(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்துக்குள் ஊடுருவி, சைபர் தாக்குதல் நடாத்தி, அதிலிருந்து சுமார் 2 இலட்சத்து 72 ஆயிரத்து 680 பரீட்சை பெறுபேருகளை திருடி, இம்முறை க.பொ. த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளை உத்தியோகபூர்வமாக காட்டும் இணையத் தளம் ஒன்றினை நடாத்திச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட, காலி பகுதியின் பிரபல ஆண்கள் பாடசாலையின் 13 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் (9) உத்தரவிட்டது.
கடந்த 5 ஆம் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன , சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லகீ ரந்தெனியவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், 8 ஆம் திகதி நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன்படி நேற்று அம்மாணவன், சி.ஐ.டி. அதிகாரிகளால் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போதே அவர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் தனது வீட்டுக்கு அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று சென்று கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிவான் நிபந்தனை விதித்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளம், மூன்றாம் நபர் ஒருவருக்கு, பரீட்சை பெறுபேறுகளை பரீட்சிக்க முடியா வண்ணம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மாணவன் நிர்மாணித்துள்ள இணையத்தளம் பிரகாரம், எந்த ஒரு நபருக்கும் எந்த ஒரு நபரினதும் பெயரை மட்டும் அல்லது பெயரின் ஒரு பகுதியை மட்டும் உள்ளீடு செய்வதன் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்க்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.யின் கணிணிக் குற்ற விசாரணைப் பிரிவின் சமூக வலைத் தளங்கள் குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கயஸ்ரீ தலைமையிலான குழுவினர், முதலில் மாணவனால் ஆரம்பிக்கப்பட்ட இணையத் தளத்தை பரீட்சித்துள்ளனர்.
எனினும் அந்த இணையத்தளமானது, வெளிநாடொன்றில் இருந்து இயங்குவதைப் போல பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டதால், அதனை இயக்குபவரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கணிணிகுற்ற விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜயனெத்தியின் ஆலோசனைக்கு அமைய, பொறுப்பதிகாரி கயஸ்ரீ தலைமையிலான குழு, தொடர்ச்சியான இணைய கண்காணிப்பு மற்றும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.
இணையத்தள தொடர் கண்காணிப்பை அடுத்து, பொலிஸ் பரிசோதகர் கயஸ்ரீ தலைமையிலான குழுவினர், இணையத் தள ஊடுருவல் காரர்கள் ( ஹெக்கர்ஸ்) ஒன்றிணையும் டெலிகிராம் குழு ஒன்றினை கண்டறிந்துள்ளனர். அந்த டெலிகிராம் குழுவில் சுமார் 5,000 பேர் வரை இருப்பது தெரியவந்துள்ளது.
மிகப் பாதுகாப்பான மென்பொருளைக் கொண்ட அந்த குழுவில், உபாயங்களை பயன்படுத்தி சி.ஐ.டி.யின் அதிகாரிகள் இணைந்து தொடர் மேற்பார்வையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது அந்த குழுவின் நிர்வாகியாக செயற்பட்ட பாடசாலை மாணவன் ஒருவனை அடையாளம் கண்டுள்ள சி.ஐ.டி.யினர், அவரை தெஹிவளை பகுதியில் வைத்து பொலிஸ் பொறுப்பில் எடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக அந்த குழுவில் பாடசாலை மாணவர்களே அதிகளவில் இருந்துள்ள நிலையில், அவர்கள் இணையத்தளங்களை ஊடுருவது தொடர்பில் அந்த டெலிகிராம் குழுவில் தமது அறிவை பகிர்ந்துள்ளனர்.
அதன்படி அக்குழுவில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்களையும் மையப்படுத்தி சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்த போதும், பரீட்சைகள் திணைக்கள இணையத்தை ஹெக் செய்த நபரின் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் சி.ஐ.டி. அதிகாரிகள் மற்றொரு உபாயத்தை பயன்படுத்தி, பரீட்சை திணைக்கள இணையத்தளத்திலிருந்து களவாடப்பட்ட தகவல்கள் ஊடாக உருவாக்கப்பட்ட இணையம் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் கலவரமடைந்த மாணவன் தனது இணையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதையும், அதிலிருந்து மீட்க முன்னெடுக்க முடியுமான வழி முறை தொடர்பிலும் தகவல்களை பகிர குறித்த டெலிகிராம் குழுவுடன் தொடர்புபட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அந்த தகவல்கலை மையப்படுத்தி, மாணவனை அடையாளம் கண்ட சி.ஐ.டி. சிறப்புக் குழு காலிக்கு சென்று அவரைக் கைது செய்தது.
பரீட்சைகள் திணைக்கள இணையத்தை ஹெக் செய்தமை தொடர்பில் அம்மாணவனிடம் செய்த விசாரணைகளில், இணையத்தளத்தின் பலவீனத்தை அறிந்து 'புருட் போர்ஸ்' ( brute-force) தாக்குதல் நடத்தி 6 மணி நேரத்தில் பெறுபேற்று தகவல்களை பதிவிறக்கம் செய்து புதிய இணையத்தலத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பாடசாலையில் தொழில் நுட்பவியல் பிரிவில் கல்விகற்கும் இந்த மாணவன், இந் நடவடிக்கைகளை முன்னெடுக்க கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும், மடிக் கணினி ஒன்றினையும் மட்டுமே பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே மாணவன் வெள்ளிக்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை குறித்த மாணவன் மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவை பெறுநருக்கு குற்றச் செயலில் ஈடுபடும் நோக்கம் இல்லை எனவும், தான் கற்றதை பிரயோகம் செய்து பார்த்துள்ளார் என தெரிவித்தார்.
அத்துடன் இம்மாணவன் எதிர்வரும் க.பொ. த. உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள திறமையான மாணவன் எனவும், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தை ஹெக் செய்த மாணவன் பரிசுத் தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டமையையும் ஆராய்ந்து, இவருக்கு பிணையளிக்குமாறு கோரினார். இதனையடுத்தே பிணையளிக்கப்பட்டது.
இதனிடையே, சி.ஐ.டி. கண்டறிந்த சுமார் 5,000 பேரைக் கொண்ட டெலிகிராம் குழுவில் உள்ளவர்களால் ஏதேனும் சட்ட விரோத செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என விசாரிக்குமாறு சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைய அது குறித்த மேலதிக விசாரணைகளும் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் சமூக வலைத் தள விவகார விசாரணையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM