(நா.தனுஜா)
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அடிமைத்துவத்தின் நவீன வடிவங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் இலங்கையில் இன்னமும் நவீன வடிவங்களில் அடிமைத்துவம் தொடர்வதைப் புரிந்துகொள்ளமுடிவதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா, உள்ளுராட்சி மற்றும் தேசிய மட்டத்திலான முக்கிய கட்டமைப்புக்களுக்கு பெருமளவில் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்த தலைவர்களை நியமித்தல், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதைத் தவிர்த்தல் உள்ளடங்கலாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டிய 46 பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா, அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், சுதந்திர வர்த்தக வலயப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து நாட்டின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்ததுடன் மதிப்பீடுகளையும் மேற்கொண்டிருந்தார்.
நாட்டில் சுமார் ஒருவாரகாலம் (நவம்பர் 26 2021 - டிசம்பர் 3 2021) தங்கியிருந்த அவர், தனது அவதானிப்புக்கள், மதிப்பீடுகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய ஆரம்ப அறிக்கையொன்றை ஏற்கனவே வெளியிட்டிருந்ததுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் முகங்கொடுத்திருக்கும் அடிமைத்துவத்தின் நவீன வடிவங்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கையில் விரிவாக சுட்டிக்காட்டியிருக்கும் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா, அரசின் முக்கிய கட்டமைப்புக்கள் மற்றும் பணியிடங்கள் மிகையான அளவில் இராணுவமயமாக்கப்படலும் அதன்விளைவாக சிவில் சமூக இடைவெளியில் ஏற்பட்டுள்ள தாக்கங்களும், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளுக்கு எதிராக அதிகரித்துவரும் அடக்குமுறைகளும் கண்காணிப்புக்களும், தொழிலாளர்நிலை தொடர்பான செயற்திறன்மிக்க கண்காணிப்பு இன்மை, தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுக்கு உரியவாறு நீதியையும் தீர்வையும் பெற்றுக்கொள்ளமுடியாமை, தொழிலாளர் உரிமைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமை, தொழிற்படை குறித்து உரியவாறு தகவல்கள் பேணப்படாமை ஆகிய விடயங்கள் தொடர்பிலும் விசேடமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
'அடிமைத்துவத்தின் நவீன வடிவங்களைத் தடுப்பதற்கென இலங்கை சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. முக்கிய சர்வதேசப்பிரகடனங்கள் சிலவற்றை அலுல்படுத்தல், தற்போது அரசாங்கம் மேற்கொண்டுவரும் சட்டத்திருத்தங்களுடன் இணைந்ததாக சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத வலயங்களை உருவாக்கல் போன்ற நடவடிக்கைகள் பாராட்டப்படவேண்டியவையாகும்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அடிமைத்துவத்தின் நவீன வடிவங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் இலங்கையில் இன்னமும் நவீன வடிவங்களில் அடிமைத்துவம் தொடர்வதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. அத்தோடு கௌரவமான தொழில் மற்றும் அதற்கு உகந்தவாறான எவ்வித ஒடுக்குமுறைகளுமற்ற வேலைச்சூழல் என்பவற்றை உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்' என்று ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா அவரது இறுதி அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில் வேலைவாய்ப்பிற்காகப் புலம்பெயர்தல் தொடர்பான பிரகடனம், தனியார் வேலைவாய்ப்பு முகவரகப் பிரகடனம், தொழிலாளர் பிரகடனம், வன்முறைகள் மற்றும் அத்துமீறல் பிரகடனம் உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளுடன் தொடர்புடைய பிரகடனங்களை அமுல்படுத்தல், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எவ்வித ஒடுக்குமுறைகளுமற்ற சமத்துவமான வேலைச்சூழலை உறுதிசெய்யும் வகையில் தொழில்புரிவதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், அதிக நிதி மற்றும் மனிதவள ஒதுக்கீட்டின் மூலம் தொழிலாளர் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல், மீளச்செலுத்தும் இயலுமைக்கு ஏற்றவாறான கடன்வழங்கல் தொடர்பில் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல், உள்ளுராட்சி மற்றும் தேசிய மட்டத்திலான முக்கிய கட்டமைப்புக்களுக்கு பெருமளவில் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்த தலைவர்களை நியமித்தல், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதைத் தவிர்த்தல் உள்ளடங்கலாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டிய 46 பரிந்துரைகளையும் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா அவரது இறுதி அறிக்கையில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM