருந்த தேர்தலில் நடுநிலமை வகித்தமை தொடர்பான சம்பந்தன் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதேபோன்ற அந்த முடிவை எடுத்தமைக்கான காரணம் மற்றும் எனது செயற்பாடுகள் குறித்த எனது கருத்துக்களை நான் வௌியிட்டிருந்தேன்.
எம் இருவருக்கிடையில் பல விடயங்கள் பேசப்படவேண்டியிருக்கின்றது. இன்றைய(நேற்றைய) பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றிருந்தது. எதிர்வரும் நாட்களில் நான் தொடர்ந்தும்பேச்சுவார்தைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
முன்னதாக பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் சில ஏற்பட்டன. அதனைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மருமகனும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர் வௌியிட்டிருந்த பதில் கருத்துக்களும் முரண்பாட்டு நிலைமைகளை ஏற்பட்டிருந்தன.
அதனைத்தொடர்ந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை தெற்கிற்கு அழைத்து நிதிவழங்கப்பட்டதாக முதலமைச்சர் வௌியிட்ட கருத்துக்களும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இத்தகையநிலையில் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜங்கச் செயலாளர் நிஷாதேசாய் பிஷ்வால் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை சந்திருந்தார். இதன்போது வடக்கு முதல்வரும் சந்திப்பில் பங்கேற்றிருந்ததோடு எந்தவிதமான கருத்துகளை அவரிடத்தில் முன்வைக்காதபோதும் ஆவணமொன்றை கையளித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து வடக்கு மாகாண சபையில் செப்டம்பர் முதலாம் திகதி சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுத்தி தீர்மானமொன்றை முன்வைத்த வடமாகாண முதலமைச்சர் ஏகமதாகவும் நிறைவேற்றியதோடு அவரது உரையில் சர்வதேச விசாரணை பிரேரணையை முன்வைப்பதற்கான காரணத்தையும் அதுதொடர்பிலான யாதார்த்த நிலைமைகளையும் வௌியிட்டிருந்தார். இவ்விடயமும் இரு தரப்பினரிடையேயான இடைவௌியை அதிகரிக்கச்செய்தது.
அவ்வாறானதொரு தருணத்தில் பொதுத்தேர்தல் அறிப்பு விடுக்கப்பட்டது. தேர்தல்காலத்தின்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் நடுநிலைமை வகிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இவ்வறிப்பானது தமிழரசுக்கட்சியினரை அதிருப்திப்படுத்தியிருந்தது. அத்துடன் வடக்கு முதல்வர் அக்காலப்பகுதியில் தேர்தலில் மக்களை தௌிவுபடுத்தும் வகையில் வௌியிட்டிருந்த ஊடக அறிக்கையும் அவ்வதிருப்தியை மேலும் அதிகரிக்கச்செய்திருந்தது. இவ்வாறான நிலையில் தேர்தல் நிறைவடைந்ததும் தமிழரசுக்கட்சியின் கூட்டத்தில் வடக்கு முதல்வருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
வடக்கு முதல்வர் சி.வி.யிடம் விளக்கம்கோரப்படவேண்டும் என கட்சித்தலைமையிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்விடயத்தை பொறுமையாக தான் கையாள்வதாக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்று யாழ்.மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோதும் வடக்கு முதல்வரை சந்திருக்கவில்லை.
அதனைத்தொடர்ந்த காலப்பகுதியில் இவ்வாறாக முரண்பாட்டு நிலைமைகள் தொடர்பாக சம்பந்தனுடன் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அதற்கான நிலைமைகள் ஏற்படவில்லையெனவும் நான் நானாகவேஇருக்க விரும்புவதாகவும் வடக்கு முதல்வர் செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னரான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பாரளுமன்றக் குழுக்களின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வடக்கு முதல்வர் செயற்பட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தலைமையிடம் கோரியமாக வௌிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வௌியிட்ட கருத்துக்களால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளில் வடக்கு முதல்வருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட சில உறுப்பினர்களும் வெவ்வேறாக செயற்பட ஆரம்பித்தனர். அத்துடன் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரனுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத்தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வௌியானதோடு சில உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு எதிரான போக்கை கொண்டிருந்தனர்.
குறிப்பாக வடக்கு முதல்வர் கடும்போக்காளராகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்ந்தன் மென்போக்கையும்கொண்டிருப்பதாக தென்னிலங்கை அரசியல் சக்திகள் கருத்துக்களை பகிரங்கமாக வௌியிட்டிருந்தன. இத்தகைய நிலையில் வடக்கு முதல்வர், கூட்டமைப்பின் தலைவர், பங்காளிக் கட்சித்தலைவர்கள், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டமொன்றை நடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவந்தன.
அவ்வாறிருக்கையில் தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துவதையும் நோக்காகக் கொண்டும் கடந்த சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்திய நிபுணர் பு.லக்ஷ்மன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் செயலாளர்.ரி. வசந்தராஜா ஆகியோரை இணைத் தலைமையாகவும் மதத் தலைவர்களையும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகவும் கொண்டு அங்குராட்பணம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டதாக பரவலான கருத்துக்கள் எழுந்தன. இதனையடுத்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு இடையில் இச்சந்திப்பு அவசரமாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM