எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது : முறையான வெளிப்படையான வேலைத்திட்டம் தேவை - சஜித்

Published By: Vishnu

01 Jul, 2022 | 08:02 PM
image

(எம்.மனோசித்ரா)

இனவாதத்தினைத் தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஊடாக சமூகத்தினுள் தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் செயற்பட்டனர்.

இவ்வாறான குறுகிய இனவாத நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த செயற்பாடுகளால் கட்டார் போன்ற நாடுகளை இவர்கள் கோபமடையச் செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதற்கு முறையான வெளிப்படையான வேலைத்திட்டம் தேவை என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

நிலவும் நெருக்கடிமிக்க நிலைமையிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அதன் மூன்றாம் கட்டமாக தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடலொன்று 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  இடம்பெற்றது.

இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அகில இலங்கை தமிழ் காங்ரஸ், அகில இலங்கை மக்கள் காங்ரஸ், தேசிய காங்ரஸ், ஜனநாயக மக்கள் காங்ரஸ், புதிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

நான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பினை ஏற்று அதனை திறப்பதில் தான் கலந்து கொண்டேன். அன்று அதனை இலக்காகக் கொண்டு எனக்கு எதிராக பாரதூரமான விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இனவாதத்தினைத் தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஊடாக சமூகத்தினுள் தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் செயற்பட்டனர். 

அவ்வாறானவர்கள் குறுகிய இனவாத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டார் போன்ற நாடுகளை ஆத்திரமடையச் செய்தனர்.

இவ்வாறு அன்று போராட்டம் நடத்திய குழுவினர் இன்று அந்நாட்டிற்கு எரிபொருளைப் பெறுவதற்காகச் சென்றுள்ளனர். அன்று மோசமான நிலையிலிருந்த கட்டார் இன்று எவ்வாறு முன்னேற்றமடைந்துள்ளது?

இனவாதத்தை எப்போதும் தமது பிழைப்புக்காக பயன்படுத்தும் குழுக்கள் நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்துடன் உலகின் பல நாடுகள் கோபமடைந்துள்ளமைக்கான காரணம் இனவாத, இனவெறி செயற்பாடுகளின் காரணமாகவே ஆகும்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இந்த சந்தர்ப்பத்தில் மிக விரைவாக செய்ய வேண்டியது தரப்படுத்தல்களில் இலங்கையை முன்னேற்றுவதற்காக பொருளாதார மாறுபாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டியதாகும்.

அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிந்து கொண்ட நாடுகள் முதலில் செய்தது சர்வதேசத்துடன் முறையானதொரு கொடுக்கல் வாங்கலை ஏற்படுத்திக் கொண்டமையாகும்.

எமது நாடு அதற்கு முரணான செயற்பாட்டையே செய்கின்றது. எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதற்கு முறையான வெளிப்படையான வேலைத்திட்டம் தேவை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்