(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)
சர்வக்கட்சி அரசாங்கம் என்ற பெயரில் ராஜபக்ஷர்களை மாத்திரம் ஒன்றினைத்து போலியான அரசாங்கத்தை ஸ்தாபித்தால் பொருளாதார மீட்சிக்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாது.
மக்களாணை இல்லாத அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை வெற்றிக்கொள்வது பிரச்சினைக்குரியது.நாட்டு மக்களிடம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு சிறந்த முறையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷடி சில்வா சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தனி ஒருவரால் மாத்திரம் தீர்வு காண முடியாது.பொருளாதார மீட்சிக்கு குழுவாக ஒன்றினைந்து சிறந்த திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.கடினமாக நடவடிக்கைகளை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் சிறந்ததாக அமைய வேண்டும் என்பதற்காகவே சர்வக்கட்சி அரசாங்கத்தை குறுகிய கால அடிப்படையில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொருளாதாரம் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.அரசாங்கததிற்கு இவையனைத்தையும் செய்ய முடியுமா என்பது பிரச்சினைக்குரியது.ராஜபக்ஷர்களை ஒன்றிணைத்த அரசாங்கம் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.அரசாங்கத்திற்கு உண்மையில் மக்களாணை கிடையாது.
டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி கறுப்பு சந்தையில் 400 ரூபாவிற்கும் அதிகமாக செல்கிறது.வங்கியில் 300 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடிகிறது.
மக்களாணையில்லாமலே அரசாங்கம் செயற்படுகிறது.ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதை போன்று அரசாங்கமும் வீழ்ச்சியடையும்.மக்களை ஏமாற்றும் அரசாங்கம் ராஜபக்ஷர்களின் அரசாங்கம் என்று குறிப்பிடுவதில் தவறொன்றுமில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் அரசியலமைப்பிலானது.அரச தலைவர்களை பதவி விலகுமாறு வலியுறுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.சகல பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பிற்குட்பட்ட வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவை நாட்டு மக்கள் அங்கீ கரிப்பார்களா என்பது கேள்விக்குட்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது. கடன் மறுசீரமைப்பிற்கு உரிய பொறுத்தமான பேச்சுவார்த்தைகள் கூட இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.மக்களின் நம்பிக்கையில்லாத அரசாங்கம் எவ்வாறு பொருளாதார நெருக்கடியினை வெற்றிக்கொள்ளும்.
நாட்டு மக்களை அச்சமடைய செய்து பொருளாதாரத்தை ஒருபோதும் மறுசீரமைக்க முடியாது.நாட்டில் அமைதி நிலை காணப்படும் சூழலில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்களிடம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு வலியுறுத்தவில்லை.தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை தவறானது என்பதை அப்போதைய அரசாங்கத்திடமும்,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன்,மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர ஆகியோரிடமும் தொடர்ந்து குறிப்பிட்டோம்.எமது நிலைப்பாட்டையே தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றிலும் குறிப்பிட்டார்.
சர்வக்கட்சி அரசாங்கம் என குறிப்பிட்டுக்கொண்டு தமக்கு தேவையானவர்களை மாத்திரம் இணைத்துக்கொண்டு இடைப்பட்ட காலத்தை முன்னெடுத்து செல்ல முயற்சிப்பது முற்றிலும் தவறானது.போலியான வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதார மீட்சிக்காக நாம் தயாரித்த திட்டத்தை சபையில் சமர்ப்பிக்கிறேன்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பொருளாதார கொள்கையினை ஏற்றுக்கொள்கிறேன்.பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.அவற்றை செயற்படுத்தி சிறந்த முறையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM