புகையிலை மற்றும் சிகரட்டுக்கு எதிரான உலக சுகாதார தாபனத்தின் சாசனத்தில் கைச்சாத்திட்ட ஆசியாவின் முதலாவது நாடும் உலகின் நான்காவது நாடுமான இலங்கை இன்று புகையிலையை ஒழித்துக்கட்டும் விடயத்தில் முன்னிலை வகிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
புகையிலை, மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள்களிலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கையை இலங்கையர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி மகாவலி ரிச் ஹோட்டலில் இன்று ஆரம்பமான மதுசாரம், புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டில் போதைப்பொருளை முற்றாக ஒழித்தல் மற்றும் அதுதொடர்பான கொள்கைகள் வகுத்தலை நோக்கமாகக்கொண்டு நடைபெறும் இம்மாநாட்டில் 23 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 93 உறுப்பினர்கள் பங்குபற்றுகின்றனர். சர்வதேச போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகாரசபை, போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு இன்று முதல் நவம்பர் 04 ஆம் திகதி வரை நடைபெறும்.
இம்மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் இளைஞர் செயலமர்வில் தேசிய மற்றும் சர்வதேச இளைஞர் குழுக்கள் பங்குபற்றுகின்றன. தலைமைத்துவப் பயிற்சிகளை மேம்படுத்தவும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தான் சுகாதார அமைச்சராக இருந்தபோது மதுசாரம், புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களின் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஒழிப்பதற்கு கொள்கை மற்றும் சட்டதிட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை நன்றாக விளங்கிக்கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பிரச்சினையை சமூகத்தில் இருந்து ஒழிப்பதற்கு தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவுடனேயே ஒரு விசேட செயலணியை தாபித்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த விடயங்களில் தான் தனிப்பட்ட முறையில் ஈடுபாடுகாட்டிவருவதாகவும் குறிப்பிட்டார்.
சிகரட் பக்கற்றுகளில் புகைத்தல் நூற்றுக்கு 80 வீதம் சுகாதாரத்திற்கு கேடானது என்ற எச்சரிக்கையுடனான படங்களை பிரசுரிக்க வேண்டுமென சட்டம் கொண்டு வரக் கிடைத்தது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் புகையிலைக்கான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் அது புகையிலையின் பாவனையை வெகுவாகக் குறைப்பதற்கு வழிவகுக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு போதைப்பொருள் ஒழிப்புக்கான மிகவும் வினைத்திறன்மிக்க கொள்கைகளை அமைப்பதற்கும் ஒரு புதிய முறைமைகளைக் கட்டியெழுப்புவதற்கும் வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மதுசாரம் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் பாலித்த அபேகோன், போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கித்தலவ ஆராச்சி, சர்வதேச போதைப்பொருள், புகையிலை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் தலைவர் கிறிஸ்டினா ஸ்பெரகோவா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM