( எம்.எப்.எம்.பஸீர்)
8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருக்கையில் அவரது இல்லத்துக்கு தீ வைத்தமை (கடந்த 9 ஆம் திகதி) தொடர்பில் விசாரணைக்கு மிக அவசியமான பிரதான சந்தேக நபர் ஒருவர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சி.ஐ.டி.யினர் இன்று ( 20) நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இவான் பெரேரா எனும் நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும், அது குறித்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா கோட்டை நீதிவான் திலின கமகேவுக்கு அறிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் அடையாள அணிவகுப்புக்காக மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ ஆஜரானதுடன் பாதிக்கப்பட்ட தரப்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரிமைகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணியும் ஐ.தே.க.வின் பொருளாலருமான மிஸ்பாஹ் சத்தார் ஆஜரானார்.
முதலில் சந்தேக நபர்களில் மூவர் அடையாள அணிவகுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இதன்போது மின்சார தடை ஏற்பட்டதால் அந் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டது.
இதனால் அடையாள அணிவகுப்பை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந் நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் விடயங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ, கைதாகியுள்ள சந்தேக நபர்கள் தீ வைப்புடன் சம்மந்தப்படவில்லை எனவும், அவர்களுக்கு அதனுடன் தொடர்பில்லை எனவும், உண்மை குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் உரிமைகளுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி மிஸ்பாஹ் சத்தார், எரிக்கப்பட்ட வீட்டில் பெறுமதி மிக்க புத்தகங்கள் அழிவடைந்துள்ளதாகவும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்பதுடன் பேரிழப்பாகும் என குறிப்பிட்டார். அதனால் இந்த விவகாரத்தியில் சுயாதீன விசாரணை வேண்டும் என்றார்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ, சி.ஐ.டி.யினர் தேடும் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக தகவல் உள்ளதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து அது குறித்து நீதிவான் சி.ஐ.டி.யினரிடம் வினவிய போது, பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா, இவான் பெரேரா எனும் சந்தேக நபர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் அவர் விசாரணைக்கு அவசியமானவர் எனவும் குறிப்பிட்டார்.
இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திலினகமகே, அடையாள அணிவகுப்பையும் வழக்கையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்தி வைத்து அது வரை சந்தேக நபர்கள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் ஏற்கனவே சி.சி.ரி.வி. காட்சிகள் மற்றும் ஊடக கானொளிகளைப் பெற நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் உண்மை குற்ரவாளிகளை விரைந்து கைது செய்யுமாறும் சி.ஐ.டி.யினருக்கு பணித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM