(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ள நிலையில் பூகோள அரசியல் நெருக்கடியினையும் யுவான் வாங் - 05 கப்பல் விவகாரத்தில் எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சம் தோற்றம் பெற்றுள்ளது.
சர்ச்சைக்குரிய சீன கண்காணிப்பு கப்பலின் அம்பாந்தோட்டை துறைமுக வருகையினை பிற்போடுமாறு இலங்கை அரசாங்கம் சீன தரப்பிற்கு அறிவித்ததை தொடர்ந்து சீனா அதற்கு அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்து –பசுபிக் பிராந்தியத்தின் அதிகார போட்டிற்குள் இலங்கை உட்படுத்தப்படும் நிலைமை காணப்படுகிறது. அணிசேரா கொள்கையினை கடைப்பிடிக்காமல் செயற்படுவதால் நட்பு நாடான சீனாவை பகைத்துக்கொள்ள நேரிடும் என தென்னிலங்கை அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்து சமுத்திரத்திற்கு சீன கப்பல் வருகை தருவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்திய ஊடகங்கள் மாத்திரமன்றி, தென்னிந்திய அரசியல் தரப்பினரும் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.
யுவான் வாங்-05 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய இந்த கப்பல் நாளை மறுதினம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி வரை தரித்திருக்கும் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்து.
எரிபொருள் மற்றும் இதர தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக யுவாய் வாங் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதாக குறிப்பிடப்பட்டது. இருப்பினும் இந்தியா இந்த கப்பல் விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன்,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்துவதாக அறிவித்திருந்தது.
யுவான் வாங் 05 என்ற கப்பலானது 2007ஆம் ஆண்டு சீனாவின் தேசிய கொடியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு,கண்காணிப்பு கப்பலாகும்.இந்த கப்பல் 11000 மெற்றிக்தொன் எடையுடைய பொருட்களை ஏற்றிச் செல்ல கூடியதுடன்,222 மீட்டர் நீளமும்,25.2 மீட்டர் அகலமும் உடையது.
சீனாவின் விண்கல கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-05 லொன்ங் மார்ச்-5பி ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல்சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்க பயன்படுத்தப்படுகிறது.2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உறுப்பு நாடாக சீனா ஆர்வம் காட்டியது, எனினும் சீனாவின் உறுப்புரிமை கோரிக்கை பலமுறை நிராகரிக்கப்பட்;டது.இவ்வாறான பின்னணியில் யுவான் வாங் -05 அறிவியல் ஆராய்ச்சி கப்பல் சீனாவிற்கு முக்கியமானதாக காணப்படுகிறது.
விண்வெளி மற்றும் செயற்கை கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் -05 கப்பலை சீனாவின் உளவு கப்பலாக இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்துகின்றன. இந்த கப்பலின் வான் வழி 750 கிலோ மீற்றருக்கு அதிகமாக உள்ளதால் தென்னிந்தியாவின் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகின்றன அனு ஆராய்ச்சி மையங்களை மறைமுகமாக இந்த கப்பலினால் கண்காணித்து தகவல் சேகரிக்க முடியும் என இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் கேரளா,தமிழ் நாடு மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளிலுள்ள துறைமுகங்களையும் இந்த கப்பலினால் கண்காணிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது.தென்னிந்தியாவிலுள்ள 06 துறைமுகங்கள் சீனாவின் அவதானத்திற்கு உட்படுத்தப்படுவதுடன்,தென்னிந்தியாவை அண்மித்துள்ள முக்கிய இடங்களின் இரகசிய தகவல்களை இந்த கப்பலினால் சேகரித்துக்கொள்ள முடியும் என இந்திய ஊடகங்கள் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளன.யுவான் வாங் --5 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவது தொடர்பில் புதுடில்லி அதிக அவதானம் செலுத்தியுள்ளது.
சீனாவின் சட்டரீதியிலான கடல்வார் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என சீனா குறிப்பிட்டுள்ளது.1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 99 வருடகால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகமானது ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் பிரதான கடன் மார்க்கத்தின் முக்கிய துறைமுகமாக காணப்படுகிறது.
யுவான் வாங் -05 என்ற கண்காணிப்பு கப்பல் கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்ஜின் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து,நாளை மறுதினம் (11) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய திட்டமிட்டிருந்தது. 2014ஆம் ஆண்டு சீனாவின் நீழ்மூழ்கி கப்பல் மற்றும் இராணுவ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தர இலங்கை அனுமதி வழங்கியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
இவ்வாறான பின்னணியில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நாளை மறுதினம் வருகை தரவிருந்த யுவான் கப்பல் விவகாரத்திற்கும் இந்தியா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.ஆசியாவின் கடல் மார்க்கத்தில் மையத்தில் உள்ள இலங்கை இவ்வாறான சூழ்நிலையில் யுவான் கப்பலின் வருகையை பிற்போடுமாறு அறிவித்துள்ளமைக்கு சீனா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பு,இலங்கையின் தீர்மானம்,சீனாவின் அதிருப்தி ஆகியவை இலங்கையின் பொருளாதார நிலைமைக்கு எந்தளவிற்கு செல்வாக்கு செலுத்தும் என்பது அவதானத்திற்குரியது.இலங்கையின் பிரதான கடன் வழங்குநராக காணப்படும் சீனா கடன் மறுசீரமைப்பிற்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM