( எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், வௌிநாடு செல்ல உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட பிரதிவாதிகளான மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷ்மன், அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலர் எஸ். ஆர். ஆட்டிகல ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லப் போவதில்லை என நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ள நிலையில், அந்த உறுதிப் பாடும் எதிர்வரும் செப்டம்பர் 5 வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் புதன்கிழமை ( 10) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, , விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டன. இதன்போதே இதர்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட போது, கலாநிதி மஹிம் மென்டிஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தனது வாதங்களை தொடர்ந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வர்த்தகர்களுக்கு வழங்கிய 691 பில்லியன் ரூபா வரிச் சலுகை காரணமாக தற்போதைய பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தும், இவ்வாறு தாந்தோன்றித்தனமாக வரிச் சலுகை அளித்தமை தூரனோக்கற்ற செயல் என அவர் வர்ணித்தார்.
அதனால் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு பிரதிவாதிகள் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய வாதிட்டார்.
அதன் பின்னர் இம்மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரை ஒத்தி வைக்கப்பட்டன.
இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும்ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆகியோரும் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நரின் புள்ளேவும் ஆஜராகின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM