லண்டனில் மலையக இலக்கிய மாநாடு எதிர்வரும் 11ஆம் திகதி, சனிக்கிழமை விம்பம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் வாழ்த்து தெரிவிக்கையில்,
"தமிழ் இலக்கியம், ஈழத்தமிழ் இலக்கியம் என்னும் பெரும் பரப்பில் 'மலையக இலக்கியம்' என்றும் பேசப்படும் அளவுக்கு இம்மலையக மக்கள் பற்றிய எழுத்துகள் அழுத்தமாகவும் தனித்துவமானதாகவும் தன்னை நிலைநிறுத்தி வளர்கின்றது.
மலையகம் என்ற உணர்வுடனும் மலையக மக்கள் என்னும் உறவுடனும் மேற்கிளம்பிய இவ்வெழுத்துக்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்குமான வழிகாட்டிகளாக நின்றவர்கள், கைவிளக்குடன் வழித்துணையாக வந்தவர்கள் என்று அனைவரையும் இந்த மலையக இலக்கிய மாநாடு மதிக்கிறது; போற்றுகிறது; ஆய்வு செய்து அறிமுகப்படுத்தி வளரச் செய்கிறது என்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
பெருங்கடலில் சிறு துரும்பென மலையக இலக்கியத்துடன் நானும் மிதந்துள்ளேன் என்னும் நினைவுகளுடன் இந்த மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துவதிலும் பெருமகிழ்வு கொள்கின்றேன்.
தங்களுடைய ஆதிக்க விஸ்தரிப்புக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் உழைப்புச் சக்தியாக கூலிகளாக கூட்டிவந்த இம்மக்களின் சந்ததியினரை, ஒரு நூற்றைம்பது ஆண்டு காலத்தின் பின், அறுபதுகளின் பிற்பகுதியில் எதுவிதமான சட்டப் பாதுகாப்போ இருத்தலுக்கான உத்தரவாதமோ இல்லாமல் அநாதரவாக விட்டு ஓடிப்போன வெள்ளைக்காரர்களின் தேசத்துத் தலைநகர் லண்டனில் இம்மாநாடு நடைபெறுகிறது என்பது மகிழ்வைத் தருகிறது.
இந்த மக்களைப் போலவே இந்த மக்கள் பற்றிய எழுத்துகளும் இலக்கியமும் பெரும் அலைக்கழிப்புக்கும் அசட்டைகளுக்கும் அதிகார இலக்கிய அடக்குதல்களுக்கும் உள்ளாகிக் கிடந்த சூழலில் மலையக இலக்கியம் பற்றிய அறிமுகத்தையும் அதன் மீதான ஆர்வத்தையும் அது பற்றிய தேடல்களையும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திய பதுளை மு.நித்தியானந்தனின் செயற்பாடுகள் மிகப் பெரியவை; சாதனை மிக்கவை! யாழ் வைகறையூடாகத் தொடங்கிய மலையக இலக்கியப் பணிகளின் தொடர் செயற்பாடுகள் இவை.
நித்தியுடன் வைகறையில் இணைந்து லண்டன் வரை உடனிருந்து இயங்கும் ஓவியர் கே.கே.ராஜாவும் நன்றிக்குரியவரே.
மு.நித்தியானந்தனும் எச்.எச்.விக்ரமசிங்கவும் தொகுத்து வழங்கும் சி.வி.யின் 'மலையக அரசியல் தலைவர்கள்' என்னும் நூல் இந்த மாநாட்டில் வெளியிடப்படுகிறது என்பதும் மகிழ்வைத் தருகின்றது.
மறைந்த மலையக எழுத்தாளுமைகளின் அரங்குகள், நூல் வெளியீடு, இருபதுக்கும் மேற்பட்ட மலையக நூல்கள் பற்றிய ஆய்வுகள், விமர்சனங்கள் என மலையக இலக்கிய மாநாடு கலகலக்கப் போகிறது என்னும் நினைவே இம்மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறி அடிதொழ விழைகிறது" என கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM