(எம்.மனோசித்ரா)
பொது மக்களால் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகளைத் தூண்டி, அவற்றை முடக்குவதற்கு அரசாங்கம் சதி செய்கிறது.
அரசாங்கத்தின் இந்த சதித்திட்டம் வெற்றி பெற வாய்ப்பளித்து விடக் கூடாது. எனவே ஆர்ப்பாட்டத்தின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் (08) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு இரு மாதங்களை அண்மித்துள்ள நிலையிலும் , மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
மாறாக பாடசாலைகள், அரச சேவை, வைத்தியசாலைகள் என அனைத்தும் முடங்கியுள்ளன. எரிபொருள் கப்பல் வரும் தினம் குறித்தும் எவருக்கும் தெரியாது.
மக்கள் வாழ்விற்கும் சாவிற்குமிடையில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்திய அரசாங்கத்தை துரத்தியடிக்க வேண்டும்.
மக்கள் இவ்வாறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களை பதவியிருந்து விலகச் செய்து , நாட்டை கட்டியெழுப்பக் கூடியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர்.
இதன் போது 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்திற்கு (இன்றைய ஆர்ப்பாட்டம்) ஜே.வி.பி. முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வன்முறைகளைத் தூண்டி போராட்டங்களை முடக்குவதற்கு அரசாங்கம் சதித் திட்டம் தீட்டுகிறது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான ஜனநாயக உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சதி செய்து முடக்க முடியாது என்பதை அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வன்முறையை தூண்டும் அரசாங்கத்தின் சதித்திட்டம் வெற்றி பெற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எந்த வகையிலும் வழியேற்படுத்திக் கொடுத்து விடக் கூடாது.
எம்மால் முன்னெடுக்கப்படவுள்ளது ஜனநாயக போராட்டமாகும். இதில் நாம் நிச்சயம் வெற்றி பெருவோம். வெற்றியானது மக்களிடம் உள்ளது என்று முழுமையாக நம்புகின்றோம்.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் மக்களின் போராட்டங்களினாலேயே பதவி விலகினர். அதே போன்று தற்போதைய அரசாங்கத்தையும் பதவி விலகச் செய்ய வேண்டும்.
நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது. எனவே பாதுகாப்பு தரப்பினரும் மக்கள் பக்கமிருந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM