லொத்தர் சீட்டிழுப்புகளில் கணிதத் திறமைகளைப் பயன்படுத்தி பல மில்லியன் டொலர்களை வென்ற ஒரு தம்பதியினர் தொடர்பான ஜெரி அன்ட் மார்கி கோ லார்ஜ் (Jerry and Marge Go Large) எனும் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஜெரி செல்பீ, மார்கி செல்பீ தம்பதியினரின் வாழ்க்கை தொடர்பான உண்மையைக் கதையைத் தழுவியதாகும்.
நிறுவனமொன்றில் கணக்காளராக பணியாற்றியர் ஜெரி செல்பீ. அவரும் அவரின் மனைவி மார்கியும் மிச்சிகனிலுகள்ள கிராமமொன்றில் கடையொன்றையும நடத்தி வந்தனர். 2003 ஆம் ஆண்டு 60 வயதைக் கடந்த நிலையில், ஜெரி செல்பீ ஓய்வு பெற்றவுடன் தமது கடையையும் இவர்கள் விற்றுவிட்டனர்.
சிறிது காலத்தின் பின்னர் மேற்படி கடையை பார்த்துவிட்டு வருவதற்காக ஜெரி செல்பீ சென்றிருந்தார் அப்போது 'வின்பால்' எனும் புதிய லொத்தர் விளையாட்டு நடைபெறுவதை அவர் கண்டார். ரோல்டவுண் எனும் அம்சம் அதில் அடங்கியிருப்பதையும் அப்போது 64 வயதானவராக இருந்த ஜெரி செல்பீ அவதானித்தார்.
அதாவது, சில லொத்தர் சீட்டிழுப்புகளில் ஜெக்பொட் பரிசு வெல்லப்படாவிட்டால் அடுத்த தடவைகளில் ஜெக்பொட் பரிசுத் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
ஆனால், மிச்சிகன் மாநிலத்தின் வின்பால் லொத்தரில், எவரேனும் ஒருவர் ஆறு எண்களையும் அடிக்கும் வரை, அதாவது ஜெக்பொட் வெல்லும் வைர பரிசுத் தொகை கூடிக் கொண்டே இருக்கும். எனினும் அத்தொகை ஐந்து மில்லியன் டொலர்களை எட்டும் போது, 6 எண்களை யாரும் பொருத்தவில்லை என்றால், அதற்கு கீழ் நிலைகளிலுள்ள வெற்றியாளர்களுக்கு அதாவது ஐந்து அல்லது நான்கு அல்லது மூன்று எண்கள் பொருத்திய நபர்களுக்கு லொத்தர் பரிசுப் பணம் பகிர்ந்தளிக்கப்படும். இது ரோல்டவுண் முறை எனக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த வாரத சீட்டிழுப்பில் ரோல் டவுண் அமுல்படுத்தப்பட்டால் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் அது குறித்து அறிவிப்புச் செய்வர்.
கணிதத்தில் இளமானி பட்டம் பெற்றிருந்த ஜெரி செல்பி, கணிதத்தில் மிகத் தேர்ச்சியுடையவராக விளங்கினார். தனது கணிதத் திறமையைப் பயன்படுத்தி, இந்த லொத்தர்களில் வெல்ல முடியும் என நம்பினார்.
தனது கணிதத் திறமையைப் பயன்படுத்தி 2 மாநிலங்களில் மொத்தம் 26.85 மில்லியன் டொலர்களை ஜெரி செல்பி வென்றெடுத்தார்.
இதற்காக பல மில்லியன் டொலர் செலவில் லொத்தர் சீட்டுகளையும் ஜெரி செல்பி மற்றும் மார்கி செல்பி ஜோடியினர் வாங்கினர்
ஆரம்பத்தில், ஒரு வார குலுக்கலுக்குரிய லொத்தரில் எவ்வளவு தொகை செலவிட்டால் எவ்வளவு பரிசுப் பணம் என ஆராய்வதற்கு கணக்குகளைப் போட்டார் ஜெரி செல்பீ.
இதன்படி, டிக்கெட்டுகளுக்கு, 1,100 டொலர்களை செலவிட்டால் 4 இலக்கங்கள் சரியாகப் பொருந்தும் வெற்றியாளர்களில் ஒருவராகவும் (இதற்கு 1,000 டொலர் பரிசு கிடைக்கும்) 3 இலக்கங்கள் பொருந்தும் 3 வெற்றியாளர்களாகவும் (இவற்றுக்கு மொத்தம் 900 டொலர்கள் கிடைக்கும்) தான் விளங்குவதற்கு சாத்தியமுள்ளது என அவர் கணக்கிட்டார். அதாவது 1,100 டொலர்களை செவிட்டால் 1,900 டொலர்கள் பரிசு கிடைக்கும். இதன்படி 800 டொலர் லாபம் கிடைக்கலாம்.
இது தொடர்பாக தற்போது 83 வயதான ஜெரி செல்பீ அளித்த செவ்வியொன்றில், முதல் தடவை தான் 2,200 டொலர்களை டிக்கெட்டுகளில் செலவிட்டதாகவும், அத்தடவை 50 டொலர்களை தான் இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
லொத்தரில் ஆயிரக்கணக்கான டொலர்களை செலவிடப் போவதை தனது மனைவி மார்கியிடம் உடனடியாக ஜெரி செல்பீ கூறிவிடவில்லை.
இரண்டாவது தடவை ரோல்டவுண் அறிவிக்கப்பட்டபோது, 3,600 டொலர்களுக்கு லொத்தர் டிக்கெட்டுகளை வாங்கினார் அத்தடவை அவருக்கு 6,300 டொலர்கள் பரிசுகளாக கிடைத்தன. அதன்பின் 8,000 டொலர்களை செலவிட்டார். சுமார் இரு மடங்கு பணம் அவருக்கு கிடைத்தது.
அப்போதுதான் தனது சேமிப்புப் பணத்தை வைத்து தான் செய்து கொண்டிருப்பது என்ன என்பதை தனது மனைவியிடம் கூறுவதற்கு அது சரியான தருணம் என தீர்மானித்ததாக ஜெரி கூறுகிறார்.
மிச்சிகன் மாநிலத்தின் வின்பால் லொத்தரில் ஜெரி, மார்கி தம்பதியினர் இவ்வாறு 12 தடவைகள் பணத்தைக் கொட்டி, 26.5 லட்சம் டொலர்களை பரிசாக பெற்றனர். இதற்காக அவர்கள் 18 லட்சம் டொலர்களை செலவிட்டிருந்தனர்.
2005 ஆம் ஆண்டு மிச்சிகன் வின்பால் லொத்தர், அதிக விற்பனையின்மை காரணமாக மூடப்பட்டது.
எனினும் இத்தம்பதியினர் ஓய்ந்துவிடவில்லை. அருகிலுள்ள மசாசூசெட்ஸ் மாநிலத்தில், இது போன்ற லொத்தர் கேஷ் வின்பால் எனும் பெயரில் விற்பனையாகுவதை அறிந்த அவர்கள், சுமார் 900 மைல்கள் பயணம் செய்து அந்த லொத்தர் விளையாட்டிலும் ஈடுபட்டனர். மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 43 தடவைகள் இந்த லொத்தர் விளையாட்டில் ஈடுபட்டு 2.42 கோடி டொலர்களுக்கும் அதிகமான பணத்தை வென்றனர். இதற்காக 1.73 கோடி டொலர்களை அவர்கள் செலவிட்டிருந்தனர்.
2012 ஆம் ஆண்டு மசாசூசெட்ஸ் மாநிலத்தின் கே வின்பால் லொத்தர் மூடப்படும் வரை இவர்களின் ஆட்டம் தொடர்ந்தது.
அதிக டிக்கெட்களை வாங்குவதற்காக மேலும் பலரை கூட்டுச் சேர்த்து கொண்டார் ஜெரி செல்பீ.. இதற்கான தனி நிறுவனமொன்றையும் அவர் ஆரம்பித்தார். வருடாந்தம் 7 தடவைகள் லொத்தர்களை அவர்கள் குறிவைத்தனர்.
ஒரு தடவைக்கு 6 லட்சம் டொலர்களை செலவிட்டனர். அதாவது வருடாந்தம் 42 லட்சம் டொலர்களை செலவிட்டனர்.
ெமாத்தம் 55 தடவைகளில் 3 தடவைகள் மாத்திரம் இவர்கள் தோல்வியுற்றாக கூறப்படுகிறது.
சில வாரங்களில் ஜெரியும், மார்கியும் கடைகளுக்குச் சென்று லட்சக்கணக்கான எண்ணிக்கையில் லொத்தர் டிக்கெட்டுகளை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இவர்கள் அதிக எண்ணிக்கையான டிக்கெட்டுகளை வாங்குவது அரச அதிகாரிகளின் விசாரணைகளுக்கும் வழி வகுத்தது,
மசாசூசெட்ஸ் மாநிலத்தின் சில இடங்களில் அதிக எண்ணிக்கையில் கேஷ் வின்பால் டிக்கெட்டுகள் விற்பனையாகுவதாக பொஸ்டன் குளோப் பத்திரிகைக்கு 2011 ஆம் ஆண்டு தகவல் கிடைத்திருந்தது. சிலர் பெரும் எண்ணிக்கையான டிக்கெட்களை வாங்குது தொடர்பாக அப்பத்திரிகை விசாரித்தபோது, மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஜெரி செல்பீ குழுவும் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக கணிதவியலாளர்கள் குழுவொன்றும் இதில் ஆதிக்கம் செலுத்துவது தெரியவந்தது.
அச்செய்தி மசாசூசெட்ஸ் மாநில அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த லொத்தரில் ஏதேனும் மோசடி நடக்கிறதா என்பது குறித்து அவர்கள் ஆராய்ந்தனர். மாநில பொலிஸ் மா அதிபர் கிறேக் சுலீவன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
பல நபர்களிடம் விசாரணை நடத்தி, பல ஆவணங்களை ஆராய்ந்த பின், ஜெரி செல்பீ குழுவினரும் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக குழுவினரும் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டது.
மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக குழுவில் பொஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் நோர்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம்பெற்றிருந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதேவேளை தாம் வாங்கி, பரிசு கிடைக்காத லொத்தர் சீட்டுகளையும் கணக்காய்வுகளுக்காக செல்பீ தம்பதியினர் சேகரித்து வைத்திருந்தனர். 1.8 கோடி டொலர் பெறுமதியான இத்தகைய லொத்தர் சீட்டுகள் 60 இற்கும் அதிகமான பிளாஸ்டிக் கொள்கலன்களில் இவர்கள் சேகரித்து வைத்திருந்தனர்.
2012 ஆம் ஆண்டு கேஷ் வின்பால் லொத்தர் மூடப்படு;வரை இவர்களின் லொத்தர் வேட்டை தொடர்ந்தது. தற்போதும் எப்போதாவது லொத்தர சீட்டுகளை வாங்குவதாக ஜெரி செல்பீ கூறுகிறார்.
இவர்களின் கதையை விளக்கும் ஜெரி அன்ட் மார்கி கோ லார்ஜ் திரைப்படத்தில் ஜெரி செல்பீயின் பாத்திரத்தில் பிறையன் கிரான்ஸ்டன் நடித்துள்ளார். மார்கி செல்பீயின் பாத்திரத்தில் அனட் பெனின் நடித்துள்ளார். இப்படத்தை டேவிட் பிரான்கெல் இயக்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM