ரொபட் அன்டனி
வரிசைகள், காத்திருத்தல், ஏமாற்றங்கள், பொருளாதார பிரச்சினைகள், பாடசாலை ஸ்தம்பிதம், வர்த்தக செயற்பாடுகள் பாதிப்பு, மின்வெட்டு நெருக்கடி, தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் பாதிப்பு, போக்குவரத்து ஸ்தம்பிதம், எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் விலை அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் தினந்தோறும் காணப்படுகின்றன. மக்கள் தமது வாழ்க்கையை ரணகளமாகவே கடக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. வரிசைகளை பார்க்கும்போது மக்கள் எதிர்கொள்கின்ற அந்த வேதனை மிகவும் ஒரு துரதிஷ்டவசமான நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. மக்களின் நிலை என்ன? மக்கள் மூன்று வேளை உணவு உண்டு வாழும் நிலைமை இப்போது மீண்டும் வரும். எப்போது மீண்டும் பழைய நிலைமை ஏற்படும் போன்ற கேள்விகள் மக்களின் முகத்தில் பிரதிபலித்து கொண்டே இருக்கின்றன.
இதற்கிடையில் 51 பில்லியன் கடன் சுமையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. வருடம் ஒன்றுக்கு ஆறு பில்லியன் டொலர்களை கடன் தவணை பணமாக செலுத்த வேண்டியிருக்கிறது. அதேபோன்று ஏற்றுமதி வருமானமாக 12 பில்லியன் டொலர்களே பதிவாகின்றன. ஆனால் இறக்குமதி செலவானது 22 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றன. சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருகை பாதிக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற டொலர் வருகையும் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது. அதேபோன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய கடன்களை பெற முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை வங்குரோத்து நிலை என்ற விடயம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் கடன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கலுக்குள் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
மறுபுறம் இந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் ஊடாக இதுவரை 2.4 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைத்திருக்கின்றன. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. கடன் மறுசீரமைப்புக்களை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக சர்வதேச ஆலோசனை முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெளிநாடுகளில் பணி புரிகின்றவர்கள் இலங்கைக்கு அனுப்புகின்ற டொலர்களை அதிகரித்துக் கொள்வதற்கு அவற்றை சட்ட ரீதியான முறையில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த தினங்களில் கூட எரிசக்தி அமைச்சர் கட்டாருக்கு விஜயம் செய்து எரிபொருள் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இரண்டு அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பாக ஆராய்ந்திருந்தனர். இவை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நகர்வுகளாகவுள்ளன.
எனினும் நீண்ட காலத்திலும் இந்த டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. தற்போது இந்த டொலர் நெருக்கடியை எதிர் கொள்வதற்கு குறுகிய காலத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதனூடாகவே தற்போது இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். ஆனால் நீண்ட கால திட்டங்களின் ஊடாகவே அடுத்து வரும் காலங்களில் இந்த பிரச்சினைகள் வராதவாறு பார்த்துக் கொள்ள முடியும். தற்போது குறுகிய திட்டங்களுடன் இந்த நெருக்கடி தீர்ந்தாலும் ஆறு மாதங்களின் பின்னர் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுவிடும்.
எனவே எதிர்வரும் காலங்களில் இந்த நெருக்கடியை நிரந்தரமாக சமாளிக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியமாக இருக்கின்றது. முக்கியமாக பல துறைகளில் நீண்டகால ஆழமான ஆற்றல்மிக்க மறுசீரமைப்புகளை செய்ய வேண்டிய அவசியம் காணப்படுகிறது. மிக தீர்க்கமானதாக இலங்கையின் ஏற்றுமதி வருமானம் காணப்படுகிறது. ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். ஏற்றுமதி வருமானத்தின் மூலக்கூறுகள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு அதனை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது கட்டாயம்.
ஏற்றுமதி வருமானத்தை பொறுத்தவரையில் இலங்கை வருடம் ஒன்றுக்கு 12 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்கின்றது. 10 முதல் 12 பில்லியன் டொலர்கள் கிடைப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அது போதுமானது அல்ல. காரணம் இலங்கையின் இறக்குமதியானது 22 பில்லியன்களாக காணப்படுகின்றன. எனவே ஏற்றுமதி வருமானம் கிட்டத்தட்ட 15 பில்லியன் டொலர்களை நெருங்கவேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினையை சமாளிக்க முடியும். எனவே ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக தேயிலை துறை ஊடாக கிடைக்கும் வருமானம் இரண்டு பில்லியன் டொலர்களை தாண்ட வேண்டும். அதேபோன்று ஆடைத்துறையில் ஐந்து பில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. அதனை ஆறு பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கான திட்டங்கள் அவசியமாகும். அதுமட்டுமின்றி மேலும் ஏற்றுமதி பொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை அவசியமாகின்றது. கடலுணவு ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். அடுத்துவரும் வருடங்களில் 15 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானம் ஊடாக வருடமொன்றுக்கு பெற்றுக் கொள்வதை இலக்காக எடுத்துக்கொள்வது இங்கு மிக முக்கியமாகும். அதுமட்டுமன்றி ஏற்றுமதி உற்பத்தி பொருட்களை மேற்கொள்பவர்களுக்கு வரி சலுகையை வழங்குவதுடன் மூலதன உதவிகளை செய்யலாம். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் ஊடாக மட்டுமே அதனை அதிகரிக்க முடியும். அதனால் அது தொடர்பில் நீண்டகால திட்டங்கள் அவசியமாகின்றன.
அதேபோன்று அடுத்து மிக முக்கியமானதாக இறக்குமதி பதிலீடுகள் தொடர்பாக ஆராய்வது முக்கியமாகும். ஏற்றுமதி இறக்குமதி பிரச்சினைக்கு தீர்வாக இறக்குமதியை கட்டுப்படுத்துவது ஒரு தீர்வாக அமையாது என்பது சகலருக்கும் தெரியும். காரணம் இறக்குமதி செய்கின்ற போதுதான் ஏற்றுமதிக்கான நடவடிக்கை ஆற்றல் மிக்கதாக இருக்கும். எனவே இறக்குமதியை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இறக்குமதி பதிலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். உதாரணமாக இறக்குமதி செய்கின்ற பொருட்களில் இலங்கையில் உற்பத்தி செய்துகொள்ள கூடியவற்றை இங்கேயே உற்பத்தி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அதனூடாக இறக்குமதிக்கு அதிக டொலர்கள் வெளிச் செல்வதை கட்டுப்படுத்த முடியும்.
குறிப்பாக மீன் இறக்குமதி, பால்மா இறக்குமதி போன்றவற்றை கட்டுப்படுத்தி அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் மரக்கறி வகைகளை உள்நாட்டில் அதிகளவில் உற்பத்தி செய்யலாம். உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யாமல் அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். இது போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்க்கும் பட்சத்தில் நிச்சயமாக டொலர்கள் வெளிச் செல்வதை குறைக்கலாம். தற்போது 22 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்ற இறக்குமதி செலவை நிச்சயமாக 19 பில்லியன் வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். அதாவது இறக்குமதி பதீலீடு என்பது ஒரு முக்கியமான விடயமாக காணப்படுகிறது. இது ஒரு சிறந்த வியாபார உத்தியாக இருக்காது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தென் கொரியா மலேஷியா போன்ற நாடுகள் இதில் பாரியளவில் நன்மையடைந்திருக்கின்றன.
அடுத்த மிக முக்கிய டொலர் வருகை மூலமாக சுற்றுலாத்துறை காணப்படுகிறது. அதாவது 2018 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை வருமானமாக 4.4 பில்லியன் டொலர்கள் கிடைத்தன, அதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தற்போது 500 மில்லியன்களுக்கும் குறைவான டொலர்களையே சுற்றுலா வருமானமாக பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவது மிக அவசியமாகும். முக்கியமாக சுற்றுலா துறையை கவர்வதற்கான வேலைத்திட்டங்கள் உரிய முறையில் செயற்திறனாக முன்னெடுக்கப்படுவது தீர்க்கமானதாக இருக்கின்றது. இலங்கையில் இருக்கின்ற சுற்றுலா தலங்களை வெளிநாடுகளில் பிரசாரம் செய்வது மட்டுமின்றி சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான இலக்குகளை வெளிநாட்டு தூதரகங்களுக்கு வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 6 பில்லியன்களை கடந்து வருமானம் பெற முடியும்.
அடுத்த மிக முக்கியமான ஒரு டொலரை கொண்டு வருவதற்கான மூலமாக வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி காணப்படுகிறது. இது வருடம் ஒன்றுக்கு ஏழு பில்லியன்கள் வரை வந்து கொண்டிருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு ஐந்து பில்லியன்களாக குறைவடைந்திருக்கின்றது. அதேபோன்று இந்த வருடமும் இன்னும் அது குறைவடையும் சாத்தியத்தை கொண்டுள்ளது. அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மக்கள் சட்டரீதியான வழியில் அந்த டொலர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்படவேண்டும். வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் சரியான முறையில் இலங்கைக்கு டொலர்களை அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதேபோன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவருவதற்கான வேலை திட்டம் அவசியமாகும். ஒற்றை ஜன்னல் என்ற ஒரே அறையின் கீழ் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் இலங்கையில் இலகுவாக முதலீடுகளை மேற்கொள்வதற்கான வேலை திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். புதிய முதலீடுகளை இலங்கையில் கவருவதற்கான ஊக்குவிப்புக்களை வெளிப்படுத்துவதும் இன்றியமையாதது.
இவ்வாறு பல்வேறு நீண்டகால வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் ஊடாக டொலர் வருகையை அதிகரித்துக்கொள்வது அவசியமாகின்றது. காரணம் குறுகிய கால திட்டங்களை போன்று நீண்டகால திட்டங்களும் இந்த டொலர் வருகையை அதிகரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. எனவே அது தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும். நீண்டகால திட்டங்களே எப்போதும் ஒரு நாட்டுக்கு பயன் கொடுப்பதாக அமையும். கடந்த காலங்களில் இந்தியா, மலேசியா, தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகளை பார்க்கும்போது அவர்கள் ஒரு கட்டத்தில் தமது பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்து நீண்டகால திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். 90 களில் பல நாடுகளில் முக்கியமாக கிழக்காசிய நாடுகளில் பாரிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நாடுகளுக்கு அந்த நீண்டகால மறுசீரமைப்புக்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் இன்று பாரியதொரு நன்மையைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்து இருக்கின்றன. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தியாவில் 90 களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் ஊடாக இன்று அந்த நாடு 600 பில்லியன் டொலர்களை கையிருப்பாக வைத்திருக்கிறது. 1991ஆம் ஆண்டு இரண்டு வாரங்களுக்கு பெறுமதியான டொலர் கையிருப்பே இருந்திருக்கிறது. ஆனால் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார திட்டங்களின் ஊடாக இன்று முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அதேபோன்று கொரியா, மலேசியா போன்ற நாடுகளும் பாரிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு நீண்டகால திட்டங்களை முன்னெடுத்து இந்த நிலைமைக்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன.
சர்வதேச நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதும் முக்கியமாகின்றது. அதனால் நீண்டகால பொருளாதாரத்தை நோக்கி உடனடியாக வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய கட்டத்தில் இலங்கை இருக்கிறது. தீர்மானம் எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM