எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான ஜனநாயக உரிமையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்

22 Jul, 2022 | 10:10 PM
image

எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான மக்களின் ஜனநாயக உரிமையை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என்று இலங்கை தேசிய சமாதானப் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கொழும்பு காலிமுகத்திடல் 'அறகலய ' அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரும் பொலிசாரும் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு அவர்களை அங்கிருந்து  அப்புறப்படுத்தியதை கடுமையாக கண்டனம் செய்து தேசிய சமாதானப் பேரவை அறிக்கையொன்றை வெள்ளியன்று விடுத்தது.

  அந்த அறிக்கையின் விபரம் வருமாறு ;

   அதிகாலையில் பெரும் குழப்பம் நிலவிய தினத்தில் புதிய ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.ஒரு அரசாங்க மாற்றத்துக்கு காரணமாயமைந்த  போராட்டக்களம் முதலில் நள்ளிரவில் அமைதியாக இருந்தது. நள்ளிரவுக்கு பிறகு இராணுவத்தினராலும் பொலிசாரினாலும் அது பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டது.

   இந்த நடவடிக்கையினால் புதிய  அரசாங்கம் தன்னை நாட்டு மக்களில் கணிசமான பிரிவினரிடமிருந்தும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் அந்நியப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது.104 நாட்களாக கொழும்பு காலிமுகத் திடல் போராட்டக்களத்துக்கு நாட்டின் நாலா புறங்களில் இருந்தும்  பல்லாயிரக்கணக்கான  மக்கள் மக்கள் வருகை தந்து நேரடியாக போராட்டத்தில் பங்கேற்று தங்கள் ஒருமைப்பாட்டை வெளிக்காட்டி வந்தனர்.

    துரதிர்ஷ்டவசமான  சம்பவங்கள் குறித்து தேசிய சமாதானப் பேரவை அதன் வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது. அமைதிவழியில் போராட்டத்தை செய்துகொண்டிருந்தவர்கள் மீதான கொடூரமான தாக்குதல் போராட்ட இயக்கத்தின் இலட்சியங்களையும் அபிலாசைகளையும் மறுதலிப்பதாக அமைந்தது.அந்த போராட்டமே முனானாள் ஜனாதிபதியையும் பிரதமரையும் அமைச்சரவையையும் பதவி விலக வைத்து புதிய ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்கும் நிலையை உருவாக்கியது.

   போராட்டக்காரர்களுடன் பாதுகாப்பு படைகள் நடந்துகொண்ட முறையை நாம் கடுமையாக கண்டிக்கிறோம்.முதலில் காலிமுகத்திடல் பகுதியை சுற்றிவளைத்த படையினர் பின்னர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் மருத்துவ பணியாளர்களும் அம்புலன்ஸ் வண்டிகளும் வருவதையும் தடுத்தனர்.படையினரால்  தாக்கப்பட்ட பல  போராட்டக்காரர்களும் ஊடகவியலாளர்களும் சட்டத்தரணிகளும் படுகாயமடைந்தனர்.

    போராட்ட இயக்கம் காரணமாகவே பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி அப்புறப்படுத்தாமல்  அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கவேண்டும் என்று நாம் நம்புகிறோம்.போராட்டக்காரர்கள் அன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இருந்து வெளியேறவிருந்தார்கள்  என்பது ஏற்கெனவே தெரிந்திருந்தது.அந்த வளாகத்தை மாலையில் கையளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தார்கள்.அத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே அதிகாலையில் அரசாங்கம் படைபலத்தை பிரயோகித்து போராட்டக்காரர்களை அங்கிருந்து  அப்புறப்படுத்தியிருக்கிறது.

   எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான மக்களின் ஜனநாயக உரிமை ஜனநாயகத்தின் மையப் பகுதியாகும். அந்த உரிமையை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.அந்த உரிமையை பாதுகாக்க தவறினால் புதிய போராட்ட அலை உருவாகி நிச்சயமற்ற நிலைவரத்துக்கு வழிவகுக்கக்கூடும்.

   சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் நிதியுதவிகளைப் பெறுவதற்கு நல்லாட்சி மற்றும் அரசியல் உறுதிப்பாட்டுக்கான சான்றுகளை அரசாங்கம் காண்பிக்கவேண்டும்.இதற்கு மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடியதாக கருத்தொருமிப்பின் அடிப்படையில் சகலரையும் அரவணைக்கக்கூடிய அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து சட்டத்தின் ஆட்சியை மதித்து பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் அரசாங்கம் செயற்படவேண்டியது முக்கியமானதாகும்.

  நாட்டின் பொருளாதாரம்  படுமோசமான வீழ்ச்சியடைந்திருக்கும் இன்றைய தருணத்தில் முன்னுதாரணமாகச் செயற்பட்டு வழிநடத்தவேண்டியது புதிய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற எமது கோரிக்கையை மீண்டும் நாம் வலியுறுத்துகிறோம்.பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனதுரையில் அரசாங்கத்தில் இணையுமாறு சகல கட்சிகளின் தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுத்ததன் பிரகாரம் செயற்படவேண்டும்.

  பொருளாதார நெருக்கடியை தீர்த்துவைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.21 வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்து ஆட்சிமுறை நிறுவனங்களைப் பலப்படுத்துவதுடன் பொறுப்புக்கூறலுக்கான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்.

  6 மாதகாலத்தில் பாராளுமன்ற மற்றும் மாகாணசபைகள் தேர்தல்களையும் ஏற்கெனவே இணங்கிக்கொண்டதன் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.நாட்டின் பரந்த நலன்களுக்காக அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22