( எம்.எப்.எம்.பஸீர்)
சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான அறிவியல் ஆய்வுக் கப்பலான ' யுவான் வாங் 5' எனும் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி செவ்வாயன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த தினம் இந்த கப்பல் இலங்கையின் தனித்துவமான பொருளாதார வலயமாக கருதப்படும் 12 கடல் மைல் எல்லைக்குள் (territorial waters) பிரவேசிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், பெரும்பாலும் அன்றைய தினம் குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் எனவும் உயர் மட்ட தகவல்கள் வெளிப்படுத்தின.
இந் நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் துறைமுக மா அதிபரிடம் இது குறித்து வினவிய போது, குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு இதுவரை தனது அனுமதியைப் பெறவில்லை என குறிப்பிட்டார்.
'அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவினால் நிர்வகிக்கப்பட்டாலும், அதற்குள் எந்தவொரு கப்பல் நுழைவதானாலும் எனது அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு உள் நுழைய அனுமதி கோரப்பட்டால் அது குறித்து ஆராயப்படும் ' என துறைமுக மா அதிபர் குறிப்பிட்டார்.
இந் நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்த சீன கப்பல், அம்பாந்தோட்டையை வந்தடையும் என கூறப்படுவது தொடர்பில் தற்போதைய சூழலில் எந்த கருத்தினையும் வெளியிட முடியாது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
16 ஆம் திகதி குறித்த கப்பல் அம்பாந்தோட்டையை வந்தடையும் என வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அமைச்சு அறிந்துள்ளதாகவும், எனினும் அதனை உறுதிப்படுத்தி தகவல் வெளியிட தற்போதைக்கு முடியாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் கடந்த ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த நிலையில், இதுவரை எந்தத் துறைமுகத்திற்கும் செல்லாமல் இலங்கையை நோக்கி பயணித்து வருகின்றது. இதனால் கடந்த ஒரு மாதமாக இந்த கப்பலுக்கு தேவையான எரிபொருள் உணவு மற்றும் பானங்கள் மீள் நிரப்பப்படவில்லை.
இவ்வாறான நிலையில் கடந்த 10 ஆம் திகதி ' யுவான் வாங் 5' கப்பல் தனது பயணப் பாதையை மாற்றியமையை அவதானிக்க முடிந்திருந்தது.
அம்பாந்தோட்டை நோக்கி வரும் அதன் பயணப் பாதை மாற்றப்பட்டு அந்தமான் ந்ப்ப்க்கியதாக பயணப் பாதை அமைந்த போதிலும், கடந்த 11 ஆம் திகதி முதல் அது சரியான பயணப் பாதையில் அம்பாந்தோட்டை நோக்கி பயணித்து வருகிறது.
ஏ.ஐ.எஸ். தரவு மேற்பார்வையின் பிரகாரம், ' யுவான் வாங் 5' நேற்று முன் தினம் மாலை, இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு அருகே அமைந்துள்ள Ninety East Ridge எனும் கடல் அடிவாரத்தில் அமைந்துள்ள மலைத் தொடருக்கு மேலால் பயணிக்கின்றமை தெரியவந்தது. அதன்படி அதன் பயணம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கியுள்ளமை மேலும் உறுதியாகியுள்ளது
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி ஏற்கனவே வழங்கக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 28 ஆம் திகதி சீனா முன் வைத்த கோரிக்கைக்கு அமைய கடந்த ஜூலை 12 ஆம் திகதி இதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 8 ஆம் திகதி, குறித்த கப்பல் இந்து சமுத்திரத்துக்குள் நுழைந்த பின்னர் , சீன தூதரகத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு, கப்பலின் பயணத்தை சற்று தாமதிக்குமாறு கோரி எழுத்து மூல கோரிக்கையினை முன் வைத்திருந்தது.
எனினும் அப்போதும் இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த யுவான் வாங் 5 கப்பல் வேகத்தைக் குறைத்துள்ள போதும் , இலங்கை நோக்கிய அதன் பயணம் தொடர்கிறது.
' யுவான் வாங் 5' கப்பலானது 750 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் அமைந்துள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டது என கூறபப்டுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அக்கப்ப்ல் வந்தடையுமால், இந்தியாவின் தெற்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலையங்கள், ஆறு துறைமுகங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென எகொனொமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இதில் அடங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், குறித்த கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் அனுமதிக்காமல் இருக்க இந்தியா, அமரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் பிரயோகிப்பதாகவும், அதனாலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சு கப்பலை தாமதிக்குமாறு சீனாவுக்கு அறிவித்ததாக கூறப்பட்டது.
எனினும் இந்த சீன கப்பல் விவகாரத்தில் இலங்கை, இறைமை மிக்க நாடு என்ற வகையில், சுயாதீன தீர்மானம் ஒன்றினை எடுக்க முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் 12 ஆம் திகதி இதனை இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
' இந்த கப்பல் விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றோம். இலங்கை இரமியுள்ள ஒரு நாடு. அது சுயாதீனமாக முடிவெடுக்க முடியும்.
நாம் எமது அபிலாஷைகளுக்கு அமைய சிறந்த தீர்மானங்களை எடுப்போம். அது வலயத்தில் நிலவும் நிலைமை மற்றும் தேச எல்லை உள்ளிட்டவற்றை மையப்படுத்தியதாக அமையும்.' என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான அறிவியல் ஆய்வுக் கப்பலான ' யுவான் வாங் 5' 16 ஆம் திகதி அம்பாந்தோட்டையை அடையும் எனும் விடயம் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM