இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த குடியரசுத் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஜூலை மாதம் 18ஆம் திகதியன்று நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் திகதியன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு எதிர்வரும் 29 ஆம் திகதி இறுதி நாளாகும்.
இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்குபற்றினர்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கட்சியின் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்ததாவது..
'' நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிழக்கு இந்தியாவில் இருக்கும் தலைவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின பெண் தலைவரான திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பின்பு தான் அவர் தெரிவு செய்யப்பட்டார்'' என்றார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட திரௌபதி முர்முவிற்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது...
'' வாழ்வில் வறுமை, துன்பங்களை கடந்த லட்சக்கணக்கான மக்கள் திரௌபதி முர்முவின் வாழ்க்கை அனுபவத்தை கண்டு வலிமை பெறுவார்கள். அரசு திட்டங்கள், இயற்கை குறித்து அவரது புரிந்துணர்வு நாட்டுக்கு பயனளிக்கும். சிறந்த குடியரசுத் தலைவராக அவர் இருப்பார்.'' என பதிவிட்டிருக்கிறார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியின பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளது மூலம் அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் மட்டுமன்றி நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என பாஜக கருதுகிறது. அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளான ஓடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம், ஜார்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் பாஜக நம்புகிறது.
ஒடிசா மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான மயூர்பஞ்ச்சில் உள்ள பைய்டோசி கிராமத்தில் 1958 ஜூன் மாதம் 20ஆம் திகதி பிறந்தார். ஸாந்தல் எனும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவரான இவர், தனது அரசியல் வாழ்க்கையை மாநகராட்சி உறுப்பினராக தொடங்கினார்.
2013ஆம் ஆண்டில் பாஜக பழங்குடியினர் பிரிவின் துணைத் தலைவராக பதவி வகித்த இவர், ராய்ரங்பூர் தொகுதியிலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார்.
2000 முதல் 2004ஆம் ஆண்டு வரை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் வர்த்தகம், போக்குவரத்து, மீன், கால்நடைத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக இவர் பொறுப்பேற்றார். 2021 ஜூலை 12ஆம் திகதி வரை ஆளுநர் பதவியை இவர் வகித்தார்.
திரௌபதி முர்முவின் கணவர் சியாம் சரண் முர்மு மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்துவிட்டனர். அவருக்கு தற்போது இட்ஸ்ரி முர்மு எனும் ஒரு மகள் மட்டுமே இருக்கிறாள். இவர் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கணேஷ் ஹெம்ப்ராம் ரக்பி விளையாட்டு வீரர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.
குடியரசு தலைவராக இவர் தெரிவானால், நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM