பெண் ஒருவர் கர்ப்பந்தரித்து சிசுவைப் பிரசவிக்கும் காலம் வரையான 40 வாரங்களில் அவள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
ஆரம்ப கர்ப்பகாலம் தொடக்கம் இறுதி பிரசவ காலம்வரை அந்தந்தக் காலப்பகுதியில் ஏற்படும் உடல் மற்றும் உள உபாதைகளைப் பொறுத்து தாங்கி அவற்றுக்கான தீர்வுகளை வைத்திய ஆலோசனைகளைப் பெற்று ஆரோக்கியமான சிசுவொன்றை வெற்றிகரமாகப் பெற்றெடுக்கிறாள்.
இவ்வாறான கர்ப்பகாலத்தில் தற்போது அதிகமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை கர்ப்பகாலத்தில் ஏற்படும் குருதிக் கசிவுகளாகும். அதிலும் ஆரம்ப கர்ப்ப காலப் பகுதியான முதல் 28 வாரங்களுக்குள் ஏற்படும் குருதிக் கசிவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.
ஒரு பெண் கர்ப்பந்தரித்து அவளும் கணவனும் மற்றும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் தமது வாரிசை மிக மகிழ்வுடன் எதிர்நோக்கியிருக்கும் வேளையில் இவ்வாறான ஆரம்ப கர்ப்பகாலக் குருதிக் கசிவுகள் அவர்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்குகின்றன.
இவ்வாறான ஆரம்ப கர்ப்பகாலக் குருதிக் கசிவு பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் பெண்கள் நினைப்பது எதுவென்றால் கரு கலைந்து போவதற்கான (Miscarriage) ஒரு அறிகுறியே அதுவென,
ஆனால், இவ்வாறான குருதிக் கசிவெல்லாம் கரு கலைவதற்கான (Miscarriage) அறிகுறியல்ல என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆகவே இவ்வாறு ஆரம்ப கர்ப்பகாலத்திலேற்படும் குருதிக் கசிவிற்கான பல்வேறு காரணங்களையும் ஆராய்வோம்.
ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக் கசிவிற்கான காரணங்கள்:
* இயற்கையாக ஏற்படும் கருக்கலையும் நிலை (Miscarriage)
* கர்ப்பப்பைக்கு வெளியே கருதங்கும் நிலை (Ectopic Pregnancy)
* கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் நோய்கள் காரணமாக குருதிக் கசிவு
* கர்ப்பப்பையில் ஏற்படும் திராட்சைக் குலைக்கரு (Molar Pregnancy)
இயற்கையாக ஏற்படும்
கருக்கலையும் நிலை
கருத்தரித்துள்ள பெண் ஒருவரின் ஆரம்ப கர்ப்பகாலத்தில் இயற்கையாகவே குருதிக் கசிவு ஏற்பட்டு கரு கலைந்து போகின்றது. இந்த ஆரம்ப கர்ப்பகாலம் என்பது எமது நாட்டில் முதல் 28 வாரங்கள் என வரையறுக்கப்பட்டாலும் மேலை நாடுகளில் முதல் 24 வாரங்கள் என வரையறுத்துள்ளனர்.
இதற்குக் காரணம் 24 வாரங்களின் பின் சிசு ஒன்று பிரசவிக்கப்பட்டால் அச்சிசுவைக் காப்பாற்றி பராமரிக்கக் கூடிய வசதிகள் அந்நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எமது நாட்டிலுள்ள மருத்துவ வசதிகள் ஒரு சிசு 28 வாரங்களின் பின் பிரசவிக்கப்பட்டால் மட்டுமே அதனைக் காப்பாற்றப் போதுமானவையாக உள்ளன.
இயற்கையாக கரு கலைந்து போகும் நிலை பல்வேறு வகைகளாகக் காணப்படுகின்றன.
1) ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக் கசிவு ஏற்பட்டு எவ்வித வயிற்று வலியும் இல்லாது உள்ளே இருக்கும் கருவும் எவ்வித சிக்கலும் இல்லாது தொடர்ந்து ஆரோக்கியமாக வளரும். இதனை ஒரு அச்சுறுத்தும் குருதிக் கசிவு என வகைப்படுத்தலாம். இவ்வாறான குருதிக் கசிவுகள் ஏற்படும்போது கருவுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது பற்றி ஒரு ஸ்கேன் (Scan) பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறான நிலையில் சிசு ஆரோக்கியமாக இருப்பதுடன் மேலதிக சிகிச்சைகள் எதுவும் தேவை இல்லை. அத்துடன் கர்ப்ப காலத்தை எவ்வித சிக்கலுமின்றி தொடரக் கூடியதாகவும் இருக்கும்.
2) இரண்டாவது வகையில் கருவானது தாயின் வயிற்றினுள்ளேயே இறந்து அல்லது கலைந்து போயிருக்கும். பெரியளவில் வயிற்று வலியோ அல்லது குருதிக் கசிவோ ஏற்படாது. ஆனால் சாதாரண மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவரை நாடும் போது சாதாரண ஸ்கேன் பரிசோதனையில் இவ்வாறான நிலை கண்டறியப்படும். இங்கு கரு வளர்ச்சியுற்று வயிற்றினுள்ளேயே இறந்து போயிருக்கும். இதற்கு பெண்ணின் தவறோ அல்லது அவரது கணவரது தவறோ இல்லை எனும் விடயத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்குத் தேவையான ஆறுதலையும் ஆலோசனையையும் வழங்குவது எமது கடமை. இவர்களுக்கு அடுத்த முறை நிச்சயமாக சிறந்த கரு உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறான கருக்கலையும் நிலையை அமைதியான கருக்கலைவு (Silent Miscarriage) என அழைப்போம்.
3) மூன்றாவது வகையான கருக்கலையும் நிலை மிக முக்கியமான நிலை. இதன்போது அதிகூடிய வயிற்றுவலி மற்றும் குருதிப் போக்கு என்பவற்றுடன் அவசரமாக வைத்தியசாலைக்கு வருவார்கள். இதன்போது கரு கலைந்து சிறு சிறு துண்டுகளாகவும் இரத்தமாகவும் வெளியேறும். இந்நிலையில் இவர்களது வயிற்றுவலி மற்றும் குருதிப் போக்கிற்கு அவற்றை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்குவது அவசியம். இவ்வகையை Incomplete Miscarriage என அழைப்போம்.
4) சில வேளைகளில் கலைந்துபோன கரு துண்டுகளாக தாமாகவே இரத்தப் போக்குடன் வெளியேறி இறுதியில் மிகுதி எதுவும் கர்ப்பப் பையில் தங்காமல் பூரணமாக வெளியேறி விடும். இவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை.
இயற்கையாக கரு கலைந்து
போவதற்கான காரணங்கள்
இயற்கையாக கரு கலைந்து போதல் ஒரு பொதுவான பிரச்சினை. கர்ப்பந்தரித்த 5 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறு கர்ப்பம் கலைந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்குக் காரணமாக இருப்பது உருவான கருவின் நிற மூர்த்தங்களின் அதாவது பரம்பரை அலகுகளின் பலவீனமும் குறைபாடுமே ஆகும்.
இது சற்று வயது கூடிய பெண்களில் கருத்தரிக்கும் போது கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனைய காரணங்களாக நுண்ணுயிர்த் தொற்று கர்ப்பப்பையின் உட்கட்டமைப்புகளில் குறைபாடுகள், நீரிழிவு நோய், சில மருந்துப் பதார்த்தங்கள் என்பன அமையும்.
இவ்வாறு இயற்கையான கருக்கலைதலை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்:
இதற்கு ஸ்கேன் (Scan) பரிசோதனை மற்றும் குருதி வர்க்கப் பரிசோதனை என்பன அவசியம். ஒரு முறை கரு கலைந்தவர்களில் அதற்கான காரணத்தை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்வதில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கரு கலைந்தால் இதற்கான பின்னணி காரணிகளை கண்டறியும் விசேட இரத்த மற்றும் ஹோர்மோன் பரிசோதனைகள் அவசியம்.
இயற்கையான கரு கலைந்தவருக்குரிய தேவையான சிகிச்சைகள்:
கரு ஒன்று கலைந்துவிட்டதாகவோ அல்லது இறந்துவிட்டதாகவோ உறுதிப்படுத்திய பின்னர் இதற்கான சிகிச்சைகள் 3 வழிகளில் மேற்கொள்ளப்படும்.
* இவர்கள் இரு வாரங்களுக்கு எவ்வித சிகிச்சைகளும் இல்லாது காத்திருக்கும்போது உள்ளே உள்ள கலைந்துபோன கரு தானாகவே மாதவிடாய் போன்று இரத்தப் போக்குடன் வெளியேறக்கூடிய வாய்ப்புள்ளது. இவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் தேவையில்லை.
* அடுத்த சிகிச்சை முறை இவ்வாறு கரு கலைந்து போனவர்களுக்கு சிலவகை மருந்துகளை வழங்கி அவற்றை கர்ப்பப் பையிலிருந்து வெளியேற்ற முடியும். இம்முறையும் கூடுதலானவர்களுக்கு வெற்றியளிக்கும்.
* இறுதியாகவுள்ள சிகிச்சை முறை வயிறு கழுவுதல் எனப்படும். இது சத்திர சிகிச்சை முறையில் கலைந்துள்ள கருவின் பாகங்களை முற்றாக அகற்றுதல் ஆகும்.
இம்முறை ஒரு சத்திர சிகிச்சை முறையாக இருப்பதனால் இதனை இறுதித் தீர்வாக முன்வைப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM