(நெவில் அன்தனி)
ரிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட, சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை மூன்று வருடங்களின் பின்னர் இந்த வருடம் வெகு சிறப்பாக நடத்த இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
ரிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் சுமார் 15,000 மாணவர்கள் பங்குபற்றுவதால் மூன்று பிராந்தியங்களில் 3 கட்டங்களாக தகுதிகாண் போட்டிகள் முதலில் நடத்தப்படும்.
இப் போட்டிகள் 12, 13, 14, 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு நடத்தப்படும்.
முதலாவது பிராந்திய மட்டப் போட்டி அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30), நாளை புதன்கிழமை (31) ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறுகிறது.
அப் போட்டியில் வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது பிராந்திய மட்டப் போட்டி எம்பிலிப்பிட்டி விளையாட்டரங்கில் செப்டெம்பர் 22ஆம், 23ஆம் திகதிகளில் நடைபெறும். இதில் தெற்கு, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவர்கள் போட்டியிடவுள்ளனர்.
கடைசியாக மேல் மாகாணத்துக்கான பிராந்திய மட்டப் போட்டி கம்பஹா, பண்டாரகம விளையாட்டரங்கில் செப்டெம்பர் 29ஆம், 30ஆம் திகதிகளில் நடைபெறும். இப் போட்டியில் 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிராந்திய போட்டிகளில் குறித்துரைக்கப்பட்ட அடைவு மட்டங்களை எட்டும் சிறுவர், சிறுமிகள் இலங்கை பாடசாலைகள் இறுதிச் சுற்று கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறுவர் .
இறுதிச் சுற்று மெய்வல்லுநர் போட்டிக்கு இன்னும் திகதிகள் குறிப்பிடப்படவில்லை.
தாஜ் சமுத்ர ஹொட்டேலில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத் தலைவர் கலாநிதி குசல பெர்னாண்டோ இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவிருப்பதால் அதற்கான அட்டவணை உறுதி செய்யப்பட்ட பின்னர் கனிஷ்ட மெய்வல்லுநர் இறுதிச் சுற்றுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் உபாலி அமரதுங்க தெரிவித்தார்.
இதேவேளை, ரிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பர்ட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் செப்டெம்பர் 12, 13, 14ஆம் திகதிகளில் நடத்தப்படும்.
சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 16, 18, 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபற்றுவர். இப் போட்டியில் 5,000 மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 நிமிடங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தால் 10 வருடங்களுக்குமேல நீடிக்கும் அனுசரணை
இலங்கை பாடசாலைகள் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கு சி பி எல் புட்ஸ் இன்டர்நெஷனல் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் 10ஆவது வருடமாக அனுசரணை வழங்குகின்றது.
கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதையிட்டு பெருமகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதாக சி பி எல் புட்ஸ் இன்டர்நெஷனல் (பிறைவேட்) லிமிட்டெட் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நில்புல் டி சில்வா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், '12 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத் தலைவர் உபாலி அமரதுங்கவும், செயலாளர் சுசன்த பெர்னாண்டோவும் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வந்தவர்கள் கடைசி நேரத்தில் விலகிக்கொண்டதால் தங்களது முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் எனக் கூறி, மாணவர்களின் நலன்கருதி உதவுமாறு எங்கள் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
நாங்கள் நேரத்தை வீணடிக்காமல் பத்தே நிமிடங்களில் அனுசரணை வழங்குவதென தீர்மானித்தோம். அன்றிலிருந்து எமது அனுசரணை தொடர்கிறது. கடந்த 2 வருடங்களாக போட்டிகள் நடைபெறாதபோதிலும் 10ஆவது வருடமாக எமது அனுசரணை தொடர்வதையிட்டு பெருமை அடைகிறோம்' என்றார்.
'இலங்கையில் அதிசிறந்த மெய்வல்லுநர்களை உருவாக்கிய வரலாறு இப்போட்டிக்கு இருக்கிறது. அவர்களை ஊக்குவிப்பதில் எமது நிறுவனம் பாரிய பங்களிப்பை வழங்கிவருகிறது. எமது 10 வருட அனுசரணையானது வளர்ந்துவரும் மெய்வல்லுநர்களின் ஆற்றல்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
இப் போட்டிகளின் மூலம் தெரிவான அதிசிறந்த 18 மெய்வல்லுநர்களுக்கு நாங்கள் கடந்த 3 வருடங்களாக கொடுப்பனவுகளை வழங்கி அவர்கள் உயிரிய ஆற்றல்களை பெறுவதற்கான சிரான பயிற்சிகளில் ஈடுபடவைக்கிறோம். எமது அனுசரணை இந்த மெய்வல்லுநர்களை எதிர்கால விளையாட்டுத்துறை நட்சத்திரங்களாக உயரச் செய்யும் என நாங்கள் வெகுவாக நம்புகிறோம்' என நில்புல் டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM