பருவமடைந்த பெண் ஒருவருக்கு மாதவிடாய் வருவது வழக்கம். இதன்போது பெரும்பாலானோரில் ஒருவித சாதாரண வயிற்றுவலி, வயிற்றுத்தசைகளில் இறுக்கம், அசெளகரியம் (Discomfort) என்பன தோன்றுவது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக சிலரில் அதிகூடிய, பல நாட்கள் நீடிக்கும் வலி ஏற்படுகின்றது.
இவ்வாறு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியின் போது தோன்றும் நோய் அறிகுறிகளாவன,
· வலி வழக்கமாக மாதவிடாய் வருவதற்கு முன் தொடங்கி மாதவிடாய் காலத்தில் ஒன்று / இரண்டு நாட்கள் நீடித்து மறையும்.
· அடிவயிற்றில் தசைகளில் இறுக்கம் ஏற்படலாம். (Cramps)
· வலி அதிகரிக்கும் போது குமட்டலும் வாந்தியும் ஏற்படலாம்.
· வயிற்றோட்டம் (Diarrhoea)
· வியர்த்தல் ((Sweating)
· சிலவேளைகளில் சிறுநீரக அறிகுறிகள் – அதிக சிறுநீர் கழித்தல், அதிகவலி.
· களைப்பு,
· சிலவேளைகளில் மயக்கமும் ஏற்படலாம். இவ்வாறான வலி தாங்கமுடியாதளவு வரும்போதோ அல்லது வலி நிவாரண மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது போகும்போது வைத்திய ஆலோசனை பெறுவது சிறந்தது.
இவ்வாறு மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத வயிற்று வலியின் பின்னணியில் முக்கிய காரணங்கள் இருக்கக்கூடும்.
· அடிவயிற்றில் ஏற்படும் நுண்ணுயிர்த் தொற்றுக்கள் மற்றும் சில பாலுறுப்பு நோய்கள்.
· கர்ப்பப்பையின் வெளிப்புறங்களில் ஏற்பட்டிருக்கும் எண்டோமெற்றியோசிஸ் (Endometriosis) போன்ற நோய்கள் இவ்வாறான வயிற்றுவலிக்குப் பிரதான காரணங்களாகலாம், இவை தவிர,
· குடல்வாலில் ஏற்படும் அழற்சி (Appendicitis)
· சிறுநீரக தொற்றுநோய்கள்
· முட்டை வெளியேறுவதால் ஏற்படும் வலி · சினைப்பையில் தோன்றும் கட்டிகள் முறுக்கமடைதல் அல்லது வெடித்தல்
· திருமணமான பெண்களில் கருத்தரிப்புடன் தொடர்புடைய பிரச்சினைகள். கருச்சிதைவு, கர்பப்பைக்கு வெளியே கரு தங்குதல்
· அடிவயிற்றில் நோய்களால் ஏற்படும் ஒட்டல்கள் (Adhesion)
· மேலும் குடல் உறுத்துணர்ச்சி நோய்கள் (Irritable bowel Syndrome)
போன்றனவாலும் அடிவயிற்றுவலி இவை மாதவிடாய் காலத்தில் கூடுதலான வலியை ஏற்படுத்துகின்றன.
எனவே ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தாங்கமுடியாத வயிற்றுவலியின் போது வைத்திய பரிசோதனைக்குச் செல்வது சிறந்தது. இதன்போது உங்கள் வைத்தியர் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு வயிற்றுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்வார். தற்காலத்தில் இளம்பெண்கள் கூடுதலானவர்களில் மாதவிடாயின் போது மீண்டும் மீண்டும் தோன்றும் அடிவயிற்று வலிக்குப் பிரதான காரணமாக அமைவது எண்டோமெற்றியோசிஸ் ( Endometriosis) எனும் நோயாகும். இந்நோய் மாதவிடாயின் போது வயிற்றுவலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தைப் பாக்கியத்தை தள்ளிப்போடுதல், மீண்டும் மீண்டும் அடிவயிற்றிலேற்படும் கட்டிகள், அவற்றிற்கான சத்திர சிகிச்சைகள் மேலும் தொடர்ச்சியான அடிவயிற்றிலேற்படும் வலி போன்றவற்றையும் தோற்றுவிக்கின்றது.
எனவே இதுபற்றிய விளக்கம் ஒன்றை மக்களுக்கு வழங்குவது அவசியமாகும்.
எண்டோமெற்றியோசிஸ்
முதலில் எண்டோமெற்றியோசிஸ் என்றால் என்ன என்பது பற்றி நோக்குவோமானால், பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பாகிய கர்ப்பப்பையின் உட்சுவர் எண்டோமெற்றியம் என (Endometrium) அழைக்கப்படுகின்றது. இந்த இழையம் சில பெண்களில் கர்ப்பப்பையின் உட்சுவர்ப் பகுதியில் காணப்படுவதுடன் கர்ப்பப்பையின் வெளிப்புறமும் காணப்படும். இந்நிலை இளம்பெண்களிலும் குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்த்து இருப்பவர்களிலும் காணப்படும்போது நோயினால் பாதிக்கப்பட்ட இழையங்களை மட்டும் அகற்றி சூலகங்கள், பலோப்பியன் குழாய்கள் மற்றும் கர்ப்பப்பை என்பவற்றை தங்கவிடப்படும். இந்நோய் காணப்படும் பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் கர்ப்பப்பையின் உட்புறம் போன்றே வெளிப்புறத்திலும் குருதிக்கசிவு ஏற்படுவதனால் இவர்களுக்கு அடிவயிற்றில் ஒரு தாங்கமுடியாத வலி ஏற்படுகின்றது. இது ஒரு பொதுவான நோயாகக் பெண்களில் காணப்படுகின்றது. அதாவது நடுத்தர வயதுடைய 10 பெண்களை எடுத்தால் அதில் ஒருவராவது இந்நோய்க்கு ஆளாகி இருப்பார். வைத்திய ஆலோசனைக்கென வரும் பெண்களில் பெரும்பாலானவர்களில் இந்நோய் கண்டறியப்படுகிறது.
இந்நோய் (எண்டோமெற்றியோசிஸ்) ஏற்படுவதற்கான காரணங்கள்
இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இருப்பது மாதவிடாய்க் காலங்களின் போது கர்ப்பப்பையின் உட்சுவர்ப்பகுதி உடைந்து வெளியேறுகின்றபோது அதன் ஒரு பகுதி பலோப்பியன் குழாயூடாக பின்னோக்கிச் சென்று வயிற்றினுள் தேங்கி வளருகின்றது. இதனால் ஒவ்வொரு மாதவிடாய்க் காலங்களிலும் கர்ப்பப்பையின் வெளிப்புறத்திலும் குருதிக் கசிவுகளும், குருதித்தேக்கமும் உருவாகும். இவ்வாறே இந்த எண்டோமெற்றியோசிஸ் பெண்களின் அடிவயிற்றினுள் தோன்றிக் காணப்படும்.
எண்டோமெற்றியோசிஸ் நோயின்
அறிகுறிகள்
சில பெண்களில் இந்நோயின் ஆரம்ப நிலையில் எவ்வித நோய் அறிகுறிகளையும் தோற்றுவிக்காது. ஆனால் ஏனையோரின் ஒன்று அல்லது பல நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் பொதுவான நோய் அறிகுறிகளாவன,
1) மாதவிடாய்க் காலங்களில் அடிவயிற்றில் கடுமையான வலி
2) தாம்பத்திய உறவின் போது அடிவயிற்றில் கடுமையான வலி.
3) பொதுவான ஒரு அடிவயிற்றுவலி
4) குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல்
இந்த எண்டோமெற்றியோசிஸ் நோயின் போது வயிற்றுவலி மாதவிடாய் வருவதற்கு சில தினங்களுக்கு முன்னரே ஆரம்பித்து மாதவிடாய் வருகின்ற நாட்கள் முழுவதும் நீடிக்கும். சில பெண்களில் இந்த வயிற்றுவலி மாதவிடாய் வராதநாட்களிலும் காணப்படும். தாம்பத்திய உறவின் போது ஏற்படும் வலி தாம்பத்திய உறவின் பின்னரும் சில மணிநேரம் நீடிக்கும். சிலபெண்களில் குழந்தைப் பாக்கியம் தாமதமடைவதற்கு அவர்களது தாம்பத்திய உறவே ஒரு வலி மிகுந்த விடயமாக உள்ளதுடன், அப்பெண்களில் இந்நோயினால் பலோப்பியன் குழாய்கள் மற்றும் சூலகங்கள் என்பன ஆரோக்கியமற்றனவாக இருப்பதுவுமே காரணம். அதாவது இவர்களது சூலகங்களிலிருந்து முட்டைகள் சரியாக வெளியேற்றப் படுவதுமில்லை. இவ்வாறு வெளியேற்றப்படும் முட்டைகள் சரியாகப் பலோப்பியன் குழாய்களினூடாக பயணிக்க முடியாது அக்குழாய்கள் அடைபட்டும் இருக்கும். சிலபெண்களில் இந்த வயிற்றுவலி அவர்கள் மலங்கழிக்கும் போதும் சிறுநீர் கழிக்கும் போது கூட ஏற்படும்.
எண்டோமெற்றியோசிஸ் நோய் உறுதிப்படுத்தப்படும் முறை
வ்வாறான நோய் அறிகுறிகள் உங்களில் காணப்படும் போது உங்களது அடிவயிற்றைப் பரிசோதிக்கும் மருத்துவர் இந்நோய் இருப்பதாக சந்தேகித்தால் முதலில் ஒரு ஸ்கான் (Ultra Sound Scan) பரிசோதனையை மேற்கொள்வார். இந்த ஸ்கான் பரிசோதனையின் போது இந்த நோயினால் ஏற்படுத்தப்படும் நாள்பட்ட குருதி சேர்ந்த சூலகக் கட்டியான சொக்லேட் சிஸ்ட் (Chocolate Cyst) இருப்பின் இதனைக் கண்டறியலாம். ஆனால் இந்நோயின் மற்றைய நிலைகள் இந்த ஸ்கான் மூலம் கண்டறியப்பட முடியாது. எனவே இந்த சொக்லேட் சிஸ்ட் தவிர ஏனைய நிலைகளில் இந்நோய் இருப்பதனைக் கண்டறிய லப்பிரஸ்கொப்பி (Laparoscopy) பரிசோதனையே சிறந்தது.
எண்டோமெற்றியோசிஸ் நோய்க்குரிய சிகிச்சைகள்
இந்நோய்க்குரிய சிகிச்சைகள் மருந்துகள் மூலமும் சத்திரசிகிச்சை மூலமும் வழங்கப்படும். சிலவேளைகளில் ஒரு பெண்ணிற்கே இவ்விரு முறைகளும் பாவிக்கப்படும். சிகிச்சை முறைகள் உங்களது வயது, நோய் அறிகுறிகள் உக்கிரத்தன்மை மற்றும் உங்களது தனிப்பட்ட விருப்பம், நீங்கள் கர்ப்பந்தரிக்க விருப்பமுடையவரா? என்பவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.
மருந்துகள் மூலமான சிகிச்சையின்
பங்களிப்பு
இந்நோய்க்குரிய மருந்துகளாக ஓமோன் மாத்திரைகளும் (Hormones) வலி நிவாரணிகளும் (Pain Killers) பாவிக்கப்படுகின்றன. இந்த ஓமோன் மாத்திரைகள் இந்நோயின் வளர்ச்சியை தற்காலிகமாகக் கட்டுப்படுத்தி உங்களுடைய பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வைக் கொடுக்கும். ஆனால் குழந்தைப் பாக்கியத்தைத் துரிதப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த ஓமோன் மூலமான சிகிச்சை சிறந்த தீர்வாக அமையாது. அவர்களுக்கு சத்திரசிகிச்சையே பலனளிக்கும்.
இந்த ஓமோன்களிலுள்ள சிக்கல் என்னவென்றால் இவற்றால் ஏற்படும் பல பக்கவிளைவுகளே ஆகும். இதனால் இதை 6–9 மாதங்களே பாவிக்க முடியும்.
இந்நோய்க்குரிய சத்திரசிகிச்சையின்
பங்களிப்பு
இந்நோய்க்குரிய சத்திரசிகிச்சைகள் இருவகைப்படும். அதாவது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட இழையங்களை மட்டும் அகற்றுதல் மற்றும் முற்றாக கருப்பப்பையை சூலகங்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்ட இழையங்களை அகற்றுதல், இந்த சத்திரசிகிச்சைகள் இருவழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அவையாவன பாரம்பரிய வயிற்றில் வெட்டை ஏற்படுத்தி செய்யப்படும் சத்திரசிகிச்சை (Laparotomy) லப்பிரஸ்கொப்பி மூலம் செய்யப்படும் சத்திரசிகிச்சை.
இளம் பெண்களிலும், குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களிலும் பாதிக்கப்பட்ட இழையங்களை மட்டும் அகற்றி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும். கர்ப்பப்பை, சூலகம் தங்கவிடப்படும். இதன்போதுள்ள சிக்கல் என்னவென்றால் சிறிது காலத்தின் பின் இந்நோய் மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளது.
சற்று வயது கூடிய (40வயதிற்குமேல்) பெண்களிலும் மீண்டும் ஒரு குழந்தை பெறும் எண்ணம் இல்லாதவர்களிலும் இந்நோய் காணப்படும்போது பாதிக்கப்பட்ட இழையங்களுடன் கர்ப்பப்பை, சூலகங்களும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன. அவ்வாறனவர்களில் இந்நோய் மீண்டும் தோன்ற வாய்ப்பில்லை. இவ்வாறானவர்களுக்கு உடல் பலவீனமடைவதைத் தடுப்பதற்கு சிறிது காலம் ஓமோன் மாத்திரைகள் பாவிக்க வேண்டும்.
எனவே நேயர்களே பரம்பரை அலகுகளின் பங்களிப்பினால் சில பெண்களில் ஏற்படுகின்ற இந்நோய் பல வழிகளிலும் சிக்கல்களை தோற்றுவிக்கின்றது. ஆனால் கர்ப்பகாலத்திலும், மெனோபோஸ் பருவத்திலும் இந்நோய் தாக்குவதில்லை மறைந்து போகிறது.
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி ஒரு பொதுவான பிரச்சினை. தகுந்த வைத்திய ஆலோசனையின்படி இதற்கு தீர்வு காண்பது உங்களது கடமை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM