(ஆர்.ராம்)
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சர்வதேச தரப்புக்களிடத்தில் வலியுறுத்தியுள்ளன.
இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போதே மேற்கண்டவிடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 51ஆவது அமர்வில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்படவுள்ள இலங்கை குறித்த அறிக்கை மற்றும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானம் ஆகியவற்றில் இடைக்கால நிர்வாக விடயத்தினை உள்ளீர்க்கச் செய்வதற்கும் விசேட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அதனுடன் இணைந்து செயற்படும் சகோதர புலம்பெயர் அமைப்புக்களே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பில் வீரகேசரிக்கு கருத்துவெளியிட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வினை முன்வைத்து முக்கியமான மூன்று விடயங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக, நீதி மற்றும் பொறுப்புக்கூறல், நிரந்தரமான அரசியல் தீர்வு, இந்த இரண்டும் செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் வரையில் வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஆகியனவே அம்மூன்று விடயங்களாகின்றன.
நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில், ஐ.நா. உயர்ஸ்தானிகரகம் சாட்சியங்களை திரட்டுவதற்கான பொறிமுறையொன்றை முன்மொழிந்திருந்தது. எனினும், நிதிவழங்கலில் உள்ள தாமதங்கள் காரணமாக, அந்தப்பொறிமுறை ஸ்தாபிக்கப்படுவதில் பின்னடைவுகள் இருந்தன.
தற்போது 13அங்கத்தவர்களைக் கொண்டிருக்க வேண்டிய அந்தப் பொறிமுறையானது எட்டு அங்கத்தவர்களுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனால், அந்தப் பொறிமுறையால் தாக்கச் செலுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை. ஆகவே அந்தப் பொறிமுறையை அடுத்த தீர்மானத்திலும் உள்ளீர்த்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளோம்.
அதேநேரம், இனப்படுகொலை உள்ளிட்ட இழைக்கப்பட்டுள்ள அனைத்துக்குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற விடயத்தை உள்ளீர்க்குமாறு கோரியுள்ளோம்.
அதுமட்டுமன்றி, சாட்சியங்களின் திரட்டலின் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கோவையை அமையப்படுத்தி அந்தந்த நாடுகளில் சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக வழக்கு தாக்கல்கள் செய்யப்படுகின்றபோது அதற்கான சான்றாதார கோவைகளை வழங்குவதற்கு தயார்ப்படுத்தல்கள் செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளோம்.
மேலும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது, இலங்கை குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கையொன்றை பொதுச்சபையில் முன்வைக்க முடியும் என்பதற்கு அமைவாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயம் உள்ளவாறே, பொதுச்சபையின் ஊடாக முன்னகர்த்தப்பட வேண்டிதற்கான அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதேநேரம், இணைந்த, வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அதுவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும். இந்த வியடத்தில் அதிகாரங்கள் முறையாகப் பகிரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.
இந்நிலையில், நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு ஆகிய ஏற்றுக்கொள்ளப்பட்டு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரையில் வடக்கு, கிழக்கினை மையப்படுத்திய இடைக்கால நிர்வாகத்தை ஸ்தாபிக்க வேண்டும். ஏனென்றால், பொறுப்புக்கூறலும், நிரந்தரமான அரசியல் தீர்வும் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமாகுவதற்கு குறிப்பிட்ட காலம் தேவையாகவுள்ளது.
இக்காலப்பகுதிக்குள் தமிழ் மக்களின் நிலங்கள், பண்பாடுகள் நீர்த்துப்போகாதிருப்பதற்காக இடைக்கால அரசாங்கம் அவசியமாகின்றது. இடைக்கால நிருவாக சபைக்கான முன்மொழிவானது 1987ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டபோதும், அது நடைமுறையில் முன்னெடுக்கப்படவில்லை.
பின்னர் இடைக்கால முன்மொழி செய்யப்பட்டபோதும் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், தான் தற்போது அந்தவிடயத்தை முன்னிலைப்படுத்தி இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். அத்துடன், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அறிக்கையிலும், அடுத்து கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திலும் உள்ளீர்க்கச் செய்வதற்கான பேச்சுக்களையும் நிறைவு செய்துள்ளோம்.
இதனைவிடவும், இந்த முன்மொழிவு அடங்கிய பொதுஆவணமொன்றை தமிழ்த் தேசியத் தளத்தில் செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் தரப்புக்களுக்கும் அனுப்பிவைத்துள்ளோம். அவர்களின் ,டுபட்டுடன் இம்முன்மொழிவுக்கு செயல்வடிவம் அளிப்பதற்கு முயன்றுவருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM