(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் நாங்கள் அனைவரும் அழிவின்பால் இழுத்துச்செல்லப்படுவதை தடுப்பதற்கு யாருக்கும் முடியாமல்போகும். அதனால் அரசியல் கட்சிகள் பிளவுபட்டுக்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி, பிரதமரை தெரிவுசெய்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டிஆரச்சி விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற தன்மை தொடர்பிலும் அந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய உங்களுக்கு இருக்கும் பொறுப்பு தொடர்பில் இதுவரை புரிந்துகொள்ளாத மக்கள் பிரதிநிதிகள் இருப்பதை அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகின்றது. தற்போது நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் அரசியல்வாதிகளான நீங்கள் மற்றும் பிரஜைகளாகிய நாங்கள் அழிவின்பால் இழுத்துச்செல்லப்படுவதை தடுப்பதற்கு யாருக்கும் முடியாமல்போகும்.
எதிர்காலத்தில் யார் அரச அதிகாரத்தை பெற்றுக்கொண்டாலும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்படுவதுடன் பிரஜைகளாகிய நாங்கள் இந்த அழிவுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் அல்லாத போதும் பிரஜைகளுக்கும் பாரிய அர்ப்பணிப்பை மேற்கொள்ளவேண்டி ஏற்படுகிறது. அதனால் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவுசெய்துகொள்ளும்போது அரசியல் கட்சிகள் அனைத்தினதும் இணக்கப்பாட்டுன் தெரிவுசெய்துகொள்ளவேண்டும். இதன்போது எந்த காரணத்துக்காகவும் வாக்களிக்கும் நிலைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன் ஜனாதிபதி, பிரதமர் தெரிவுசெய்துகொள்ளும்போது அந்ததந்த கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் எண்ணிக்கையிலான பெரும்பான்மையை மாத்திரம் கவனத்தில் கொள்வதை தவிர்ந்துகொள்ளவேண்டும். அரசியல் கட்சிகளுக்கிடையில் பிளவு, இணக்கப்பாடு எட்டமுடியாதவாறு நடவடிக்கை எடுத்தல் மற்றும் பேசுவதை தவிர்ந்துகொள்ளவேண்டும்.
மேலும் ஜனாதிபதி, பிரதமர் தெரிவின்போது, தனிப்பட்ட நிகழ்சி நிரல், அரசியல் அல்லது குறுகிய கட்சி அதிகாரத்தை பின்தள்ளிவிட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் முன்னுரிமை வழங்கி செயற்படவேண்டும். இதன்போது எதிர்வரும் தேர்தலை இலக்குவைத்து இந்த கஷ்டமான நிலையில் தீர்மானம் எடுப்பதை தவிர்ந்துகொள்ளவேண்டும். அதேபோன்று அமைச்சரவையை தெரிவுசெய்துகொள்ளும்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளில் இருந்தும் ஒருவரேனும் உள்வாங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்போது மக்களினால் விரும்பப்படாதவர்களை தெரிவுசெய்துகொள்ளாமல் இருக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அல்லது பிரதமர் அமைச்சுப்பதவிக்கு உங்களை அழைத்தால் அதனை நிராகரிப்பதை தவிர்ந்துகொள்ளவேண்டும்.
அமைச்சரவையை தெரிவுசெய்துகொள்ளும்போது சம்பிரதாய முறைமையில் இருந்து விடுபட்டு, பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வதற்கு இயலுமான குழுவொன்றை தெரிவுசெய்துகொள்வது தொடர்பில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது இருக்கும் பிரச்சினை, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாத பாரிய பிரச்சினையை நோக்கி செல்வதை யாராலும் தடுக்க முடியாதுபோகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM