(நா.தனுஜா)
ஜனாதிபதி அமைச்சுப்பதவிகளைத் தன்னகத்தே வைத்திருப்பதற்கு அனுமதி வழங்காதிருத்தல், தேசிய முன்னுரிமை ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படுவதைக் கட்டாயமாக்கல் உள்ளிட்ட 5 யோசனைகளை அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்குவது குறித்துப் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி பிரதமருக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளை உள்ளடக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பில் நாட்டுமக்களின் அபிப்பிராயம் என்னவென்பதைக் கருத்திற்கொண்டு அரசியலமைப்புத்திருத்தச்சட்டமூலமொன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் தனிநபர் பிரேரணையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அது 'அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம்' என்ற பெயரில் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்தத் திருத்தத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்த்ததை மீண்டும் நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டுமே பிரதான யோசனைகளாக முன்வைக்கப்பட்டிருந்தன.
அத்திருத்தத்தின் மூலம் நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தப்படும்.
உங்களது தலைமையில் கடந்த மேமாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித்தலைவர் கூட்டத்தில் எம்மால் அறியத்தரப்பட்டவாறு, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களை நீக்கிவிட்டு 19 ஆவது திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவருவதற்கு எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான விடயதானங்கள், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 21 ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியிருக்காத நிலையில் அதனுடன் தொடர்புடைய சில விடயங்களை 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்குவது குறித்த யோசனைகளை முன்வைத்திருக்கின்றோம்.
அதன்படி ஜனாதிபதி தனக்குக்கீழ் அமைச்சுப்பதவிகளை வைத்திருக்கமுடியாது என்று 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்டவாறான விடயம், அதேபோன்று மீண்டும் உள்ளடக்கப்படவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றோம்.
அடுத்ததாக மத்திய வங்கி ஆளுநர் தவிர்ந்த நிதிச்சபையின் ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அரசியலமைப்புச்சபையினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிக்கப்படவேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பவேண்டும்.
மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்தல் மற்றும் அவற்றில் எதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானித்தல் ஆகியவற்றுக்காக தேசிய முன்னுரிமை ஆணைக்குழுவொன்றை சுயாதீன ஆணைக்குழுவாக ஸ்தாபிப்பதுடன், அதற்கான உறுப்பினர்கள் அரசியலமைப்புச்சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிக்கப்படவேண்டும்.
அடுத்ததாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் உள்ளிட்ட அரச பதவிகளை வகிக்கும் அனைவரும் அவர்களது சொத்து விபரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்குவதுடன் அதனை மீறுபவர்கள் அல்லது பொய்யான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை வழங்குவதற்கு அவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்படவேண்டும்.
கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடைமையாக்குவதை முன்னிறுத்தி, இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக அவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்ற 5 யோசனைகள் அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM