(எம்.மனோசித்ரா)
தாய்நாட்டினதும் மக்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அதிகார பேராசை மற்றும் ஊழலற்ற அர்ப்பணிப்புடன் கூடிய தலைமைத்துவத்தை தெரிவுசெய்வதற்கு மனசாட்சிக்கு ஏற்ப அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை கைவிட வேண்டாம் என்று சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தற்காலிக அரசியல் தீர்வை எட்டுவதற்கு அச்சமின்றியும் , கட்சி சார்பற்ற ரீதியிலும் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாளை பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் , பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஒரு ஜனாதிபதி, ஆட்சியில் இருக்கும்போதே, தனது அதிகாரத்தை துறந்து செல்ல நேரிட்டமை, இதுவரை வரலாற்றில் நாம் கேள்விப்பட்டிராத ஒரு அரிதான சந்தர்ப்பத்தில், தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மிகத் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட இருக்கும் தீர்மானங்கள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்த நாட்டு மக்களின், எதிர்பார்ப்புகளுக்கேற்ப முன்னெடுக்கப்படும் என்று முழு நாட்டு மக்களும், சர்வதேச சமூகமும் இலங்கை பாராளுமன்றத்தை உற்று நோக்கியிருக்கின்றன.
எல்லா விதத்திலும் ஏழ்மை நிலைக்கும், ஒன்றுமில்லா வெறுமை நிலைக்கும் தள்ளப்படும் வரை, அளவற்ற துன்பங்களை பொறுமையாக நீண்ட காலமாக சகித்து வாழ்ந்த மக்கள் அண்மையில் அலையாக ஒன்று திரண்டு எல்லாப் பகுதிகளிலும் வீதியில் இறங்கி அகிம்சை வழியிலும் மிகுந்த ஆர்வத்துடனும் தலைநகரிற்கு வந்தடைந்து , இந்த பாவம் நிறைந்த அதிகாரம் நீக்கப்பட்டு மக்களுக்கு ஆறுதலைப் பெற்றுத்தருமாறு அரசிடம் கேட்கின்றனர்.
அதிர்ஷடவசமாக இரத்தம் சிந்தப்படாமல் நிறைவேற்றப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கள் மத்தியில், நாம் தற்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது மிகத் தெளிவாகத் தெரியும். முக்கியமான இந்நேரத்தில், நாட்டின் ஒட்டுமொத்த பொதுக் கருத்துக்கும் முற்றிலும் முரணான ஒரு முடிவை, நாட்டின் அதி உன்னதமான அமைப்பான பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளால் எடுக்கப்படுமா என்ற ஓர் பேரச்சம் தோன்றியுள்ளது.
அனைத்து வழிகளிலும் துன்புற்று சோர்வடைந்திருக்கும் மக்களின் ஒரே பலமாக எஞ்சி இருக்கும், மன உறுதியை முன்வைத்து, தங்கள் உயிரைப் பொருட்டாக எண்ணாது நிதானத்துடனும், அகிம்சை வழியிலும் போராடி வெற்றி பெற்று மக்கள், ஆட்சி அமைப்பில் ஒரு மகத்தான நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தை தன் கரத்தில் வைத்திருந்தாலும் அதை தக்க வைக்க இயலாமல் அதிகாரத்தையும் நாட்டையும் விட்டு வெளியேற நேரிட்ட முன்னாள் ஜனாதிபதி எதிர்கொண்ட அனுபவத்தையும் அவருக்கு கிடைத்த அவதூறுகளையும் பார்த்தால் அதிகாரத்திற்கு பேராசை கொள்வார்களா? நம் நாட்டில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.
ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்பு எமது நாட்டில் அநேக ஜனாதிபதிகளுக்கு நடந்தது என்னவென்றால், அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முன் அவர்களுக்கு இருந்த புகழையும் நற்பெயரையும் இழந்தது மட்டுமன்று, நாட்டு மக்களின் முன்னிலையில் அவமானப்பட்டார்கள் அல்லவா?
எனவே, குறுகிய காலத்திற்குக் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை விட, ஒருவரின் சுயமரியாதையும், நாட்டு மக்களின் விருப்பை பெறுவதும் மிக முக்கியமானதொன்றல்லவா? இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி உலகம் முழுவதும் மதிக்கப்படுவதன் காரணம் அவர் தன்னைப்பற்றி நினைத்ததை விட பாரத நாட்டைப்பற்றி அதிகம் நினைத்ததால் அல்லவா? அவர் தன்னைப்பற்றிச் சிந்தித்திருந்தால், பாரதத்தின் முதல் பிரதமராகும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை நிராகரித்துவிட்டு, அவருக்குப் பதிலாக, மக்களின் விருப்பைப் பெற்ற வேறு ஒருவரை நியமித்து, பதவியில் இருந்து விலகி போய் இருப்பாரா ?
எப்போதும் இல்லாதவாறு இன்று, எமது நாடு விழிப்படைந்து மக்களின் மன உறுதி உயர்ந்திருப்பது, அதிகாரத்தை விரும்பும் ஒரு தலைவர் பதவிக்கு வருவதால் அல்ல, மாறாக தனது அதிகாரத்தை மனமுவந்து விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு உன்னதமான மக்களின் மைந்தன் முன் வருவதினாலேயேயாகும்.
74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாம் தற்போது நகர்ந்துகொண்டிருப்பது அரசியல் அதிகாரத்தைப் பிடித்து வைத்திருப்பதாலல்ல மாறாக சுயவிருப்பத்துடன் அதை விட்டுக்கொடுக்க இயலுமானால் நாட்டுக்கு உன்னதமான சேவையைச் செய்ய முடியும்.
எனவே, இந்த இக்கட்டான தருணத்தில் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களால் உங்களுக்கு கிடைத்துள்ள பதவியை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? மக்களிடம் இருந்து கிடைத்த வெற்றியை மிகவும் பயனுள்ள இடத்தில் மக்களிடம் திருப்பி அளிப்பீர்களா? அல்லது பலாத்காரமாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளீர்களா? அவ்வாறாயின் உன்னதமான மக்களின் மைந்தராக நாட்டைக் கட்டியெழுப்பும் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்திற்கு கரம் கொடுப்பீர்களா? அல்லது முன்பு ஆட்சியில் இருந்தவர்களைபோல் அதிகார பேராசை பிடித்தவர் என்று முத்திரை இடப்போகின்றிர்களா? இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை மேற்கொள்ள இன்னும் உங்களால் இயலும்.
எல்லையற்ற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதியை 2ஃ3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தையும், மக்கள் அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்ததன் காரணம், இன்று எமது நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கும் அதன் விளைவாக மக்கள் முகங்கொடுக்கும் கடுமையான துன்பங்களுக்கும் முழுபொறுப்பு கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதியும் அரசாங்கமும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதினாலேயேயாகும்.
நாடு பொருளாதார ரீதியாக ஒன்றுமில்லா வெறுமை நிலைக்கும் சர்வதேச சமூகத்தின் முன் அப்பெயரை பெற்றமைக்கும் முக்கிய காரணிகள் பல உண்டு. அவற்றில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொலைநோக்கற்ற மற்றும் தன்னிச்சையான முடிவுகள், பரவலான ஊழல் மற்றும் மோசடிகள், சட்டத்தை அரசியல் ஆதிக்கத்திற்கு அடிபணியச் செய்தல், மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் ஆகியவையாகும்.
காலிமுகத்திடலை முன்னிலைப்படுத்தி இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி வந்து போராடியது மேற்கூறிய ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்திலும் அதன் அமைப்பு முறைமையிலும் ஒரு முழுமையான மாற்றத்தை எதிர்பார்ப்பதே ஆகும். அதற்காக மக்கள் இத்தருணத்தில் தங்களால் இயன்றதை மிகவும் அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். ஜனநாயகத்தை மதிக்கும் மக்களாக அவர்கள் தற்போது நாட்டின் அரசியலமைப்பின்படி இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதன் பொறுப்பை பாராளுமன்றத்தில் இருக்கின்ற தங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒப்படைத்துள்ளனர்.
மக்கள் மிகவும் துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டு நாடு பாரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் இத்தகைய இக்கட்டான தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பொது ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் பிரதமரை தெரிவு செய்ய முடியாமல் இருப்பதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், பொதுமக்களின் அபிலாஷைகளை இன்னும் மக்களின் பிரதிநிதிகள் முறையாக புரிந்து கொள்ளவில்லை என்பதேயாகும்.
நாட்டின் ஒரு சமயத் தலைவர் என்றவகையில் இந்த நாட்டின் பொது மக்கள் சார்பாக நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் ஜனநாயக செயல் திட்டமாக, இத்தருணத்தில் நாட்டின் சமயத் தலைவர்கள், மக்கள் சார்பாக முன்வைத்துள்ள, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தற்காலிக அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு அச்சமின்றியும், கட்சி சார்பற்ற வகையில் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இக்கட்டான தருணத்தில் தங்கள் அரசியல் கட்சியின் அதிகார செயற்திட்டங்களையும் அவற்றில் வெற்றிப் பெறுவதற்காக அமைச்சர்களை விலைக்கு வாங்குவது போன்ற ஊழல் நிறைந்த செயல்களை புறந்தள்ளி, தாய்நாட்டின் மற்றும் மக்களின் அபிலாஷைகளை நனவாக்க அதிகார பேராசை மற்றும் ஊழலற்ற அதிக அர்ப்பணிப்புடன்கூடிய தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய தங்கள் மனசாட்சிக்கு ஏற்ப அதிகபட்ச பங்களிப்பை வழங்க உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டமான வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை கைவிட வேண்டாம் என்று நான் மிகவும் தாழ்மையுடனும் ஆவலோடும் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM