தமிழக சினிமாவில் 'கரு', 'வனமகன்', 'லக்ஷ்மி', 'தலைவி' போன்ற படங்களின் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றிவரும் திரு. சிவா சரவணன் தயாரித்துள்ள 'second show' படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் குறித்து அவர் மித்திரன் வாரமலருக்கு வழங்கிய நேர்காணல் இனி.....
second show - இந்த டைட்டில் வைக்கப்பட்டதன் காரணம் என்ன?
இந்தியாவில் second show பிரபலமான டைட்டில். அதையே இந்தப் படத்திலும் பயன்படுத்தியுள்ளோம்.
'பைலட் பிரேம்நாத்' (1978), 'நங்கூரம்' (1979), 'தீ' (1981) வரிசையிலான இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பு படங்களை பற்றிய உங்கள் பார்வை....
அப்போது இரு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், கலைஞர்கள் இணைத்து திரைப்படங்களை உருவாக்கியிருந்தனர். ஆனால், யாரும் இரு மொழிகளில் படங்கள் எடுக்கவில்லை. முதல் முறையாக இணை தயாரிப்பில் தமிழ், சிங்களம் என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட முதல் படம் இதுவே.
இந்தப் படத்தை இணை தயாரிப்பாக உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது?
திருமதி. கௌஷல்யா விக்ரமசிங்க அவர்களே இதற்கு காரணம். அவரோடு எல்.கே. விஜய் போன்றோரின் ஒத்துழைப்போடு இலங்கையிலிருந்து நடிகர்களை தெரிவு செய்து படத்தை உருவாக்கினோம்.
படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகி, எத்தனை நாட்கள் நடந்தது?
2019 செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டது. 2020 மே அல்லது ஜூன் மாத இடைவெளியில் படத்தை வெளியிட தீர்மானித்தோம். கொரோனா அச்சுறுத்தல் காலச்சூழலால் முடியாமல் போய்விட்டது. எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி second show படத்தை இரு மொழிகளிலும் வெளியிடவுள்ளோம்.
படத்தின் கதை என்ன? சுருக்கமாக...
பெண்களை போற்றும் படம். த்ரில்லிங், அமானுஷ்யம் கொண்ட இந்தப் படத்தினூடாக சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காட்டியுள்ளோம்.
அதிகமாக க்ளாமர் காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறதே....?
பெண்கள் மீது நடத்தும் கொடுமைகளையே காட்டியுள்ளோம். இதுபோன்ற குற்றங்களை சுட்டிக்காட்டும் விதமாகவே படத்தின் முடிவு அமைந்திருக்கிறது என்பது படத்தை பார்த்தால் தான் புரியும்.
கவர்ச்சி குறைவாகவோ, இல்லாமலோ கூட படத்தை எடுத்திருக்கலாமே...?
கதையின் பக்கம் கவனத்தை திருப்பும்போது அங்கே க்ளாமரும் தேவைப்பட்டது. அவ்வளவுதான்.
இணை தயாரிப்பு என்கையில் ஒன்றில் இந்தியாவில் அல்லது இலங்கையில் படப்பிடிப்பு நடத்தியிருக்கலாம்.... அவ்வாறன்றி படப்பிடிப்புத் தளமாக லண்டனை ஏன் தெரிவு செய்தீர்கள்?
அதிலும் ஒருசில சிக்கல்கள் இருந்தன. தமிழ்நாட்டிலோ இலங்கையிலோ படப்பிடிப்பு நடத்துவதற்கான சூழ்நிலை அமையவில்லை. அத்தோடு எனது அண்ணனான படத்தின் பிரதான தயாரிப்பாளர் திரு. மகாதேவன் கணேசன் லண்டனில் இருப்பதால் படப்பிடிப்பை அங்கேயே நடத்தினோம்.
ஒரே படத்தை தமிழ், சிங்கள மொழிகளில் எடுக்கும்போது மொழியை புரிந்துகொள்வதில் கலைஞர்கள் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டனர்?
சிங்கள மொழி அறியாத இந்திய கலைஞர்களும் சிங்கள வேர்ஷனில் நடித்துள்ளனர். இதில் நடிகர் ஹேமல் ரனசிங்க இந்த படத்துக்காக நிறைய உழைத்திருக்கிறார். மற்ற நடிகர்களோடு அவர் பணியாற்றிய விதம் பாராட்டுக்குரியது. சிங்களம் பேசத் தெரியாத கலைஞர்களுக்கு சிங்கள மொழி வசனங்கள், உச்சரிப்பு முறைகளை ஹேமல் தான் சொல்லிக்கொடுத்தார்.
அமானுஷ்ய கதைகளை தயாரிப்பாளர்கள் அதிகம் நாடுவது ஏன்?
ட்ரெண்டில் எது உள்ளதோ அதை நோக்கித்தானே பயணிக்க முடியும். இன்றைக்கு நிறைய பேர் அமானுஷ்யங்களை அறிய முற்படுவதால் அவ்வாறான படங்களே அதிகம் வருகின்றன. தமிழ்நாட்டில் கூட 'காஞ்சனா', 'தேவி' வரிசையில் இன்னும் சில திரைப்படங்களின் வருகைக்கும் அதுவே காரணம்.
இயக்குநர் பற்றி சில வார்த்தைகள்...
முன்னரே பல படங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள ஒருவர், இயக்குநர் ஞானம். இந்த படத்துக்காக நிறையவே உழைத்துள்ளார்.
தயாரிப்புக்கு முன்னர் இயக்குநரிடம் கதை கேட்பீர்கள் அல்லவா.... எவ்விதமான கதைகளை நீங்கள் தெரிவு செய்வது வழக்கம்?
எல்லாம் கலந்த கமர்ஷியலாக இருக்க வேண்டும்.
இந்த கூட்டுத் தயாரிப்பு திரைப்படத்தில் இலங்கை - இந்திய கலை, கலாசார, வாழ்க்கை முறை, வரலாற்றுப் பதிவுகள் தொடர்பான விடயமேதும் இணைக்கப்பட்டுள்ளதா?
இல்லை... சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு பாதிக்காமல் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம்.
கூட்டுத் தயாரிப்பு சினிமா வளர்ச்சியில் நீங்கள் காணும் அன்றைக்கும் - இன்றைக்குமான வேறுபாடு என்ன?
அந்த காலத்தில் படங்களை ஃபிலிமில் எடுத்தார்கள். இன்று எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. எத்தனை முறை வேண்டுமானாலும், ஷாட் எடுக்கலாம். நமக்கு வேண்டிய காட்சிகளை தேர்ந்தெடுக்கவும் வசதிகள் வந்துவிட்டன. திரைப்படங்களை உருவாக்கும் முறையும் எளிதாகிக்கொண்டே வருவதாக தோன்றுகிறது.
இரு நாடுகளின் இணை தயாரிப்பினால் நீங்கள் அடையும் நன்மை?
இலங்கையிலிருந்தும் நடிகர்களை இணைத்து படங்களை தயாரிப்பதால் வர்த்தக ரீதியில் வாய்ப்புகளை பெறுவதற்கு இங்கே சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றால், தொடர்ந்து படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
உங்கள் பூர்வீகம் இலங்கைதானா?
அப்பாவின் அம்மா கண்டியில் பிறந்தவர். பாட்டியின் அப்பாவான கதிரேசன் செட்டியார் இங்கே பொலிஸ் அதிகாரியாக 1969-70களில் பணியாற்றியவர்.
இலங்கை திரையரங்குகளில் இந்திய திரைப்படங்களுக்கு முதன்மையான இடம் வழங்கப்படுவது போல் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் (திரையரங்குகளில்) எமது மண்ணின் படைப்புகளுக்கு எத்தகைய இடம் கொடுக்கப்படுகிறது?
தற்போது இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் மக்கள் நடிகர்களை விட கதைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். யார் இயக்குநர், எப்படியான கதை என்பதை அறிந்து படம் பார்க்கிறார்கள். கதை சிறப்பாக இருந்தால், படம் ஓடும்.
- மா. உஷாநந்தினி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM