(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கே முன்னுரிமையளிப்பார்.
எனவே அவரது ஆட்சியில் ஒருபோதும் இந்நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எரிபொருளை விநியோகிப்பதற்கான அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் , ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருளை இறக்குமதி செயற்வதற்காக இதுவரையில் எந்தவொரு முற்பதிவுகளும் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் (25) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த 20ஆம் தேதி ஜனாதிபதி தெருவில் காண வாக்கெடுப்பின் போது மக்களுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே நாம் செயற்பட்டோம்.
எனினும் ஆளும் தரப்பினர் தத்தமது பாதுகாப்பினையும் எதிர்கால அரசியலையும் கருத்தில் கொண்டு செயல்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல்வேறு கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம். மக்களின் ஒருமித்த ஆர்ப்பாட்டங்களை வெற்றி பெறச் செய்வதே அதன் நோக்கமாக இருந்தது.
19 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தல், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குதல் , ராஜபக்ஷர்கள் அற்ற சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்டவை இந்த கலந்துரையாடல்களின் பிரதான கருப் பொருட்களாகக் காணப்பட்டன. இவற்றை நிறைவேற்றக்கூடாது என்பதற்காகவே ஆளும் தரப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர்.
அவர்களின் பிரதான தேவையாக காணப்பட்டது பாராளுமன்றத்தை கலைப்பதை இடைநிறுத்துவதாகும். தற்போதுள்ள அரசாங்கமும் பாராளுமன்றமும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. பாராளுமன்றத்தினுள் காணப்படும் நிலைப்பாடும் பாராளுமன்றத்திற்கு வெளியில் மக்கள் மத்தியில் காணப்படும் நிலைப்பாடும் இருவேறு பட்டதாகவே உள்ளன. அத்தோடு மே ஒன்பது வன்முறையன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே அவர்கள் அவருக்கு வாக்களித்தனர். இதன் போது பண கொடுக்கல் வாங்கல்களும் இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் , எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக நிவாரணம் வழங்க வேண்டிய சாவால் தற்போதைய ஜனாதிபதி காணப்படுகிறது. அவருக்கு காணப்படும் இரண்டாவது சவால் வீழ்ச்சி அடைந்துள்ள அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதாகும்.
கடந்த வருடம் ஜூன் மாதத்தை விட இவாண்டு ஜூன் மாதம் வரை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவு 48 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களின் நம்பிக்கை இன்னும் கட்டி எழுப்பப்படவில்லை.
இன்னும் ஓரிரு தினங்களில் பாரியளவில் மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதிகரித்துச் செல்லும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஜனாதிபதி இவ்வாறு கட்டுப்படுத்துவார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் நால்வர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா?
எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலை திட்டம் இல்லை. இதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலை திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. எரிபொருள் வரிசைகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.
ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான எந்த ஒரு முற்பதிவுகளும் இதுவரையில் செய்யப்படவில்லை. அதற்கான வேலை திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.
குரங்கம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபலத்தினால் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தடுப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
சர்வதேசம் இலங்கை மீது அதிருப்தி கொண்டுள்ளது எனவே ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை தடைகளை விதிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தாமல் சர்வதேசத்துடன் சமூகமான உறவை பேணுவதற்கு அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவதாக கூறப்படும் கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட மாட்டாது. காரணம் ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM