(எம்.மனோசித்ரா)
சீன இராணுவ கண்காணிப்பு கப்பலின் வருகை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.
இந்தக் கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு முன்னெடுப்பும் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் நேரடி தாக்கத்தை செலுத்தும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் 08 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அந்நிய செலாவணியை ஈட்டுதல் மற்றும் சர்வதேச தொடர்புகளைப் பேணுதல் என்பன முக்கிய காரணிகளாகவுள்ளன. பூகோள அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் அமைவிடம், அதன் இறையான்மையிலும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது சீன இராணுவக் கப்பலின் வருகையை ஒத்தி வைக்குமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க சபாநாயகரின் தாய்லாந்து விஜயத்தைத் தொடர்ந்து , தாய்லாந்தில் சீனாவின் முன்னெடுப்புக்களின் அடிப்படையில் அவதானிக்கும் போது, கப்பல் விவகாரத்தில் இலங்கையின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இதே வேளை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே இலங்கையின் நட்பு நாடுகள் ஆகும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் ஏதேனுமொரு நாட்டுடனான நட்புறவில் பாதிப்பையே ஏற்படுத்தும்.
எவ்வாறிருப்பினும் இந்த சர்ச்சை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ, பிரதமர் தினேஷ் குணவர்தனவோ அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியோ உத்தியோகபூர்வமாக எந்தவொரு நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.
இவர்களால் இவ்விடயம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை இலங்கையின் பாதுகாப்பு கேள்விக்குரியாகவே காணப்படும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இக்கப்பலின் வருகைக்கு அனுமதியளித்துள்ளதாகவும் , இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு இதே போன்றதொரு கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது. அது மாத்திரமின்றி ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கூட இது போன்ற கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்தக் கப்பலின் வருகையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை செலுத்தும் என்று டில்லி தெரிவித்துள்ளது. நாட்டை நோக்கி வருகை தந்து கொண்டிருக்கும் கப்பலொன்றை திருப்பி அனுப்புவது இலகுவானதொரு காரணியல்ல. எனவே இந்தக் கப்பல் நாட்டுக்கு வருகை தந்து அதன் பின்னர் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதை விட , பிரச்சினைகள் தோற்றம் பெற முன்னரே அவற்றை தடுப்பதே சிறந்ததாகும்.
எவ்வாறிருப்பினும் இந்தக் கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு முன்னெடுப்பும் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். சீனா ஏற்கனவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரையில் சாதகமான பதிலை வழங்கவில்லை. ஆனால் இந்தியா , சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் நேரடியாக தலையிட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. எனவே அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தாமல் இதுகுறித்த உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM