ராஜபக்ஷாக்களைப் பாதுகாக்கும் ரணிலை துரத்தியடிக்கும் வரை போராட்டம் தொடரும் - 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் அறிவிப்பு

Published By: Vishnu

19 Jul, 2022 | 09:06 PM
image

(நா.தனுஜா)

இன்று புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாம் பாராளுமன்றத்திற்கு அருகில் சென்று அதற்கு இடையூறு விளைவிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், இருப்பினும் அவ்வேளையில் சத்தியாக்கிரகப்போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் பிற்பகல் 3 மணியளவில் பொதுமக்கள் அனைவரையும் காலிமுகத்திடலில் ஒன்றிணைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவை இந்த நாட்டைவிட்டுத் துரத்தியடித்தது ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதிப்பதவியை வழங்குவதற்காக அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், ராஜபக்ஷாக்களையும் அவர்களைப் பாதுகாக்கும் ரணில் விக்ரமசிங்கவையும் முழுமையாகத் துரத்தியடிக்கும் வரையில் தமது போராட்டாம் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ள நிலையில், போராட்டத்தின் நோக்கமும் தமது அடுத்தகட்ட செயற்பாடுகளும் என்னவென்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து நேற்று செவ்வாய்கிழமை காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம'வில் உள்ள ஊடக மத்திய நிலையத்தில் ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு போராட்டக்காரர்கள் மேலும் கூறியதாவது:

ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாக்கின்ற அனைத்துத்தரப்பினரும் பதவி விலகவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகக் காணப்பட்டது. அவ்வாறு பாதுகாக்கும் தரப்பனரில் ரணில் விக்ரமசிங்கவே முதன்மையாகவராக இருந்தார். ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடும் அவர், மக்களின் கோரிக்கைகளையும் விருப்பத்தையும் புறந்தள்ளுகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவை இந்த நாட்டைவிட்டுத் துரத்தியடித்தது ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதிப்பதவியை வழங்குவதற்காக அல்ல. கடந்த மேமாதம் 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் அவர்களது முதலாவது வெற்றியை அடைந்துகொண்டபோது, ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஏதோவொரு சதித்திட்டத்தின் மூலம் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியைக் கைப்பற்றிவிட்டார். எனவே அதன் பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகவுமே போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்தனர். ஆகவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

இப்போது போராட்டக்காரர்கள் என்போர் பாசிஸவாதிகளென சிலர் சமூகவலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பிவருகின்றனர். ஆனால் இத்தகைய பயமுறுத்தல்களுக்கோ அல்லது விமர்சனங்களுக்கோ நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் இன்றைய தினத்திலும் 19 ஆம் திகதி அதன்மீதான வாக்கெடுப்பு நடைபெறும் 20 ஆம் திகதி நாம் பாராளுமன்றத்திற்கு அருகே செல்லமாட்டோம்.

அதேபோன்று நாட்டுமக்கள் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களை அண்மித்த நகரங்களுக்கு வருகைதந்து ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தும் அதேவேளை, அப்பிரதேசங்களில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். மாறாக அவ்வாறு செல்லும் பட்சத்தில் அதனை ரணிலுக்கும் ராஜபக்ஷாக்களுக்கும் சாதகமாக அமையக்கூடியவகையில் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன.

எனவே அதற்கு இடமளிக்காத வகையில் இன்று (நேற்று) போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலிருந்து காலிமுகத்திடலை நோக்கி பிற்பகல் 2 மணிக்கு பேரணியாகச் செல்லவிருப்பதுடன் நாளைய தினம் (இன்று) பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் சந்தர்ப்பத்தில் சத்தியாக்கிரகப்போராட்டத்தை மேற்கொண்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவிருப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் ஊடாக யார் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படப்போகின்றார் என்பதை அவதானித்துக்கொண்டிருப்போம்.

அதேபோன்று 19 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் பொதுமக்களை காலிமுகத்திடலுக்கு வரவழைப்பதற்கான பேரணியை நடாத்தவிருப்பதுடன் இதன்போது நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும்.

நூறு நாட்களாக, அதாவது சுமார் மூன்று மாதகாலமாக அமைதியான முறையில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டத்தில் பிளவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கும், தமது கட்சிக்கான ஆதரவைக் கட்டியெழுப்புவதற்கும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறிப்பாக 'அரகலய' (போராட்டம்) என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கும் அதனைப் பதிவுசெய்வதற்கும் சில குழுவினர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குச் செல்கின்றனர். அத்தகைய செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவை ராஜபக்ஷாக்களினதும் ரணில் விக்ரமசிங்கவினதும் சதித்திட்டங்களேயாகும். அவற்றுக்குள் நாம் ஒருபோதும் சிக்கமாட்டோம். எனவே ராஜபக்ஷாக்களையும் ரணில் விக்ரமசிங்கவையும் முழுமையாக விரட்டியடிக்கும் வரையில் எமது இந்தப் போராட்டம் தொடரும் என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம் என்று தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51