(எம்.எப்.எம்.பஸீர்)
கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிஸார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி ரத்ன உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன விடுத்த உத்தரவை ரத்து செய்து 'ரிட்' ஆணை ஒன்றினை (எழுத்தாணை) பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நேற்று ( ஜூன் 30) மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பி. கீர்த்திரத்ன உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் இந்த ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், குறித்த ரிட் மனு நேற்று பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோவும், பிரதிவாதிகள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கும் டி ஆப்றூவும் மன்றில் ஆஜராகினர். பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன ஆஜரானார்.
நேற்றைய தினம், இந்த ரிட் மனுவின் இடைக்கால கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது மன்றில் விடயங்களை முன்வைத்த மேலதிக சொலிசிட்ட ஜெனரலுக்கும் டி ஆப்றூ, இவ்வழக்கின் மனுதாரர்கள், தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி கேகாலை மேல் நீதிமன்றில் பிணை மனுவொன்றினை தாக்கல்ச் செய்துள்ள நிலையில், அம்மனு எதிர்வரும் 7 ஆம் திகதி விசாரணைக்கு வருவதாக கூறினார். அதன்படி அம்மனுவின் பின்னரான திகதியொன்றில் இந்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கம் டி ஆப்றூ கோரினார்.
இதன்போது, இம்மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகள் தரப்புக்கு உத்தரவிட்டது.
இதன்போது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, இந்த ரிட் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும், அது தொடர்பிலான ஆட்சேபனங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதாகவும் நீதிமன்றில் அறிவித்தார்.
இந்நிலையிலேயே குறித்த மனு எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி, எரிபொருள் கோரி ரம்புக்கனை பிரதேச மக்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், அன்றைய தினம் மாலை பொலிஸாரால் பலப்பிரயோகம் செய்து கலைக்கப்பட்டது. இதன்போது கண்ணீர் புகை தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியனவும் பதிவாகின.
ரீ 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுடப்பட்டிருந்தமை பின்னர் முன்னெடுத்த நீதிவான் நீதிமன்ற பரிசோதனைகளின் போதான சாட்சிப் பதிவில் தெரியவந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 42 வயதான சாமிந்த லக்ஷான் என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிஸார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்த பீ 2424/ 2022 எனும் இலக்கத்தின் கீழ் பொலிஸாரால் கேகாலை நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவ்வழக்கில் துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி உத்தரவிட்டது.
கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன இந்த உத்தரவை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு பிறப்பித்தார். அதன்படி அப்போது கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த கீர்த்தி ரத்னவும் துப்பாக்கிச் சூடு நடாத்திய மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்ச் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM