இணுவைக் கந்தனது மஞ்ச உற்சவமும் தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்களும்.

Published By: Rajeeban

02 Aug, 2022 | 05:28 PM
image

 மோகனதாரணி மகேந்திராநாதன்

 

கலாசார சுற்றுலாத்துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 


மரபுரிமை என்பது ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பெறுமதி வாய்ந்த சொத்தாகும். மரபுரிமை என்பது கடந்த காலத்து சமூகத்திடம் இருந்து பெறப்பட்டதும் தொடர்ந்து பின்பற்றப்படுவதும் எதிர்கால தலைமுறையினருக்கு கையளிக்கப்பட வேண்டியதுமாகும். ஒரு மக்கட் குழு குழுவாக சேர்ந்து கற்ற நடத்தை, வாழ்க்கை முறை, சமய நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், தொழில்கள், கலைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் முதலானவற்றை குறித்து நிற்கின்றன.

பொதுவாக ஒர் நாட்டின் மரபுரிமையை கலாசார மரபுரிமை இயற்கை மரபுரிமை என வகுக்கலாம். அவை மேலும் தொட்டுணரக்கூடியவை (Tangible heritage), தொட்டுணர முடியாதவை (Intangible heritage), அசையும் மரபுரிமை (Moveable heritage), அசையாத மரபுரிமை( unmovable)  எனப் பலவாறாக  வகைப்படுத்தலாம். இவற்றுள்  தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்கள் இன்றும் இலங்கையில் தொடர்சியாக பேணப்பட்டு வருகின்றன. இவ்மரபுரிமை அம்சங்கள் நீண்டகாலமாக அவ்வவ் பிரதேச மக்களின் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்து காணப்படுகின்றன. இவ்வாறான பிரதேசங்கள் ஏதோ ஒரு வகையில் தொன்மையான வரலாற்று முக்கியத்துவத்தையும் மரபுரிமைசார் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன எனலாம்.

அந்த வகையில் இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி அறியமுடிவதுடன் வட இலங்கையின் மரபுரிமை அம்சங்களிலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுவதை காணலாம். ஐரோப்பியர் காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியான வரலாற்றினை உடைய ஒர் தொன்மையான ஆலயமாக இணுவைக் கந்தன் ஆலயத்தை அடையாளப்படுத்த முடியும். இவ்வாலய மஞ்சத்தின் தோற்றம் பற்றி பல செவிவழிக் கதைகள் கூறப்பட்டாலும் தொட்டுணர முடியாத அம்சங்களில் தனித்துவமான சிறப்பைக் கொண்டதாக இணுவில் கந்தசுவாமி கோயில் மஞ்ச உற்சவம் அமைவதைக் காணலாம்.

இணுவை மண்ணை மையப்படுத்தி தோன்றிய இணுவைக் கந்தனது மஞ்சம் கலாசார மரபுரிமை என்ற வகையில் (Tangible heritage, Intangible heritage) ஆவணப்படுத்தினால் எதிர்கால கலாசார ஆய்வுகளுக்கும் கலாசார மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவுக்கும்(Cultural Tourism, Religious Tourism)  வழிவகுக்கும் எனலாம்.

 

 

 வரலாற்றுப்  பிண்ணனி

 


 

 

யாழ்ப்பாண குடாநாட்டினுடைய மத்தியில் விளங்கும் இணுவில் கிராமம் சைவத் தமிழ் பண்பாட்டிற்கும் முத்தமிழிற்கும் புகழ் பூத்த நகரமாக விளங்குகிறது. இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே சுமார் ஐந்து மைல்கள் தொலைவில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கிராமமே இணுவில் ஆகும். பண்டைய இலக்கியங்களில் இணையிலி எனப்பட்ட இக்கிராமமே இன்று இணுவில் என மருவியுள்ளது. விளைநிலங்களும் செழிப்பான.மண்வளமும்  செறிந்த பசுமையான சூழலில் வடக்கே உடுவிலையும் கிழக்கே உரும்பிராயையும் தெற்கே கோண்டாவிலையும் மேற்கே சுதுமலையையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இந்துமதம் மணங்கமழும் வகையில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் காரைக்கால் சிவாலயம், சிவகாமி அம்மன் கோயில், செகராஜசேகரப் பிள்ளையார், இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில் தெற்கு ஞானலிங்கேஸ்வரர் கோயில், இணுவில் வைரவர் ஆலயம், இணுவில் அரசோலைப் பிள்ளையார் கோயில், இணுவில் இளந்தாரி கோயில், இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் திருக்கோவில் எனப் பல இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன . அந்த வகையில் இணுவில் மண்ணின் பெரிய கோயில் எனப்படும் இணுவில் கந்தசுவாமி கோயில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையையும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் தோற்றம் பற்றி மரபுக்கதைகள் கூறப்படுகின்றன. அதாவது யாழ்ப்பாண வைபவமாலையில் சிறப்பித்துக் கூறப்படும் பேராயிரமுடையோன் முதலி ஆட்சித் தலைவனாக விளங்கினான்.அவனுடைய  மரபில் வந்த கனகராஜ முதலி காலத்து ஆலயமாக இணுவில் கந்தனாலயம் விளங்குகின்றது. ஒர் நாள் இரவு  கனகராஜ முதலியாரின் அரண்மனையில்  ஒர் ஒளிப் பிழம்பு தெரிவதை அவதானித்த மக்கள் முதலியாரின் பெற்றோர் தீப்பிடித்து எரிகின்றது எனக் கருதி அவரது அரண்மனையை நோக்கி ஓடினர். அங்கே எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை. ஆனால் அங்கே இரு பிராமணர் சிறுவர்கள் தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்கும்படியும் கூறினர். இது காஞ்சி முருகனது திருவருள் எனக் கூறி தன் இல்லத்தில் முருகப்பெருமானுக்கு குடிசை அமைத்து வழிபட்டார் என செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் 1621ல் அமைக்கப்பட்டதே தற்போதைய ஆலயமாகும். பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் தீராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் உறக்கத்தில் இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இருப்பிடம்மொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார். 


மறுநாள் பொழுது புலர்ந்நது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார். முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார். கனவில் தோன்றிய முருகன் காஞ்சியம்பதி எனக் குறிப்பிட்டது காஞ்புரம் குமரகோட்டக் கந்தன் என்பதையும் உணர்ந்து கொண்டார். அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் புராதன தல விருட்சமான நொச்சி மரம் கருவறைக்கருகில் தற்போதும் உள்ளது.        பிற்காலத்தில் செங்கற் கோயிலாகவும் பின் வெள்ளளைக்கல் கோயிலாகும் உருமாறியுள்ளது. வெள்ளைக்கல் திருப்பணி வேலை நடந்து கொண்டிருந்த பொழுது கட்டிய கற்களுள் கோறைக் கல் ஒன்றும் இருந்தது. அதனை அறியாத ஆசாரி கோறைக் கல்லையும் சேர்த்து கட்டி விட்டார். குறித்த கோறைக் கல்லை கட்டடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் சிறிய அணிற்பிள்ளை வடிவில் வந்து கோறக் கல்லின் மேல் குதித்து விளையாடினார். அணிற்பிள்ளையின் விளையாட்டு ஆசாரிக்கு சினமூட்டியது. அதனால் சிறுகல் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்தார். அணில் உடனே அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்து விட்டது. இந்நிகழ்வு ஆசாரிக்கு முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் அன்று இரவு அணில் பிள்ளை ஒன்று அங்கு வந்து வெள்ளைக் கல்லின் மேல் துள்ளி விளையாடியதையும், அந்தக் கல்லுள் கோறை ஒன்று இருக்கிறது என்பதையும் ஆறுமுகத்தாரின் கனவில் முருகன் உணர்த்தினார். மறுநாள் காலை ஆறுமுகத்தார் எழுந்து வந்து, கல்லைத் தட்டிப் பார்த்தார். அப்பொழுது குறித்த கல்லினுள் கோறை இருப்பதைக் கண்டார். முருகப்பெருமான் விளையாட்டாக வந்து உணர்த்திய அற்புதத்தை அங்கு நின்றோருக்குச் சொல்லி அகமகிழ்ந்தார்.

இணுவில் கந்தசுவாமி கோவில் ஆரம்பத்தில் மாட்டுக் குடிலாய் இருந்து, செங்கற் கோவிலாய் மாறி, பின் வெள்ளைக் கற்கோவிலாக தோற்றம் பெற்றது. மொட்டைக் கோபுரம் மற்றும் மூன்று தளங்களை கொண்ட இராசகோபுரம் என இரு கோபுரங்களுக்கிடையே பெரியதொரு மண்டபமும் கொண்ட கோவிலை யாழ்பாணக் கிராமப் புறங்களில் காண்பது அரிது. இவ்வாலயத்தின் ஆறுமுகப்பெருமானுக்கு 1976 ஆம் ஆண்டளவில் சித்திரதேர் ஒன்று திரு.வல்லிபுரம் சுப்பையா என்பவரால் ஊர்மக்களின் உதவியுடன் இனிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் இளந்தொண்டர்சபையினரால் 1977 ஆம் ஆண்டளவில் ஊர்மக்களின் பேருதவியுடன் அரிய சப்பறமும் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவின்போது எம்பெருமான் பவனிவரும் சிவப்புக் குதிரைவாகனம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கலைநுணுக்கங்கள் நிறைந்து கம்பீரமாகக் காட்சி தரும் குதிரைவாகனம் வேலாயுதர் செல்லையா என்பாரின் முன்னோர்களால் வட்டுக்கோட்டையில் இருந்த சிற்பவல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பெற்றதாகும். ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவின்போது எம்பெருமான் பவனிவரும் சிவப்புக் குதிரைவாகனம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கலைநுணுக்கங்கள் நிறைந்து கம்பீரமாகக் காட்சி தரும் குதிரைவாகனம் வேலாயுதர் செல்லையா என்பாரின் முன்னோர்களால் வட்டுக்கோட்டையில் இருந்த சிற்பவல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பெற்றதாகும்.

இதே போன்ற அமைப்பை உடையதே எம்பெருமான் சூரசங்காரத்தின் போது பவனி வரும் கடாவாகனமும் ஆகும். இதனுடைய காலமும் 100 ஆண்டுகளாகும். சாத்திரி சின்னையா என்னும் அடியவருக்கு எம்பெருமான் கனவில் தோன்றித் தனக்குக் கடாவாகனம் அமைக்கும் படி கூறினார். இதற்கேற்ப அமைக்கப்பட்ட கடாவாகனத்திற்கு கொம்பினைச் சரியான முறையில் அமைப்பதற்குச் சிற்பி பெருமுயற்சி எடுத்தார். சிற்பியின் முயற்சி கைகூடவில்லை. சாத்திரி சின்னையாவின் கனவில் முருகப்பெருமான் தோன்றிக் கடா ஆட்டிற்குக் கொம்பு எப்படி இருக்குமோ அதே போன்ற தோற்றத்தில் ஒரு பற்றைக்குள் கொடியொன்று திரண்டு முறுகி இருப்பதை இடக்குறிப்போடு உணர்த்தி அருளினார். ஆண்டவனால் உணர்த்தப்பட்ட கொடியே இன்றும் இவ்வாகனத்தின் கொம்பாகப் பரிணமிக்கிறது. ஆண்டவனின் சித்தப்படி அமைக்கப்பெற்ற ஆறுமுகசுவாமியையும், கடாவாகனத்தையும் சூரசங்காரத்தின் போது தரிசிப்பதற்காக அயல் நாடான இந்தியத்தமிழகத்தில் உள்ள வேதாரணியத்தில் இருந்து கூட அன்றைய நாட்களில் அடியவர்கள் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

1861 காலப்பகுதியில் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு பெரிய சந்நியாசியார் எனப்படும் ஆறுமுகம் சந்நியாசியாரது அருள் தொண்டு கிடைக்கப் பெற்றது. சந்நியாசியார் இணுவைக் கந்தனுக்கு திருமஞ்சம் செய்ய முனைப்புக் காட்டினார். திருமஞ்சத்தை செவ்வனே செய்து முடிக்கவல்ல சிற்ப வல்லுநர்கள் தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டனர். முருகனே சந்நியாசியர் கனவிலே தோன்றி ஊர்காவற்துறை கரையை வந்தடைந்த சிற்ப வல்லுநர்களை அழைத்து வரும்படி கூறினர் என் ஐதீகங்கள் கூறுகின்றன. அதற்கிணங்கி அருளாளரும் சிறப் வல்லுநர்களும் சேர்ந்து உருவாக்கிய கலைக்கூடமே இணுவில் மஞ்சம் ஆகும். 1912ல் வெள்ளோட்டம் காணப்பெற்றது. சந்நியாசியாரது மேற்பார்வையில் மஞ்ச வேலைகள் ஆரம்பமான இடம் இன்றும் மஞ்சத்தடி என அழைக்கப்பட்டு வருகின்றது. மஞ்சத்தின் உயரம், அகலம் ,சுற்றளவு சிற்பவேலைப்பாடுகள் எல்லாம் பெரியவரின் எண்ணபடியே உருவாக்கப்பட்டன. முப்பத்தைந்து அடி உயரமான இந்த திரு மஞ்சத்திற்கு நான்கு சில்லும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப் பெற்றுள்ளன. இந்த அருமையான மஞ்சத்தில் வள்ளி, தெய்வயானை சமேதரமாக ஆறுமுக சுவாமி கொலுவிருந்து மகோற்சவத்தில் பன்னிரண்டாம் திருவிழாவன்றும், தைப்பூசத் திருநாளன்றும் திருவீதியில் ஊர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப்பிடித்துள்ள இந்த மஞ்சத்தைப் போன்று ஒரு மஞ்சம் இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறு எங்குமோ காணமுடியாது என தொல்பொருள் ஆராச்சியாளர் பலர் கூறியுள்ளார்கள்.உலக பெருமஞ்சம் இது தான் என வரலாற்று அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்த மஞ்சம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, நன்கு பேணுவதற்காக நாற்பதடி உயரமான மஞ்சக் கொட்டகையும் நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மஞ்சம் தனது நேர்முக மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்பதன் பொருட்டுப் பெரிய சந்நியாசியார் தங்கி இருந்த கொட்டிலுக்குப் பக்கத்தில் வைத்தே அமைக்கப் பெற்றது. அதனால் மஞ்சம் அமைக்கப்பட்ட இடம் இப்பொழுது மஞ்சத்தடி என காரணப் பெயராக வழங்கப்படுகிறது. 

பெரிய சந்நியாசியார் உலாவிய மஞ்சத்தடிப் பகுதி ஒரே புனித பூமியாகும். இதனை மனதிற் கொண்டே ஊர் மக்கள் பெரிய சந்தியாசிரியரின் பொன்னுடலை அவ்விடத்திலேயே சமாதியாக்கி கோவில் ஒன்றையும் கட்டி, பின்பு வேற்பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளனர். இச்சமாதிக் கோவில் வளர்ச்சியுற்று, தற்போது நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன.

 

இலங்கையில் வடக்கில் தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்களினதும், ஆன்மீக தரிசனம் என்பவற்றினதும் மையக் கருவாக இணுவில் கந்தசுவாமி கோயிலும் மஞ்ச உற்சவமும் அமைந்து இருந்தாலும் அவற்றில் மரபுரிமை அம்சங்கள் உள்ளடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இவை முறையாக ஆவணப்படுத்தலுக்கும் விரிவான ஆய்விற்கும் உட்படுத்தபடாமை என்பத திர்நோக்கும் பிரதான பிரச்சினை ஆகும். வடக்கே தொன்மையான வரலாற்றைக் கொண்ட இணுவில் கந்தனாலய மஞ்சத்தின் தோற்றத்தை தெளிவுப்படுத்தல்லும் இணுவைக் கந்தனாலய மஞ்ச உற்சவத்தில்  கலாசார மரபுரிமை ( Tangible, Intangible heritage) அம்சங்களை தெளிவுபடுத்தி எதிர்கால ஆய்விற்கும் கலாசார சுற்றுலாவிற்கும் வழிவகுத்தல் என்பனவே அவசியபமாக அமைகின்றன.

 

 

 

தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்கள் 

 

ஆண்டுக்கொரு முறை 25 நாட்கள் தொடர்ச்சியாக திருவிழா நடைபெறும். பண்ணிரெண்டாம் திருவிழா மஞ்சத்திருவிழா ஆகும். திருவிழாக் காலங்களில் மட்டுமன்றி தைப்பூச நன்னாளிலும் மஞ்சப் பவனி இடம்பெறும். வள்ளி தெய்வானை சமேதராய் ஆறுமுகப் பெருமான் மஞ்சத்தில் எழுந்தருள்வதைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆன்மீகச் சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் வருவதைக் காணலாம். சந்நியாசியார் காலத்தில் தைப்பூச மஞ்சத் திருவிழாவிற்கு இலங்கையின் 

பலபாகத்திலிருந்தும் இந்தியத் தமிழ்நாட்டில் இருந்துங்கூட அடியவர்கள் வந்து சென்றதாகக் கருதுவதற்கு ஏதுகள் பல உள. இணுவை மஞ்சம் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் தொல்பொருள் துறைப் பிரதேச அதிகாரி மா.பொ.செல்வரத்தினம் பின்வருமாறு கூறுகிறார்.

இப்பிரதேச மக்களின் தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்களில் ஒன்றாக இன்றுவரை மஞ்ச உற்சவம் அமைகின்றது. ஈழத்தினுடைய பிரபலம் மிக்க தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கல வாத்தியங்களை இசைக்க கரகாட்டம், சிலம்பாட்டம், குதிரையாட்டம் போன்ற கலை அம்சங்கள் (Intangible heritage) ஆலயச் சூழலில் அரங்கேறுவது மரபுரிமை அம்சங்களில் இன்று வரை தனித்துவமான தாகும். மஞ்சத்திருவிழாவில் இடம்பெறும் கலையம்சங்களை காண்பதற்காகவே வல்வெட்டித்துறையிலிருந்து பெரிய கம்பிகள் வடக்கயிறுகள்  என்பவற்றுடன் பெருமளவான பக்தர் கூட்டம் வருகை தருகின்றன. இதனைக் காண்பதற்காக நாலாதிக்கும் கால்நடையாக கூட மக்கள் கூட்டம் வந்து சேர்வர்.

இக்கிராம மக்களினுடைய வாழ்வியலுடனும் மஞ்சத் திருவிழாவுடனும் பிண்ணிப் பிணைந்துள்ள தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்களில் இசைக் கச்சேரிகள், கரகாட்டம் சிலம்பாட்டம் போன்ற கலைகள் எவ்வளவு முக்கியம் பெறுகின்றனவோ அதேயளவு முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொரு தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சமாக பொங்கல் விழா காணப்படுகின்றது. அதனுடன் இணைந்த வகையில் காவடி ஆட்டமும் பெண்களின் பாற்குட பவனியும் குறிப்பிடத்தக்கது.

மருதனார்மட பல்லப்பர் வைரவர் ஆலய.முன்றலில் மாபெரும் பாற்குட பவனி ஆரம்பமாகி இணுவைக் கந்தனது முன்றலினை வந்தடையும். அதைப் போன்றே ஆண்அடியவர்களின் தூக்கு காவடி, பறவைக்காவடி, செதில் காவடி என்பனவும் குறிப்பிடத்தக்கவையாகும். சுமார் ஒன்றரை கீ.மீ தூரம் நீண்ட வரிசையில் இப்பாற்குட பவனியும் காவடி பவனியும் இடம்பெறும்.இதனைத் தொடர்ந்து யாழ் சங்குவேவி வயலுக்குச் சென்று பாரம்பரிய முறைப்படி நெற்கதிர்கள் மாட்டு வண்டியில்  எடுத்து வரப்பட்டு கந்தசுவாமி ஆலய முன்றலில் 1008 பானையில் பறை இசை முழங்க சிறப்பு பொங்கல் இடம்பெறும்.

சங்குவேலி வயற்பரப்பில் இருந்து வருடா வருடம் இக்கோவிலுக்குத் தானமாக வழங்கப்படும் நெல்லில் இருந்து அரசகேசரி காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்துடன் இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது தெளிவாகிறது. அதாவது  செகராசசேகர மன்னரின் மைத்துனர் அரசகேசரி தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினார் என்றும், அந்தத் தமிழ்ச்சங்கத்திற்குச் சங்குவேலி என்னும் வயற்பரப்புத் தானமாக வழங்கப்பட்டதாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. ஆனால் இன்று அத்தமிழ்ச்சங்கம் அழிவுற்றாலும் முதல் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர்த்த தெய்வமான முருகப்பெருமானுக்கு, இணுவைக் கந்தப்பெருமானுக்கு இச்சங்குவேலி வயற்பரப்பிலிருந்து நெல்லுத் தானமாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாலயம் அரசகேசரி காலத்திலமைந்த தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புள்ளது எனக் குறிப்பிடுவதற்குத் தக்க சான்று இவ்வாலயத்திற்குரிய சங்குவேலி வயற்பரப்பும் அங்கிருந்து இவ்வாலயத்திற்கு வழங்கப்பட்டு வரும் நெல்லும் அமைகின்றன. இது தொன்று தொட்டு பேணப்பட்டு வரும் நம்பிக்கையும் சடங்கு முறையுமாகும்.

           

 

 

இக்கோயிலின்  நேர்வாசாலில் திரு நீர்நிலையொன்று உள்ளது. தீராத வினைகளைத் தீர்க்க வல்ல ஆற்றல் வாய்ந்தது. இரவு,பகல் என்றுபராது அடியார்கள் நாள்தோறும்  நீராடுவதனை இங்கு காணலாம்..

இணுவைக்கந்தன் ஆலயம் கோடான.கோடி பக்தர்களால் வழிபடப்படும் இந்து ஆலயமாகும்.  அதன் அருகில் நாத ஒலி எழுப்பும் இரணடு மணிக்கூட்டுக்கோபுரமும் அதனை அடுத்த மணிமண்டபமும் அது மட்டுமல்லாது முன்னவர்களின் அயராத முயற்சியால் உருhவாக்கப்பட்ட உலகப்பெருமஞ்சமும்   இக்கோயிலுக்கு மேன்மேலும் அணிசேர்க்கின்றன. இதைஆக்கிய பெருமை சன்னியாசியாரைச்சாரும். இந்த மஞ்சம் இணவைக்கந்தனுக்கு மட்டுமே உரித்துடையதன்று தமிழ்பேசும் நல்லுலகிற்கே சொந்தமானது. இம்மஞ்சமானது திராவிட சிற்பக் கலையின் உன்னத படைப்பாக அமைந்துள்ளது. இலங்கை இந்திய கலாசாரத் தொடர்பிற்கு எடுத்துக்காட்டாக  பண்பாடும் கைவண்ணமும் நிறைந்த இந்திய திராவிடச் சிற்பங்களின் கலைத்திறனை எடுத்தியம்ப வல்ல படைப்பாகும். இது கருவை வாழ் மக்களின் கலைப் பொக்கிஷமாகவும் முதுசொமாகவும் விளங்குகின்றது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05