(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் எமது ஒன்லைன் செய்தியில் ஏற்கனவே அனுமானித்தவாறு மொரகஸ்முல்லை, நியூ ஸ்டார், மாத்தறை சிட்டி ஆகியன தத்தமது ஆரம்பப் போட்டிகளில் வெற்றிகளைப் பதவு செய்தன.
கொரோனா தொற்றுநோய் காரணமாக மூன்று வருடங்களின் பின்னர் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் போட்டியில் இவ் வருடம் 4 புதிய அறிமுக அணிகள் உட்பட 14 அணிகள் பங்குபற்றுகின்றன.
மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் வீரர்கள் விளையாடுவதால் நேற்றைய போட்டிகளில் எதிர்பார்த்த விறுவிறுப்பு ஏற்படவில்லை. எனினும் தொடரும் போட்டிகளில் விறுவிறுப்பையும் பரபரப்பையும் எதிர்பார்க்கலாம் என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.
மொரகஸ்முல்லை இலகு வெற்றி
சுகததாச அரங்கிலிருந்து பெத்தகான செயற்கைத் தள மைதானத்துக்கு இடம் மாற்றப்பட்டு நடத்தப்பட்ட போட்டியில் இலங்கை போக்குவரத்துச் சபை அணியை 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் மொரகஸ்முல்லை இலகுவாக வெற்றிகொண்டது.
மொரகஸ்முல்லை அணியில் இடம்பெறும் முன்னாள் சோண்டர்ஸ் மற்றும் முன்னாள் தேசிய வீரர் எரந்த ப்ரசாத் இந்த வருடத்துக்கான சம்பின்ஸ் லீக்கில் முதலாவது கோலைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
பெத்தகான செயற்கை தளத்தில் பரிச்சயம் பெறாத மொரகஸ்முல்லை மற்றும் இ.போ.ச. வீரர்கள் மிகவும் கவனத்துடனும் நிதானத்துடனும் விளையாடியதை அவதானிக்க முடிந்தது.
போட்டியின் 10ஆவது நிமிடத்தில் திசர டி சில்வா, ஹன்ச கல்ஹார, எரந்த பிரசாத ஆகிய மூவருக்கு இடையில் இடம்பெற்ற பந்து பரிமாற்றம் மூலம் மொரகஸ்முல்லையின் முதலாவது கோலை எரந்த பிரசாத் புகுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் மொரகஸ்முல்லை 2 கோல் போடும் வாய்ப்புகளையும் இபோச ஒரு கோல் போடும் வாய்ப்பையும் தவறவிட்டன.
இடைவேளையின் பின்னர் போட்டியின் 67ஆவது நிமிடத்தில் திசர டி சில்வா பரிமாறிய பந்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட டிலான் மதுஷன்க இலகுவாக கோல்போட்டு மொரகஸ்முல்லையை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.
போட்டியின் உபாதையீடு நேரத்தில் (90+3 நி.) இ.போ.ச. கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்துக்கு மத்தியில் எரந்த ப்ரசாத் கோல் போட்டு மொரகஸ்முல்லையின் வெற்றியை (3 - 0) உறுதிசெய்தார்.
நியூ ஸ்டாரிடம் கிறிஸ்டல் பெலஸ் தோல்வி
குருநாகல், மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக அணி நியூ ஸ்டார் 2 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
கிறிஸ்டல் பெலஸ் அணியில் 3 ஆபிரிக்கர்கள் விளையாடியபோதிலும் அந்த அணியை விட மிகத் திறமையாக விளையாடிய சிரேஷ்ட வீரர் நதீக்க புஷ்பகுமார தலைமையிலான நியூ ஸ்டார் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதை நியூ ஸ்டார் நேற்றைய போட்டியில் நிரூபித்தது.
போட்டியின் முதலாவது பகுதியில் எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளையின் பின்னர் நியூ ஸ்டார் 2 கோல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.
நட்சத்திர வீரர் மொஹமத் அனாஸை கட்டுப்படுத்துவதில் கிறிஸ்டல் பெலஸ் கவனஞ்செலுத்த இளம் வீரர் கெலும் ப்ரியன்கரவைப் பயன்படுத்தி நியூ ஸ்டார் 2 கோல்களை (65 நி., 88 நி.) போட்டு வெற்றியீட்டியது.
மாத்தறை சிட்டிக்கு இறுக்கமான வெற்றி
மாத்தறை, கொட்டவில மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பியன்ஸ் லீக் போட்டியில் நிகம்போ யூத் கழகத்தை 2 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் மாத்தறை சிட்டி வெற்றிகொண்டது.
போட்டியின் 20ஆவது நிமிடத்தில் ஆபிரிக்கரான பொவாடு பிறின்ஸ் கோல் போட்டு மாத்தறை சிட்டியை முன்னிலையில் இட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சிகள் தடுக்கப்பட இடைவெளையின்போது மாத்தறை சிட்டி 1 - 0 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் திறமையாக விளையாடிய நிகம்போ யூத் 58ஆவது நிமிடத்தில் கமல் சில்வா மூலம் கோல் நிலையை சமப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து போட்டியில் சூடுபிடிக்க தொடங்கியது. இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன.
போட்டியின் 73ஆவது நிமிடத்தில் பொவாடு பிறின்ஸ் தனது 2ஆவது கோலை போட்டு மாத்தறை சிட்டியை வெற்றி பெறச் செய்தார்.
இன்று ஜாவா லேன் - பொலிஸ்
இன்று சனிக்கிழமை (04) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
அவற்றில் ஜாவா லேன் - பொலிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முக்கிய போட்டியாக அமையவுள்ளது. இப் போட்டி கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெறுவதாக உள்ளது.
இரண்டு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறுவதால் இப் போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாவா லேன் அணியின் தலைவராக மொஹமத் அலீம் நியமிக்கப்பட்டுள்ளதுடன் நவின் ஜூட் உதவித் தலைவராக செயற்படவுள்ளார். பொலிஸ் அணித் தலைவராக அமித் சாமிக்க குமார விளையாடுகிறார்.
குருநாகல், மாளிகாபிட்டி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள மற்றைய போட்டியில் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்தை பேருவளை சுப்பர் சன் கழகம் எதிர்த்தாடவுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளும் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM