சீனா எதிர்கொள்ளும் சவால்

Published By: Digital Desk 5

13 Aug, 2022 | 01:51 PM
image

ஹரிகரன்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, சர்வதேச ரீதியாக சீனாவுக்கு சவாலான நிலையை தோற்றுவித்திருக்கிறது.

கொரேனா தொற்று மற்றும் உக்ரேன் மீதான படையெடுப்பு என்பன இந்த நெருக்கடிக்கு முக்கியமான காரணங்களாக சொல்லப்பட்டாலும், அதற்குப் பின்னால் பல காரணிகள் இருப்பது உண்மை.

அந்தக் காரணிகளில் ஒன்று இலங்கைக்கு கட்டுப்பாடற்ற வகையில் சீனா வழங்கிய கடன்கள் ஆகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தான், இலங்கைக்குள் சீனா வலுவாக நுழைய ஆரம்பித்து.

2007இல், அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானத்தில் ஆரம்பித்த இந்த உறவு, நுரைச்சோலை அனல்மின் திட்டம், மத்தள விமான நிலைய திட்டம், நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மைதானங்கள், அரங்குகள் என பரந்துபட்ட அளவில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவை அனைத்தும் சீனாவிடம் பெறப்பட்ட கடன்களினால் தான் சாத்தியமாகின. வெளிப்புறத் தோற்றத்துக்கு இவை இலங்கையின் மிகப் பெரிய அபிவிருத்தியாக தோற்றத்தைக் காண்பித்தாலும், முதலீட்டுக்கு ஏற்ற வருமானத்தை தருவதாகவும் இருக்கவில்லை.

கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறனையும்  உருவாக்கவில்லை. இது தான் முதல் பிரச்சினை. ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது, கடனை அடைப்பதற்கு போதிய வருமானம் கிடைக்குமா என்று, கணக்கிட வேண்டும். 

அது சாத்தியப்படாது போனால், அந்த திட்டத்தையும் செயற்படுத்த முடியாமல் போகும், மோசமான கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளவும் நேரிடும்.

இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் சீனாவிடம் வரம்பின்றிப் பெற்ற கடன்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாமல் போன போது, பொருளாதார நெருக்கடி ஆரம்பித்து விட்டது.

கடனைச் செலுத்த கடனை வாங்கிக் கொள்ளத் தொடங்கிய போது கூட, நெருக்கடி மோசமடையவில்லை. நாளாந்த இறக்குமதிகளுக்குத் தேவையான டொலர் முற்றாக வற்றிப்போகும் நிலை ஏற்பட்ட போது, கூடவே சுற்றுலா வருமானமும் படுத்து, உக்ரேன் போர் நெருக்கடியும் தீவிரமடைந்த போது தான், நிலைமை சிக்கலானது.

இலங்கையின் மொத்த கடன் தொகையில் 10 சதவீதம் மட்டுமே சீனாவுக்கு வழங்கப்பட வேண்டியது என்றும், சீனாவின் கடன் பொறி என்பது மேற்குலகின் பொய்யான பிரசாரம் என்றும் அண்மையில் கம்போடியாவின் தலைநகர் நொம்பென்னில் இலங்கை மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துப் கொண்ட போது கூட வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் ‘கடன்பொறி’ என்ற குற்றச்சாட்டை நிராகரித்துக் கருத்து வெளியிட்டிருந்தார்.

நல்லாட்சி அரசின் காலத்தில், நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க இருந்த போது, கடன்பொறிக் குற்றச்சாட்டை முதன் முதலில் முன்வைத்திருந்தார்.

பின்னர் சில மாதங்களிலேயே சீனாவின் அழுத்தங்களைச் சமாளிக்க முடியாமல் அவர், அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.

இப்போதும் சீனாவின் பொருளாதார அழுத்தங்களால் தான், கடன் பொறிக் குற்றச்சாட்டை இலங்கை  மறுத்து வருகிறது.

தன்னிடம் கடன் பெற்ற நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் போது கூட, சீனா இரக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை.

இலங்கையிடம் இருந்து கடைசி வரை தனக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை திரும்ப பெறுவதிலேயே கவனம் செலுத்தியது.

இப்போது மீண்டும் மீண்டும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டாலும், சர்வதேச நாணய நிதியம் கூட சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடு ஒன்றை எட்டுமாறு கூறிய போதும், சீனா அதற்கு சரியான பதிலை அளிக்கவில்லை.

நெருக்கடியில் சிக்கிய நாடுகளைக் காப்பாற்ற சீனா முன்வரவில்லை. இதுவே அதன் பாரம்பரியமாக மாறி வருகிறது.

“வளர்ந்து வரும் நாடுகள் சீனாவின் பாதை மற்றும் அணை முன்முயற்சியின் மூலம் அதிக கடன்களைப் பெறுவது குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்” என்று சில நாட்களுக்கு முன்னர், பங்களாதேஷின் நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமால் எச்சரித்திருக்கிறார்.

உலகளாவிய பணவீக்கம் மற்றும் வளர்ச்சி குறைந்து வருவதால் கடனில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளில் அழுத்தங்கள் அதிகரிக்கின்றன அவர் கூறியிருக்கிறார்.

“எல்லோரும் சீனாவைக் குற்றம்சாட்டுகிறார்கள். சீனா அதற்கு உடன்பட மறுக்கிறது. ஆனால் இது அவர்களின் பொறுப்பு.

எந்தெந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சீனா போதுமான அளவு கடுமையாக இருக்கவில்லை என்பதை இலங்கையின் நெருக்கடி எடுத்துக் காட்டுகிறது.

ஒரு திட்டத்திற்கு கடன் கொடுப்பதற்கு முன் "முழுமையான ஆய்வு" செய்ய வேண்டும்.

இலங்கைக்குப் பின்னரும்,  இந்த குறிப்பிட்ட அம்சத்தை சீன அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று நாங்கள் உணர்ந்தோம், இது மிகமிக முக்கியமானது.” என்றும் பங்களாதேஷ் நிதியமைச்சர் இந்தியாவின் பினான்சியல் ரைம்ஸ் செவ்வியில் குறிப்பிட்டிருக்கிறார்.

சீனாவின் பொறுப்பற்றதனம், நாடுகளைப் பொறியில் தள்ளுகிறது என்ற குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துகிறது இவரது கருத்து.

இலங்கை மாத்திரமன்றி, பாகிஸ்தானும், இதே கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அதுபோல பங்களாதேசும் ஆபத்தான நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆபிரிக்கா தொடங்கி, கிழக்காசியா வரையாக பல நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியிருக்கின்றன.

இந்தக் கடன்பொறியை சீனா அபிவிருத்தி என்ற போர்வையில் தான் முன்வைக்கிறது.

ஆனால் அவை செயற்திறன் வாய்ந்த திட்டங்களாக இருக்க வேண்டும் என்பதில் சீனா ஒரு போதும் கவனம் செலுத்தவில்லை.

அல்லது அந்த திட்டங்கள் தங்களின் எதிர்கால நலன்களுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்கிறது.

பங்களாதேஷ் நிதியமைச்சரின் கருத்து, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்துடன் ஒத்துப் போகிறது.

ஆனால் அப்போது சீனாவிடம் இருந்து முழுமையாக விலகிக் கொள்ள முடியாத நிலையில் இலங்கை இருந்ததால், ரவி கருணாநாயக்க சில வாரங்களிலேயே பீஜிங்கிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த நிலை பங்களாதேஷ் நிதியமைச்சருக்கு வராது என்று கூறமுடியாது. ஆனாலும், சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் கடன் நெருக்கடி அதற்கு கடுமையான சவாலாகவே மாறி வருகிறது என்பதை அவரது கருத்து உணர்த்துகிறது.

சீனாவின் கடன்பொறி தொடர்பாக சர்வதேச அளவில் இப்போது தீவிர பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு இலங்கை உதாரணமாக காட்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சீனாவைப் பொறுத்தவரையில் முக்கியமானதொரு கேந்திரமாக இருந்தாலும், அதனை கடன்பொறியில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு, கடன் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு இன்று வரை இணங்கவில்லை.

இது ஏனைய நாடுகளை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது. 

பங்களாதேஷ் போன்ற நாடுகளின் எச்சரிக்கைகள் அந்த நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

இது சீனாவின் பூகோள அரசியல் நிலையை மாத்திரமன்றி பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும்.

ஏனென்றால் சீனாவின் பொருளாதாரம், தற்போது, உள்நாட்டில் மட்டும் கட்டியெழுப்பப்படவில்லை. கடன்பொறி இராஜதந்திரம், மற்றும் கடல்கடந்த திட்டங்களினாலும், கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13