குமார் சுகுணா
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ..
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
இந்த பாடலை கேட்கும் போது உருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இசை , வரிகள் என்பதனை தாண்டி பாடல்களுக்கு உயிர் கொடுப்பது குரல்கள் தான்.
சில குரல்கள் மகிழ்ச்சி ,துக்கம் ,கொண்டாட்டம் என எல்லா உணர்வுகளோடும் எம்மோடு பயணிக்கும். அந்த வகையில் 90 களில் பல்லாயிரக்கணக்கான இதயங்களை கவர்ந்த பாடகர்களில் கேகேயும் ஒருவர். பல பாடல்களை நமக்கு தன் குரல் மூலமாக உயிராக்கியவர்தான் கேகே.
கே.கே என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் தனது 53 ஆவது வயதில் காலமானார்.
இறக்க வேண்டிய வயதில்லை. ஆனால் மரணம் வயது பார்த்து யாரையு।ம் அழைக்காது. அதனால் அவரது பிரிவையும் நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கே.கே. டில்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் விளம்பர பாடல்களை பாடியுள்ளார்.
இவரின் குரல் வளத்தை கண்டறிந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் திரைப்படத்தில் "கல்லூரிச் சாலை" மற்றும் "ஹலோ டாக்டர்" , மின்சார கனவு திரைப்படத்தில் 'ஸ்டராபெர்ரி கண்ணே’, பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார். இவை தான் கே.கே. திரையில் பாடிய முதல் பாடல்களாக கருதப்படுகின்றன..
, தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார்.
1990 களின் பிற்பகுதியில் இருந்து மனம் கவர்ந்த பல தமிழ் திரைப்பட பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் கே.கே.
மின்சார கனவு திரைப்படத்தில் 'ஸ்டராபெர்ரி கண்ணே’, உயிரோடு உயிராக திரைப்படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்’, செல்லமே திரைப்படத்தில் 'காதலிக்கும் ஆசையில்லை’, காக்க காக்க திரைப்படத்தில் 'உயிரின் உயிரே’, 7ஜி ரெயின்போ காலனியில் 'நினைத்து நினைத்து பார்த்தேன்’, காவலன் திரைப்படத்தில் 'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது’, ஐயா திரைப்படத்தில் ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…மன்மதன் திரைப்படத்தில் 'காதல் வளர்த்தேன்’ உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்களுக்கு இவரின் குரலே உயிர் கொடுத்தது. மெல்லிசை காதல் பாடல் மட்டுமின்றி,
ரெட் திரைப்படத்தில் 'ஒல்லிகுச்சி உடம்புகாரி’, எம்.குமரன் சன் ஒப் மகாலட்சுமி திரைப்படத்தில் 'வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல’, அந்நியன் திரைப்படத்தில் 'அண்டங்காக்கா கொண்டக்காரி’, கில்லி படத்தில் ‘அப்படிப்போடு போடு’ என அதிரடியான காதல் பாடல்களும் கே.கே.வின் தனித்த குரலால் மேலும் அழகானது.
இவ்வாறு பல்லாயிர கணக்கான பாடல்களை பாடியுள்ள கேகே. 1999-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக வும் பாடல் பாடியுள்ளார்.
சுவாசிப்பதை போன்று பாடுவதை நேசித்த கே.கே., தனது இறுதி மூச்சு வரை பாடலை பாடியப்படி வாழ்ந்துள்ளார்
இவருக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடி கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் . சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல,நிகழ்ச்சியின் போது உடல்நலக் குறைபாட்டை உணர்ந்தவர், முடித்துவிட்டு தான் தங்கியிருந்த கிராண்ட் ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார்.
அதன் பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.இரவு 10:30-க்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.
கே.கேயின் மரணத்தை `இயற்கைக்கு மாறான மரணம்' என வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருவதாகவும் அவரது முகத்திலும் தலையிலும் காயங்கள் இருந்ததாகப் பொலிஸ் தரப்பில் சொல்லப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவரது மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
’என் உயிரின் உயிரே பிரிந்து விட்டதாக உணர்கிறேன்’ என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதே போன்று பல்வேறு தலைவர்களும், திரைபிரபலங்களும் பாடகர் கே. கே.-வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இரங்கல் பதிவில் “சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து இப்போது கே.கே! நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். வாழ்க்கை கணிக்க முடியாதது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே.” என்று தெரிவித்துள்ளார்.
ஏராளமான ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கே.கே.வின் பாடல்களை பதிவிட்டு, தங்களது சோகத்தை வெளிபடுத்தி வருகின்றனர். இவர் மறைந்தாலும் அவரது குரல் மூலமான பாடல்களால் நம்மோடு வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார்.
பேசிப்போன வார்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா....
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM