(எம்.மனோசித்ரா)
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தின் ஊடாக கியூ.ஆர். குறியீட்டின் மூலம் எரிபொருளை விநியோகிக்கும் நடைமுறை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய சிட்டை முறைமை மற்றும் வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறைகள் இன்று முதல் செல்லுபடியற்றதாகும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் தேவையாளனவு எரிபொருளை அம்புலன்ஸ் வண்டிகள் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவித்துள்ள அமைச்சு , சட்டவிரோதமாக எரிபொருள் பதுக்கல், விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியுள்ளது.
இது குறித்து மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் இன்று திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையிலும் மற்றும் பதிவு செய்தல் சிட்டை (டோக்கன்) மூலமும் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறைகள் உள்ளிட்டவை இனி செல்லுபடியற்றதாகும்.
கியூ.ஆர். முறைமை நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமையளிக்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் எரிபொருளானது கியூ.ஆர் முறைமை ஊடாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே பாவனையாளர்களுக்கு வழங்கப்படும்.
வாகன ஆவணங்களுக்குரிய இலக்கங்களைப் பயன்படுத்தி கியூஆர் குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிக்கலை எதிர்கொண்டவர்கள் , தமது வாகன உரிம பத்திர இலக்கத்தைக் கொண்டு கியூ.ஆர் குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சகல முச்சக்கரவண்டிகளும் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பதோடு , அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகள் தமது அருகிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றை பரிந்துரைக்க வேண்டும்.
அதற்கமைய இனிவரும் தினங்களில் குறித்த முச்சக்கரவண்டிகளுக்கு அந்தந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.
மின்பிறப்பாக்கிகள், தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகணரங்கள் உள்ளிட்ட எரிபொருள் மூலம் இயக்கப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளின் வகை, எரிபொருள் தேவை மற்றும் அதனைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை தேர்ந்தெடுத்தல் என்பவற்றை அந்தந்த பிரதேச செயலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் அவர்களது வணிக பதிவு இலக்கத்துடன் தமது சகல வாகனங்களையும் பதிவு செய்ய முடியும். பொது போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பேரூந்துகளுக்காக எரிபொருள் கோட்டாவினை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் வழங்கி, அதன் அடிப்படையில் வீதி அனுமதிப்பத்திரம் மற்றும் பயணிக்கும் தூர அளவுக்கமைய (கிலோ மீற்றர்) வழங்கப்படக் கூடிய எரிபொருளின் அளவு தீர்மானிக்கப்படும். குறித்த எரிபொருளை அதே டிப்போக்களில் அல்லது குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் பெற்றுக் கொள்ள முடியும்.
அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ள பாடசாலை சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், அலுவலக சேவைகள், தொழிற்சாலை, சுற்றுலாத்துறை, அம்புலன்ஸ் வண்டிகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் முன்னெடுக்கப்படும்.
அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என்பதோடு , அவற்றின் சாரதிகளால் கோரப்படும் அளவு எரிபொருள் வழங்கப்படும். ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொலிஸ் திணைக்களத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாவினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக எரிபொருள் தொகையை பதுக்கி வைத்திருத்தல் , விற்பனை செய்தல் அல்லது எரிபொருள் வழங்குதல் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அல்லது நபர்களின் புகைப்படம் அல்லது காணொளிகளை 074 212 3123 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
மீண்டும் மீண்டும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களது கியூ.ஆர். குறியீடு செயழிலக்கச் செய்யப்படும் என்பதோடு , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் அந்தந்த வாகனங்களுக்கென ஒதுக்கப்படும் கோட்டாவிற்கமைய வாரம் முழுவதும் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் அநாவசியமாக வரிசைகளில் காத்திருந்து அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM