(நா.தனுஜா)
செலாவணி வீதம் குறித்த தற்போதைய ஏற்பாடு காலத்திற்குக்காலம் மீளாய்வுக்குட்படுத்தப்படுமெனவும், நாட்டிற்காக எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டுச்செலாவணி உட்பாய்ச்சல்களின் விளைவாக சந்தை நம்பிக்கை மீண்டவுடன் தேவையேற்படின் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மைக்கு இடமளிக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன் விளைவாக சென்மதி நிலுவை நெருக்கடியும் தோற்றம்பெற்றுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு செலாவணிச்சந்தையில் வெளிநாட்டு நாணயத்திரவத்தன்மை வீழ்ச்சியின் காரணமாக செலாவணி வீதத்தில் பாரியளவிலான தேய்வடைதல் தாக்கம் குறித்த கரிசனைகளுக்கு மத்தியில் சந்தை மட்டங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மார்ச் மாதமளவில் செலாவணிவீத நிர்ணயத்தில் அளவிடப்பட்டதொரு சீராக்கம் மேற்கொள்ளப்படவேண்டியதன் தேவை உணரப்பட்டது.
மிகையான தேய்மானத்தைத் தொடர்ந்து இறக்குமதிப்பொருட்களின் விலைகளின் மூலம் பணவீக்கம் அதிகரித்த நிலையில், அதனையடுத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான அத்தகைய மிகையான தேய்மானத்தின் இரண்டாம் சுற்றுத்தாக்கங்களும் அவதானிக்கப்பட்டன. மேலும் செலாவணி வீதத்தின் தொடர்ச்சியான தேய்மானத்துடன் இணைந்து உள்நாட்டு, வெளிநாட்டு செலாவணிசந்தையில் அந்நியச்செலாவணியின் கடுமையான பற்றாக்குறையின் காரணமாக வெளிநாட்டு நாணயத்தை வைத்திருப்போரின் மூலமான வெளிநாட்டுச்செலாவணி மாற்றல்கள் தாமதமடைந்ததுடன், இதற்கு மேலதிகமான தேய்மான எதிர்பார்க்கை மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தையில் வழங்கப்பட்ட உயர்ந்தளவிலான கட்டுப்பணம் என்பவற்றின் காரணமாக நாணயம் மேலதிக அழுத்தங்களுக்குள்ளானது.
அதேவேளை உத்தியோகபூர்வமற்ற சந்தையில் செலாவணி வீதத்திற்கான கேள்வி வங்கித்தொழில் முறைமைக்கு வெளியே இறக்குமதிக்கேள்வியை அதிகரிக்கின்ற நிதியினைப் பிரித்தெடுப்பதனை இலகுபடுத்தியமையானது நாணயத்தில் மேலதிக அழுத்தங்களையும், வங்கித்தொழில் முறைமையில் அதிகரித்தளவிலான அழுத்தங்களையும் ஏற்படுத்தியிருந்தது. நாணய வீதங்களின் குறிப்பிடத்தக்களவிலான தளம்பலானது வங்கிகளுக்கிடையிலான செலாவணி வீதங்கள், வாடிக்கையாளர் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்களை முறிவடையும் வகையில் உயர்மட்டத்திற்கு அதிகரிக்கச்செய்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் தேய்மானத்தின் அளவையும், மிகையான தளம்பலையும் வரையறைக்குட்படுத்துவதானது இன்றியமையாததாகியுள்ளது. நாடு தற்போது முகங்கொடுத்திருக்கின்ற சென்மதி நிலுவை நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு செலாவணிவீதத்தேய்மானத்தின் அத்தகைய வரம்பற்ற வீதமானது தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருந்திருந்தால், ஒட்டுமொத்த பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின்மீதும் கடுமையான பாதகமான தாக்கங்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடும்.
அரசாங்கமும் மத்திய வங்கியும் இணைந்து வெளிநாட்டுத்துறையில் அவதானிக்கப்பட்ட சில குறைபாடுகளைத் திருத்துவதற்குத் தற்போதைய செலாவணிவீத ஏற்பாட்டுடன் இணைந்ததாகப் பல்வேறு குறைநிரப்பு நடைமுறைகளை அமுல்படுத்தியதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டுச்செலாவணி சந்தையில் உறுதிப்பாடொன்றினை ஏற்படுத்தியுள்ளன. திறந்த கணக்கு மற்றும் பொருட்களுக்காக கொடுப்பனவு நியதிகள் என்பன மீதான வரையறைகள் உத்தியோகபூர்வமற்ற சந்தையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியுள்ளன. அதன்மூலம் அலுவல்சார் செலாவணி வீதம் மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தை வீதம் ஆகியவற்ற்றுக்கிடையிலான இடைவெளி சுருக்கமடைந்துள்ளது.
இந்நிலையில் இருதரப்பு மற்றும் பல்தரப்புப்பங்காளர்களுடனான நிதியிடல் பேச்சுவார்த்தைகளுடன் இணைந்ததாக நிதியிடல் ஏற்பாடு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான அலுவலர் மட்ட உடன்படிக்கையினை எட்டுவதிலுள்ள முன்னேற்றம் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. செலாவணி வீதம் குறித்த தற்போதைய ஏற்பாடு காலத்திற்குக்காலம் மீளாய்வுக்குட்படுத்தப்படுமெனவும், நாட்டிற்காக எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டுச்செலாவணி உட்பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு சந்தை நம்பிக்கை மீண்டவுடன் தேவையேற்படின் மேலும் நெகிழ்ச்சித்தன்மையொன்று அனுமதிக்கப்படுமென மீண்டு;ம சுட்டிக்காட்டுகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM