(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதைப் போன்று , பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான வழிமுறைகளும் இலகுவாக்கப்பட வேண்டும்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நிறைவேற்றத்திகார பிரதமர் முறைமை தோற்றம் பெற்றுவிடாமல் இருப்பது தொடர்பிலும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் , தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
2015 நவம்பர் 12 ஆம் திகதி வரையே தேர்தல்கள் ஆணையாளர் என்ற தனிநபர் தீர்மானங்கள் எடுக்கக் கூடிய முறைமை காணப்பட்டது.
அதன் பின்னர் தேர்தல் ஆணையாளருடன் தேர்தல் ஆணைக்குழுவின் ஏனைய இரு உறுப்பினர்களும் இணைந்து மூவரும் ஒருமித்து தீர்மானங்களை எடுக்கக் கூடிய முறைமை உருவாக்கப்பட்டது.
அதற்கமைய அதன் பின்னரான காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணையாளர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்களதும் கையொப்பத்துடனேயே வெளியிடப்பட்டது.
எனவே இரட்டை குடியுரிமையுடைய பிரஜை வேட்புமனு தாக்கல் செய்யும் விவகாரத்தில் தேர்தல் ஆணையாளர் ஏகமனதாக செயற்பட்டார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொறுத்தமற்றது.
அது மாத்திரமின்றி 2019 தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தினம் அறிவிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெறவில்லை. அவ்வாறு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தால் அது குறித்து ஆராய்ந்திருக்கலாம்.
நாட்டில் தற்போது வன்முறையற்ற புரட்சிகரமான மாற்றம் அவசியமாகும். எனவே 17 மற்றும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தங்களிலுள்ள விடயங்களைத் தவிர்த்து புதிய அரசியலமைப்பு திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதும் , பிரிதொரு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதும் பொறுத்தமற்றது.
எனவே 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது 19 இற்கும் அப்பாற்பட்ட 19 பிளஸாகவே அமைய வேண்டும். அதில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
காரணம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய சுயாதீன தேர்தலை நடத்தக் கூடிய சூழலை உறுதிப்படுத்துவது ஜனாதிபதியின் கடமையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 20 இல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு ஏற்ப தேர்தலை நடத்தக் கூடிய உறுதிப்படுத்தக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்குரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று 19 இல் பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்படும் போது அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே பதவியிலிருப்பர். ஆனால் 20 இன் படி பிரதி அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களும் கூட பதவியைத் தொடர முடியும் என்றுள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
எனவே தான் 19 பிளஸிற்குச் செல்வது அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்துகின்றோம். தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்கின்றனரா என்பது கேள்விக்குரியாகும். தற்போது அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்துள்ளமையால் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயத்தில் செயற்பட வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சினைத் தவிர ஜனாதிபதியால் வேறெந்த அமைச்சுக்களையும் வகிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும்.
இருந்து போதிலும் பாதுகாப்பு அமைச்சையும் ஜனாதிபதியால் வகிக்க முடியாது என்ற திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமெனில் அதற்கு மக்களின் நிலைப்பாடு கோரப்பட வேண்டும். அது வரையில் இந்த முறைமை நடைமுறையிலிருக்க வேண்டும்.
அதே போன்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு நிறைவேற்றதிகார பிரதமர் முறைமை உருவாகி விடாமல் இருக்க வேண்டும் என்பதிலும் சகலரும் அவதானம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவை என்ற மூன்றும் பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவையாக இருக்க வேண்டும். குறிப்பாக 21 ஆவது திருத்தத்தில் அரச சேவைகளும் சுயாதீனமாக்கப்பட வேண்டும்.
அதிபர் ஆசிரியர் நியமனம் , பிரதேச செயலாளர்கள் நியமனம் மற்றும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியின் நியமனம் உள்ளிட்ட விடயங்களில் காணப்படும் அரசியல் தலையீடு இல்லாமலாக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ளதைப் போன்று , ஜனாதிபதியை பதவி நீக்கும் வழிமுறைகளும் இலகுவாக்கப்பட வேண்டும்.
அதாவது ஜனாதிபதியை பதவி நீக்குவதற்காக குற்றப்பிரேரணையொன்றை சமர்ப்பித்து அதன் பின்னர் காணப்படும் மிக நீண்ட வழிமுறைகள் நீக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு இலகுவாக ஜனாதிபதியை பதவி நீக்கக் கூடிய முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM