லத்தீப் பாரூக்
காலாகாலமாக இஸ்ரேலுடன் பேணி வரும் இரகசிய உறவுகளை சவூதி அரேபியா தற்போது பகிரங்கமாக முறைப்படி பேண முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. ஜுலை மாதம் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அந்த விஜயத்தின் போது சவூதி, இஸ்ரேலுடனான உறவுகளை முறைப்படி பேணும் திட்டம் வெளிவரவுள்ளது.
இதுவொன்றும் சவூதி அரேபியாவிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்படாத விடயம் அல்ல. காரணம் நீண்ட காலமாக அது இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைப் பேணி வருகின்றது. முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கூட்டு சதிகளிலும் சவூதி அரேபியா தொடர்ச்சியாகப் பங்கேற்று வந்துள்ளது. தனது இஸ்ரேலிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சகாக்களின் நன்மைக்காக சவூதி அரேபியாவே பல முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியும் உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த நாடுகளின் உட்கட்டமைப்புக்கள் பல நாசமாக்கப்பட்டுள்ளன.
எவ்வாறேனும் இஸ்ரேலுடனான உறவுகளை முறைப்படி அமுலுக்கு கொண்டு வருவது முன்கூட்டி கணிக்க முடியாத பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் சவூதி அரேபியா இஸ்லாத்தின் பூமி. உலக முஸ்லிம்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு பூமி. ஆனால் அங்குள்ள ஆட்சியாளர்கள் முதலாவது உலக மகா யுத்தத்தின் பின் முன்னாள் பிரித்தானிய ஏகாதிபத்தியவாத மற்றும் சியோனிய அதிகாரபீடத்தால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் தான் இன்று உலகளாவிய கண்டனங்கள் அனைத்தையும் மீறி உலகின் மிகவும் மோசமான அடக்குமுறை கொடுங்கோல் ஆட்சியாளர்களாக உள்ளனர். இவர்கள் எந்த வகையிலும் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
இஸ்லாத்தின் மூன்றாவது மிகப் புனித நகரமான ஜெரூஸலத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை அங்கீகரிப்பது, பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைத்து வரும் முடிவற்ற கொடுமைகளை அங்கீகரிப்பது என்பன பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. சவூதி அரசின் அதிருப்தியாளரும் ஊடகவியலாளருமான ஜமால் கஷோகி மிகக் கொடூரமான முறையில் துருக்கியில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்குள் வைத்து கொல்லப்பட்ட பின் கவூதி அரேபியா உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட தனிமை படுத்தப்பட்டிருந்தது. அந்தத் தனிமையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக சவூதி அரேபிய ஆட்சி பீடம் இன்று கொடுக்கின்ற விலை தான் இஸ்ரேலுடனான உறவுகளில் இயல்பு நிலை.
இவ்வாண்டு மார்ச் மாதம் முடிக்குரிய இளவரசர் சல்மானின் உத்தரவின் கீழ் பாரிய அளவிலான மரண தண்டனை நிறைவேற்றம் என்ற பெயரில் 81பேர் சவூதியில் கொல்லப்பட்டனர். சவூதி நீதித்துறையின் இலட்சனத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இது அமைந்திருந்தது. இந்தப் பாதகச் செயல் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானதாகும். இவ்விதமான கொலைகளுக்கு பொறுப்புக்கோருமாறு சவூதி இளவரசரை வற்புறுத்துவதற்கு பதிலாக மேலைத்தேச அரசுகள் அவரை புடைசூழ்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றன.
இளவரசர் சல்மான் அண்மையில் எகிப்துக்கும் விஜயம் செய்தார். பிராந்திய விஜயத்தின் முதற்கட்டமாக அங்கு சென்ற சல்மான் அதைத் தொடர்ந்து ஜோர்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார்.
துருக்கியுடனான இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட விரிசலை சீர் செய்யும் வகையில் இளவரசர் சல்மான் கடந்த மாதம் அங்காராவுக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்துக்கு ஐந்து தினங்கள் முன்பதாக 2022 ஜுன் 17இல் துருக்கி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஜமால் கஷோகி கொலை வழக்கும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் இளவரசர் சல்மான் தான் தனது காதலர் கஷோகியைக் கொன்றவர் என்ற நிலைப்பாட்டில் கஷோகியின் காதலி ஹேடிஸ் சென்கிஸ் தொடர்ந்தும் உறுதியாக உள்ளார்.
லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இன் தகவலின் படி முடிக்குரிய இளவரசர் இஸ்ரேலுடன் முழு அளவிலான உறவுகளை தொடங்க வேண்டும் அதற்கு பகரமாக அமெரிக்கா கவூதிக்கு அளித்துள்ள இராணுவ ரீதியான வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று தெரிய வந்துள்ளது.
இந்தக் கடினமான சமன்பாட்டில் மிக முக்கியமாக இழக்கப்படுகின்ற ஒரு விடயம் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலான நீண்டகால சமாதானமாகும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இழக்கப்பட்டு வரும் உயிர்களுக்காக அதிகபட்ச விலையாகவும் இது அமைந்துள்ளது.
சவூதி அரேபியாவிடம் இன்றைய நிலையில் மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார ரீதியான வெளிநாட்டு நாணய பலம் உள்ளது. எரிபொருள் குறைபாடுகளுக்கு மத்தியிலும் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு மத்தியிலும் இந்நிலை காணப்படுகின்றது. சவூதி அரேபியாவுக்கு மிகவும் வேண்டப்படும் எண்ணெய் வளங்களில் இருந்து தான் முடிக்குரிய இளவரசர் தனது நிலையை ஸ்தாபிக்க முயல்கின்றார்.
அமெரிக்க நிர்வாகத்தின் மீது நெருக்குதலைத் தொடுக்க எண்ணெயை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ளார். வொஷிங்டனில் தனது சொந்த பிரம்மையை புணர்நிர்மானம் செய்துகொள்ளவும், பெற்றோலிய வளத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதை முடிக்குரிய இளவரசர் நன்கு புரிந்து வைத்துள்ளார்.
ஆனால் இந்த ஈவிரக்கமற்ற சர்வாதிகாரியின் முன்னாள் தனது தோல்வியின் வெளிப்பாட்டைக் காட்டிக் கொள்ளவோ அல்லது அவர் முன்னிலையில் தலைகுனிந்து நிற்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளவோ அமெரிக்க ஜனாதிபதி விரும்பவில்லை. அதற்கு ஈடாக அவர் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புடன் தனது தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதே அவரின் திட்டம். அந்த அறிவிப்பு தான் சவூதி-இஸ்ரேல் இராஜதந்திர உறவுகள்.
சவூதி ஆரேபியாவுக்கான தனது விஜயத்தை அமெரிக்க ஜனாதிபதி இரத்துச் செய்ய வேண்டும். கஷோகி கொலைக்காகவும் யேமன் மீதான தாக்குதல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களுக்காகவும் சவூதி இளவரசரைத் தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பிரயோகிக்கப்பட்டு வரும் நெருக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிவிப்பை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்வார்.
அதேபோல் சவூதி இளவரசின் நன்மதிப்பை நிலைநிறுத்த இஸ்ரேலும் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே வொஷிங்டனில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலின் தீவிர வலது சாரி பிரிவுகள் இந்த விடயத்தில் தமது பணியை முடுக்கி விட்டுள்ளன. தற்போது வொஷிங்டனில் சவூதி அரேபியாவின் மிகப் பெரிய பிரசார சக்தியாக மாறி இருப்பது இஸ்ரேல் தான் என்பது பெரும் வேடிக்கையாகும்.
இதேநேரம் பலஸ்தீனர்களின் உரிமைகளை குறைத்து மதிப்பிடாத விதத்தில் இஸ்ரேலுடன் இயல்பு நிலையை ஏற்படுத்துவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு நினைவூட்டக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் சவூதி இளவரசரும் பயன்படுத்தி வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யதார்த்தத்தில் இந்த விடயம் தொடர்பாக சவூதி மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளவது முடியாத காரியமாகும். முடிக்குரிய இளவரசரின் கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களை கொண்டவர்கள் அங்கே நடத்தப்பட்டு வருகின்ற விதமே இதற்கு பிரதான காரணம். அந்த வகையில் பைடனின் ரியாத் விஜயம் ஒரு முக்கியமான அடையாளச் சைகையாக அமையலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM