இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்தது.
முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, இங்கிலாந்து சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்த 30 பேர் பதவி விலகினர்.
மொத்தம் 58 அமைச்சர்கள் அரசில் இருந்து வெளியேறினர். இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
தனது நெருங்கிய சகாவான கஜானா தலைவர் நதீம் ஜகாவி, நாட்டின் நலனை முன்னிட்டு பதவி விலகும்படி கூறியதன் அடிப்படையில் ஜோன்சன், கடந்த வாரம் வியாழக்கிழமை பதவி விலகினார்.
எனினும், புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஜோன்சன் இருந்த நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார்.
எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
போரிஸ் ஜோன்சன் பதவி விலகலை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர்.
அவர்களில் ஜோன்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்த, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் போட்டிக்கான தனது அறிவிப்பினை வெளியிட்டடார்.
இதேபோன்று, அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பாகிஸ்தான் வம்சாவளி சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
மேலும் அட்டார்னி ஜெனரல் சுயல்லா பிரேவர்மென், ஈராக் வம்சாவளி நதீம் ஜகாவி, நைஜீரிய வம்சாவளி கெமி பெடனாக், டாம் டுகெந்தாட் ஆகியோரும் வேட்பாளர் ஆனார்கள். இந்த போட்டியில் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்டும் இணைந்து உள்ளார்.
இந்த சூழலில், இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இறங்கியுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்காக, இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அவர், உடனடியாக அதனை முடித்து கொண்டு லண்டனுக்கு திரும்பினார்.
எம்.பி. ரகுமான் சிஸ்டி போட்டியில் உள்ள சூழலில், லிஸ்சின் அறிவிப்பு ஆகியவற்றால், இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
58 வயது நிறைந்த ஜோன்சன் 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் நீடித்து வந்த நிலையில், கட்சிக்கு நன்கொடை அளிப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அடாவடித்தனத்தில் ஈடுபட்ட மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனது ஆதரவாளர்களை பாதுகாத்து வந்துள்ளார்.
நாடாளுமன்றத்தினை தவறாக வழிநடத்தியதுடன், பொதுமக்களுக்கு நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்து கொண்டார் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுப்பப்பட்டன.
எனினும், வருகிற ஒக்டோபர் வரை அவர் பதவியில் நீடிக்க கூடும் என கூறப்படுகிறது. அதன்பின்னரே கன்சர்வேடிவ் கட்சியின் வருடாந்திர கூட்டம் நடத்தப்பட்டு ஜான்சனுக்கு பதிலாக மற்றொரு நபரை தேர்வு செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் மற்றும் வெளியுறவு மந்திரி ரகுமான் சிஸ்டி ஆகிய 3 பேர் வாபஸ் பெற்று விட்டனர்.
இதனால், இந்த தேர்தலில் இறுதியாக 8 பேர் போட்டியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் 20 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் முதல் சுற்று வாக்கெடுப்பில் போட்டியிடுவார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் முன்பதிவு நிறைவடைந்து விட்டது.
முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் எந்தவொரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார். புதிய கன்சர்வேடிக் தலைவர் 2 நிலையிலான தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுவார்.
இதற்காக 358 உறுப்பினர்கள், அடுத்தடுத்து நடத்தப்படும் வெளியேற்றுதல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வருவார்கள். இறுதியில் 2 வேட்பாளர்கள் என்ற நிலைக்கு கொண்டு வரப்படும்.
இந்த தேர்தலில் போட்டியிடும் பலரும், கார்ப்பரேசன் வரி, வருமான வரி உள்ளிட்ட வரிகளை குறைப்போம் என உறுதி கொடுத்து உள்ளனர்.
இங்கிலாந்தில் விரி விதிப்பு மக்களுக்கு நெருக்கடியாக உள்ள சூழலில் அதனை வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM