ஸ்டாலினை நெருங்குகிறாரா மோடி

Published By: Digital Desk 5

06 Aug, 2022 | 07:15 PM
image

குடந்தையான்

தமிழகத்திற்கு கடந்த வாரம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் வழங்கப்பட்ட வரவேற்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் நடைபெற்ற அரச விழாவில் பங்குபற்றிய போது, அவரை ‘ஒன்றிய அரசின் பிரதமர்’ என்று விளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது ‘இந்திய அரசின் பிரதமர்’ என்று அழைத்ததை குறிப்பிட்டு, தி.மு.க.வும், அதன் தலைவரான ஸ்டாலினும், பா.ஜ.க. விடயத்தில் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்துடன் கடந்த அ.தி.மு.க. அரசைப்போல தற்போதைய தி.மு.க. அரசும் மத்திய அரசின் கைபாவையாகவும், அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் அடிமை அரசாகவும் மாறிவிட்டது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக தி.மு.க. முட்டுக்கொடுத்து பாதுகாத்து செல்வதாகவும், முழுமையாக சரணடைந்து விட்டதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

குறிப்பாக கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வன்முறை விவகாரத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டிய பொலிஸாரும், மாநில உளவுத்துறையும், மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரின் விருப்பத்திற்கேற்ப நடந்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. 

ஆனால் இது குறித்து தமிழக முதல்வர் தொடர்ந்து கனத்த மௌனத்தைக் கடைபிடிப்பதாகவே அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அத்துடன் எதிர்காலத்தில் பா.ஜக.வும், தி.மு.க.வும், வாஜ்பாய் காலகட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட தேர்தல் கூட்டணி போல் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின்; மாறவில்லை. பிரதமருக்குரிய மரியாதையைத் தான் அவர் அளித்தார். அதேநிகழ்ச்சியில் பங்குபற்றிய அமைச்சர் முருகனை, ‘ஒன்றிய அமைச்சர்’ என்று தான் ஸ்டாலின் குறிப்பிட்டார். கேரளாவின் முன்னணி ஊடகம் ஒன்றின் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்குபற்றி காணொளி வழியாக பேசிய ஸ்டாலின், ‘ஒன்றிய அரசின் மீதான குற்றச்சாட்டை வழமையாக முன்வைத்தார் என்று தி.மு.க.தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஒன்றிய அரசு ஆளுநர் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் இரட்டை ஆட்சி நடத்துவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார் அதனால் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் தி.மு.க. ஒரு போதும் வீரியம் இழக்கவில்லை. சர்வதேச அளவில் கவனம் பெறும் விழாக்கள் இந்தியாவில் எங்கு நடைபெற்றாலும், அதில் பங்குபற்றும் மாநில முதல்வர்கள், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கி வருகிறார்கள். அது மரபு. அந்த மரபைத் தான் முதல்வர் ஸ்டாலின் பின்பற்றினார் என்றும் அவர்களின் வாதம் நீளுகின்றது.

அதேதருணத்தில் தற்போதைய தேசிய அரசியலில், பழிவாங்கும் ஆயுதமாக மத்திய அரசின் அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவை ஈடுபடுத்தப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பார்த்தா சட்டர்ஜி, சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் ஆகியோரின் கைது நடவடிக்கையே இதற்கு சாட்சியாகவுள்ளது. 

இந்நிலையில், ஓகஸ்ட் 7ஆம் திகதியான இன்று, தி.மு.க. தலைவரான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு அமைதிப்பேரணி நடைபெறும் என்று தி.மு.க. கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற எந்த வழியையும் பயன்படுத்திக் கொள்ளும் என்பது தெரிய வந்திருப்பதால், ஸ்டாலின் தனது கட்சியினருக்கு எச்சரிக்கையும், கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வையும் வழங்கி இருக்கிறார். மேலும் தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கட்சிக் கூட்டங்களைத் தவிர்த்து ஏனைய பொதுவெளிகளில் பா.ஜ.க.வை விமர்சிக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வினர், தற்போது மத்திய அரசின் அமைப்புகளை அரசியல் ரீதியில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் அரசியல் களத்தில் கவனமுடன் மக்கள் நல பணியாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர். 

அதிலும் தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது ஊழல் புகார் குற்றசாட்டைக் கூறியிருப்பதால், இந்த இரு அமைச்சர்கள் மட்டுமல்லாமல் வேறு சிலர் மீதும் மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சார்பில் விசாரணையும், திடீர் சோதனையும் நடைபெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க. மீது மத்திய அரசு குறி வைத்திருக்கிறது. தி.மு.க.வில் தலைமை மீது அதிருப்தி, கட்சியில் விரிசல் அல்லது பிளவு போன்றவற்றை உருவாக்க அக்காட்சி கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கிறது. மேலும் மகாராஷ்டிரம், அசாம், கர்நாடகா போன்று தமிழகத்திலும் ஏதேனும் ஒரு உபாயத்தில் மூலமாக ஆட்சியை கலைப்பதற்கோ அல்லது ஆட்சி மீது மக்களிடத்தில் ஏதிர்ப்புணர்வு எழுப்புவதற்காகவோ ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க., அக்கட்சியை சிதைத்து, எடப்பாடி அணி, பன்னீர்ச்செல்வம்  அணி, சசிகலா அணி, தினகரன் அணி என்று குழுக்களை உருவாக்கி, அக்கட்சியின் ஒட்டுமொத்த பிம்பத்தை உடைத்து, கட்சி தொண்டர்களிடையே நீடித்து இருந்த வலிமையான ஆட்சி அதிகார உளவியலுக்கு உலை வைத்திருக்கிறது. அதேதருணத்தில் உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கையாண்ட மும்முனை போட்டியை தமிழகத்திலும் உருவாக்கி, தமிழ் மண்ணில் அரசியலில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் பா.ஜ.க. காய்களை நகர்த்தி வருகிறது.

ஆனால் தமிழகத்தின் வலிமையாக இருக்கும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண வரி உயர்வு போன்றவற்ற எதிர்த்து வழக்கமான கண்டன ஆர்ப்பாட்டத்தை மட்டுமே பின்பற்றி, தங்களது அரசியல் கடமையை பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஆனால் வலிமையான எதிர்ப்பை தெரிவித்து, மின் கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்விலிருந்து நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும்.

மக்களின் விருப்பத்தை ஆளுங்கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆகிய இரண்டும் சரியான புள்ளியில் புரிந்து கொண்டு, உயர்வை குறைத்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை தமிழக அரசு நிறைவேற்றினால், பா.ஜ.க.விற்கு அரசியல் ரீதியாக எதிராக தடம் மாறாமல் தி.மு.க. பயணிப்பதற்கும் உற்றதுணையாக குரல் கொடுப்பார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04