(என்.வீ.ஏ,)
பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோ ரூட், ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோர் அபார சதங்கள் குவிக்க, இங்கிலாந்து 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
கொவிட் தொற்று காரணமாக 9 மாதங்கள் பிற்போடப்பட்டு நடத்தப்பட்ட இந்த 5ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் மூலம் தொடர் 2 - 2 என சமப்படுத்தப்பட்டது.
போட்டியில் வெற்றிபெறுவதற்கு மேலும் 119 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை 3 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து பகல் போசன இடைவேளைக்கு முன்னர் மேலதிக விக்கெட் இழப்பின்றி 378 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய வெற்றி இலக்கை அவ்வணி கடந்தமை சிறப்பம்சமாகும்.
ஜோ ரூட் 142 ஓட்டங்களுடனும் ஜொனி பெயார்ஸ்டோவ் 114 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 269 ஓட்டங்ளைப் பகர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.
மேலும் நடப்பு கிரிக்கெட் பருவத்தில் இங்கிலாந்து ஈட்டிய தொடர்ச்சியான நான்காவது வெற்றி இதுவாகும்.
கடைசியாக நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது.
இந்தியாவுடனான பட்டௌடி கிண்ண தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியதன் மூலம் ஆங்கில மண்ணில் 2007க்குப் பின்னர் முதலாவது தொடர் வெற்றியை ஈட்டும் இந்தியாவின் எதிர்பார்ப்பு அற்றுப்போனது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ஓட்டங்களைக் குவிக்க இங்கிலாந்தினால் 284 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதன் காரணமாக இந்தியா இந்த டெஸ்டிலும் தொடரிலும் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 245 ஓட்டங்களுக்கு சுருண்டதால் இரண்டு அணிகளுக்கும் வெற்றிவாய்ப்பு இருப்பதாக தென்பட்டது.
எனினும் இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் ஒலி போப்பைத் தவிர்ந்த மற்றைய நால்வரும் திறமையாக துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து வெற்றிபெறுவதற்கு உதவினர்.
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த ஜொனி பெயார்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.
இந்தத் தொடர் சமநிலையில் முடிவடைந்ததால் இரண்டு அணிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குரிய தலா 24 புள்ளிகளை ஈட்டின.
இந்தியாவுக்கு அபராதம்
மீள் ஏற்பாடு செய்யப்பட்டு எஜ்பெஸ்டனில் நடத்தப்பட்ட 5ஆவது டெஸ்ட் போட்டியில் மந்தகதியில் ஓவர்கள் வீசியதற்காக இந்தியாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 40 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகளில் 2 புள்ளிகள் அபராதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: 416 (ரிஷப் பன்ட் 146, ரவிந்த்ர ஜடேஜா 104, ஜஸ்ப்ரிட் பும்ரா 31 ஆ.இ., ஜேம்ஸ் அண்டர்சன் 60 - 5 விக்.)
இங்கிலாந்து 1ஆவது இன்: 284 (ஜொனி பெயார்ஸ்டோவ் 106, சாம் பில்லிங்ஸ் 36, ஜோ ரூட் 31, மொஹமத் சிராஜ் 66 - 4 விக்., ஜஸ்ப்ரிட் பும்ரா 68 - 3 விக்.)
இந்தியா 2ஆவது இன்: 245 (சேத்தேஷ்வர் புஜாரா 66, ரிஷாப் பன்ட் 57, பென் ஸ்டோக்ஸ் 33 - 4 விக்.)
இங்கிலாந்து 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 378) 378 - 3 விக். (ஜோ ரூட் 142 ஆ.இ., ஜொனி பெயார்ஸ்டோவ் 114 ஆ.இ., அலெக்ஸ் லீஸ் 56, ஸக் க்ரோவ்லி 46, ஜஸ்ப்ரிட் பும்ரா 74 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM