(நெவில் அன்தனி)
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றி பதக்கங்கள் வென்ற வீர, வீராங்கனைகள் மட்டுமல்லாமல் அவர்களது பயிற்றுநர்களும் பாராட்டுக்குரியவரகள் என தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்றவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு ஒலிம்பிக் இல்லத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது வரவேற்புரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய சுரேஷ் சுப்ரமணியம்,
'பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்றவர்களின் கடும் முயற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது. அதேவேளை, பயிற்றுநர்களின் அர்ப்பணிப்புத்தன்மையும் இதில் பங்காற்றியதை நாங்கள் பாராட்டவேண்டும். மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹிம்சா பெர்னாண்டோவின் பயிற்றுநர் சுரங்க குமார இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், இலங்கைக்கு பதக்கம் வென்றுகொடுப்பதாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய நெத்மி மூலம் பதக்கம் கிடைக்கச் செய்தார். அவரது திடநம்பிக்கையும் அர்ப்பணிப்புத்தன்மையும் ஏனையவர்களால் பின்பற்றக்கூடிய ஒன்றாகும்' என்றார்.
இதேவேளை, பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றச் சென்று 13 இலங்கையர் தலைமறைவானது தமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் எனவும் பிரித்தானிய எல்லைக் கட்டுப்பாடு விதிகளின் கீழ் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'தலைமறைவான இலங்கை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தொடர்பாக வெஸ்ட் மிட்லண்ட்ஸ் பொலிஸாருக்கு அறிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டோம். ஆனால், பிரித்தானிய எல்லை கட்டுப்பாடு விதிகளின் பிரகாரம் தலைமறைவானவர்களுக்கு டிசம்பர் மாதம்வரை விசா இருப்பதால் அவர்களை கைதுசெய்யவோ, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியாது என பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக நாங்கள் நாடு திரும்புவதற்கு முன்னர் தலைமறைவானவர்களின் கடவுச் சீட்டுக்களை பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைத்தோம்' என அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க, இது தொடர்பாக விசாரணை நடத்துவது கடினமானது எனக் குறிப்பிட்ட இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷா டி சில்வா, 'இலங்கையைப் பொறுத்த மட்டில் முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்படுவது பொதுவானதாகும். ஆனால் இந்த விடயங்களைத் தீவிரமாக ஆராய்ந்து யாரேனும் தவறு செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம் பெறுவதைத் தடுக்க உரிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM