(எம்.மனோசித்ரா)
இலங்கை - சீன உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏனைய நாடுகளுடன் உறவுகளை பேணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
சீன கண்காணிப்பு கப்பல் விவகாரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நமது வெளியுறவுக் கொள்கையில் எந்தளவு தலையிடுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் விசனம் வெளியிட்டுள்ளன.
சீனாவுடனான இராஜதந்திர மட்டத்தில் தவறான புரிதல்களையும் பிரிவினைகளையும் நம் நாடு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிக்கமைய சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரவேசிப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
சர்ச்சைக்குரிய சீன கண்காணிப்பு கப்பல் விவகாரம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி , இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிசக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, பிவிதுர ஹெல உருமய, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, விஜய தரணி தேசிய சபை, யுத்துகம தேசிய அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நாட்டில் தற்போது நிலவும் கடும் பொருளாதார , அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்குள் வெளிநாட்டு கொள்கையை புத்திசாலித்தனமாகவும் , சரியாகவும் கையாள்வது எந்தளவிற்கு முக்கியத்துவமுடையது என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை.
கடந்த 5 ஆம் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் , 'சீனாவின் யுவான் வாங் 5 என்ற கண்காணிப்பு கப்பலுக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரவேசிப்பதற்கு கடந்த 12 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்டதாகவும் , எவ்வாறிருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் மேலும் கலந்தாலோசிக்கும் வரை கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறும்' குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் துறைமுகத்திற்குள் , கூட்டு இராணுவ பயிற்சிகளுக்காக ஏனைய நாடுகளின் கப்பல்கள் வருகை தந்துள்ளன. அவ்வாறு இந்நாட்டுக்குள் பெருமளவான அமெரிக்காவின் கப்பல்களே வருகை தந்துள்ளன. பிரான்ஸ், இந்தியா மற்றும் வேறு நாடுகளின் கப்பல்கள் இடைக்கிடை வருகை தந்துள்ளன.
இந்நிலையில் சீனக் கப்பலால் இந்தியாவின் முக்கிய தரவுகள் சேகரிக்கப்படலாம் எனத் தெரிவித்து , அக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த கப்பலுக்கு இந்தியாவின் தரவுகளை சேகரிப்பதற்கான இயலுமை காணப்படுகிறது எனில் , அதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவேண்டிய தேவை கிடையாது. மறுபுறம் கடந்த ஜூலை 12 ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இலங்கைக்கு வருகை தந்து கொண்டிருக்கும் கப்பலுக்கு தற்போது திடீரென திரும்பிச் செல்ல முடியாது.
சீனக் கப்பல் இலங்கைக்கு வருகை தடுக்குமாறு கோரி இந்திய மற்றும் அமெரிக்க தூதுதரகங்களால் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
சீன கண்காணிப்பு கப்பல் விவகாரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நமது வெளியுறவுக் கொள்கையில் எந்தளவு தலையிடுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. எமது வெளியுறவுக் கொள்கையானது நாட்டின் நலன்களை விட வெளிநாட்டு நலன்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு பாரியளவிலான பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. இந்தியாவைப் போன்று, சீனாவுடனான இராஜதந்திர மட்டத்தில் தவறான புரிதல்களையும் பிரிவினைகளையும் நம் நாடு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து அரசியல் சக்திகளும் உருவாகி வரும் நெருக்கடியான சூழ்நிலை தொடர்பில் கவனம் செலுத்துமாறு அழைப்பு விடுக்கின்றன.
இலங்கை - சீன உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏனைய நாடுகளுடன் உறவுகளை பேணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியின்படி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் கப்பல் நுழைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கைக்கும் சீன மக்களுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளைப் பேணுவதற்கும் இருதரப்பு உறவுகளைப் பாதுகாப்பதற்கும் இராஜதந்திர வழிகளில் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM